Monday, December 22, 2008

கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள்

பொதுவாக எந்த ஒரு விடயத்திலும் ஏகப் பிரதிநிதித்துவம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அதிலும் கலைகள், விளையாட்டுத்துறைகளில் ஏற்படுகின்ற ஏகப்பிரதிநிதித்துவம் அந்த துறைகளின் வளர்ச்சியை முற்றாக ஸ்தம்பிக்க செய்துவிடும் என்பது என் நம்பிக்கை. மேலும், ஏகப்பிரதிநிதித்துவம் எல்லா மாற்று முயற்சிகளையும் தன் ராட்சச கரங்களால் நசுக்கி விடுகின்றது என்பதும், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற நளவெண்பா காலத்து சொல்லாடலுடன் அந்த துறைகளை நிறுத்தி விடும் என்பதும் எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். ஒரு துறை இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்று அந்த துறையில் பலர் உச்ச கட்ட புகழுடன் / வெற்றிகளுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது எனது கருத்து.

கிரிகெட்டில் முடிசூடா மன்னர்களாக கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாறி மாறி திகழ்ந்த மேற்கிந்திய, அவுஸ்திரேலிய அணிகள் அடிக்கடி (முன்பு மேற்கிந்தியா இருந்தது, இப்போது அவுஸ்திரேலேயா மட்டுமே) எதிர் அணிகளால் சோதனைக்குள்ளாக்கப்படுவது கிரிக்கெட் ஆரோக்கியமான வளார்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. இந்தியாவுடன் டெஸ்ட் தொடரிலும், சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மும்முனை தொடரிலும், தற்போது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விகள் அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி என்பதாகவே கருதப்படவேண்டும். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற அளவில் இருந்த அணி அவுஸ்திரேலிய அணி. இதற்கு சரியான உதாரணம் 1994-95ல் நடைபெற்ற ஒரு ஒரு நாள் தொடர். ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டி தொடர் ஒன்று நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 3 / 4 போட்டிகளில் ஆடி இறுதி போட்டியில் நுழையும். 94-95ல் அவுஸ்திரேலியா இந்த தொடரில் இங்கிலாந்து, ஸிம்பாப்வே அணிகளுடன் நான்காவது அணியாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணியையும் (Australia – A) நுழைத்தது. இதில் எல்லார் புருவங்களும் உயரும்படி இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியாவுடன் மோத அவுஸ்திரேலிய இரண்டாவது அணி தெரிவானது. அதாவது, ஏற்கனவே டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரண்டு அணிகளைவிட வலிமையாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணி இருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலிய அணியின் தூண்களாக இருந்த மத்யூ ஹைடன், க்ரேக் ப்ளீவட், ரிக்கி பொண்டிங், மைக்கேள் பவான் போன்றவர்கள் அதன் இரண்டாவது அணியில் ஆடினார்கள். இந்த இறுதி போட்டி ஐ சி சி யால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் பின்னர் அவுஸ்திரேலியா இப்படியான முயற்சியையும் செய்யவில்லை. 1992ல் மேற்கிந்திய அணியின் மாபெரும் வீரர்களான ரிச்சர்ட்ஸ், மார்ஷல், க்ரீனிட்ஜ், டுஜோன் போன்றவர்கள் ஒரேயடியாக ஓய்வுபெற, அவுஸ்திரேலியா மெல்ல மெல்ல ஆதிக்கம் பெற்றது. அதே நேரம் ஷான் வார்ணின் வருகையும் அமைய, ஏற்கனவே வேகப்பந்து வீச்சில் புகழ்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி ஒரு முழுமையான அணியாக உருவெடுத்தது. ஒரு அணியில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஒரு சுழல் பந்து வீச்சாளார் தன்னும் இருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி. உலகில் அசைக்க முடியாத அணியாக மேற்கிந்தியா உருவெடுத்த 70களில் அவ்வணி தலைவர் க்ளைவ் லோயிட் “சந்திரசேகர் போன்ற ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டும் இருந்தால் எம்மை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. ஷான் வார்ணின் மாய விரல்களில் சிக்கி தவித்த பாட்ஸ்மன்களை பற்றி கதை கதையாக சொல்லலாம். ஒரு சுழல் பந்து வீச்சாளனின் எல்லா சாத்தியங்களையும் செய்து காட்டியவர் அவர். விக்கெட்களின் எண்ணிக்கையில் முரளி அவரை தாண்டி போனாலும், அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகளில் சுழல் பந்து கைகொடுக்காத மைதானங்களில் ஷான் வார்ண் பந்து வீசினார் என்பதை கவனித்து கொள்ளவேண்டும். அந்த நாட்களில் எல்லாம் பந்து எகிறும் அவுஸ்திரேலிய பிட்ச் என்றாலே பாட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனம்தான். மைதானத்தில் கரணமடித்தும், வழுக்கி சென்றும் அவர்கள் செய்யும் களத்தடுப்பை ஒரு அதிசயம் போலதான் மற்ற அணிகள் பார்த்துக்கொண்டிருந்தன.


இதன் பின்னர் தென்னாபிரிக்காவின் வருகையுடன் எல்லா அணியினரும் களத்தடுப்பிலும், பல்துறை ஆட்டக்காரர்களை அணியில் அதிகம் இணைப்பதிலும் கவனம் செலுத்த தொடங்க கிரிக்கெட் நவீனப்படுத்தப்பட்டது. பாட்ஸ்மன், பந்து வீச்சாளார் என்றில்லாமல் களத்தடுப்பு என்ற வகையிலும் வீரர்கள் ரசிக்கப்பட்டனர். பாட்டிங்கை பொறுத்தவரை ஒரு சராசரி வீரரான ரோட்ஸ் ஒரு நட்சத்திர வீரராக மதிக்கப்பட்டார். இந்திய அணி பல ஆட்டங்களில் ரொபின் சிங்கை சேர்த்துக்கொண்டது. தனது மெதுவான துடுப்பாட்டத்தை தாண்டியும் ரொஷன் மகனாம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சித்து, லக்‌ஷ்மண் போன்ற இந்திய வீரர்கள் அணியை விட்டு ஓரங்கட்டப்பட அவர்களின் மோசமான களத்தடுப்பும் உடல் தகுதியும் காரணாங்களாக காட்டப்பட்டன இதே சமயம் அணிகள் வேற்று நாட்டவரை சேர்ந்தவரை பயிற்றுவிப்பாளாராக கொண்டுவர தொடங்க, ஆசிய அணிவீரர்களுக்கு மற்ற அணிவீரர்களின் மனநிலை கற்றுத்தரப்பட்டது. இதே காலப்பகுதியில் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் உலகம் முழுவதும் ஏற்பட்ட ஆர்வம் இந்திய, இலங்கை அணி வீரர்களிலும் பிரதிபலித்தது. அவ்ஸ்திரேலிய, தென்னாபிரிக்க வீரர்கள் போல இவர்களும் வேகமான உடல் இயக்கங்கள் மூலம் களத்தடுப்பில் சில ஆச்சரியங்களை ஏற்படுத்தினர். முக்கியமாக டில்ஷான், முரளிதரன், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரய்னா, கைஃப் போன்றாவர்கள். உலகமயமாக்கல் என்கிற பலத்த கேள்விகளுக்குள்ளான ஒரு இயல்பினால் வந்த ஒரு சாதகமான நிலை எல்லா நாட்டு இளைஞர்களும் கிட்ட தட்ட ஒரே மனநிலைக்கு கொண்டுவரப்பட்டனர். எல்லாவற்றுடன் சமரசம் செய்துகொள்வது என்ற தென்னாசிய மனநிலையை விட்டு இளைஞர்கள் வெளிவந்து எதையும் ஒரு சவாலாக, போராட்ட மனப்பாங்குடன் எதிர்கொள்ள தொடங்க கிரிக்கெட்டின் தீர்மானிக்கப்பட்ட கூறுகள் அனைத்தும் ஒரே நாளில் தகர்ந்து போயின. ஃப்ளிண்டொஃப் உடன் சூடாக விவாதித்த பின்னர் யுவ்ராஜ் அடித்த ஆறு 6களும், அவுஸ்திரேலியாவில் வைத்து அவர்களுக்கு ஈடாக இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதும், ஆண்ட்ரே நெல்லை சுற்றி ஸ்ரீ சாந்த் ஆடிய ஆட்டமும், தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் தன் பந்து வீச்சால் மட்டும் எதிர்கொண்ட முரளியும், தமக்கு எதிராக செய்யப்பட்டது அநீதி என்றவுடன் உடனே இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இருந்து விலகிக் கொண்ட இன்ஸமாமும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.


அத்துடன் நேரடி ஒளிபரப்பும், பலகோண காமரா வசதியும் ஒவ்வொரு ஆட்டக்காரரதும் பலவீனங்களை அறிந்துகொள்ள பேருதவி செய்தன. இவற்றை செய்வதற்காகவே சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு பாட்ஸ்மன் வரும்போதும் அவனுக்கு எப்படியான வியூகம் அமைக்கப்படும் / அமைக்கப்படவேண்டும் என்பதை கடைக்கோடி ரசிகன் வரை தெரிந்துகொள்ளகூடியதான வாய்ப்புகளை தொழில்நுட்பம் செய்து தந்தது. இதனால் அணிகளுக்கிடையில் குறைந்தளவு தீர்மானிக்கப்பட்ட வித்தியாசங்களே அமைய பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் அந்த நாள் மோதல்களிலேயே தீர்மாணிக்கப்பட்டன.

அவுஸ்திரேலிய அணியில் கூட தற்போது கில்க்றைஸ்ட், ஷான் வார்ண், மக்ராத் என்ற மும்மூர்த்திகளின் ஓவை காரணம் காட்டலாம். ஆனால் மக் டேர்மட், மேர்வ் ஹ்யூஜ், அலன் போடர், மார்க் டெய்லர், மார்க் வா, ஸ்டீவ் வா போன்றாவர்களின் ஓய்வு அந்த அணியில் இந்தளாவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும், முன்னர் சொன்ன மூவரின் இடங்களில் ஷான் வார்ண் தவிர மற்ற இடங்களில் வந்தவர்கள் ஏற்கனவே திறமை நிரூபிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உண்மையான கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக ரசிப்பதற்கு அருமையான காலம் கனிந்துள்ளது.

9 comments:

கதியால் said...

உண்மைதான். காலத்திற்கு காலம் எல்லாம் மாறும் போது இதுவும் மாறத்தானே வேண்டும். மேற்கிந்தியா, ஆஸ்திரேலியா வசமிருந்த கிரிக்கெட் இந்தியா கைக்கு மாறும் காலம். ஆனால் எப்பவும் போல பொறுத்த நேரத்தில் சொதப்பும் இந்தியர்கள் இந்த முறை என்ன செய்வார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியடைய இது நல்ல சந்தர்ப்பம்.

உங்கள் பதிவு அருமை. எல்லாக்காலங்களையும் தொட்டு தொட்டு காட்டினீர்கள். நன்றி. தொடரட்டும் விளையாட்டுக்கள் மீதான பதிவும் பார்வையும்.

அருண்மொழிவர்மன் said...

//பொறுத்த நேரத்தில் சொதப்பும் இந்தியர்கள் இந்த முறை என்ன செய்வார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்//

இந்திய அணி பற்றிய சரியான கருத்து. இந்தியா தவிர தென்னாபிரிக்காவும் முழு பலத்துடன் வீரியம் பெறுவதாக நினைக்கின்றேன்

Anonymous said...

இது ஆஸ்திரேலியாவின் சோதனைக்காலம். மிக விரைவில் அவர்கள் முழு பலத்துடன் திரும்ப வருவார்கள். அப்போது பார்க்கலாம்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் அனானி,

அவுஸ்திரேலியாவின் தோல்விய குறித்த எக்காளம் அல்ல இந்தப் பதிவு. அவுஸ்திரேலியாவின் எல்லா வெற்றிஅளின் பின்னலும் அவர்களின் கடின உழைப்பு மறைந்திருந்ததை மறக்ககூடாது. ஆனால், இப்போது போட்டிகள் மிகுந்த சவால் கொண்டவையாக மாறிவிட்டன என்பதே இந்த பத்தியின் சாரம்

நட்புடன் ஜமால் said...

\\அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி \\

நல்ல பார்வை ...

அருண்மொழிவர்மன் said...

jamaal, வருகைக்கு நன்றிகள்

Anonymous said...

அவுஸ்திரேலிய அணியைவிட தென்னாபிரிக்க அணி நல்ல திறமை இருந்தும் அதிர்ஸ்டம் இல்லாதவர்கள். அதனால் நிறைய போட்டிகளில் தோற்றார்கள்

K. Kumar said...

i read ur article only today and south africans beat australia again. if everything continued in the same way south africa or india will become number one in test team ranking

முரளிகண்ணன் said...

super analysis

Post a Comment