Tuesday, March 30, 2010

தாயகக் கனவுகள் -அருண்மொழிவர்மன்

சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால், புத்தகத்தை ஒரே மூச்சிலேயே வாசித்து முடித்தேன். செக் நாட்டில் இருந்து பிரான்ஸில் புகலிடம் பெற்றிருந்தவர்கள், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தம் சொந்த நாடான செக் செல்லும்போது அவர்கள் வாழ்ந்த செக் நாட்டிற்கும், அவர்கள் கற்பனையில் இருந்த செக் நாட்டிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் - நிஜத்தில் அவர்கள் காணும், உணரும் செக் நாடு மற்றும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை சரியாகப் பதிந்துள்ளார் மிலன் குந்த்ரோ. மொழி பெயர்ப்பில் பயன்படுத்தப்பட்ட சொற்களும், நடையும் நாவலை அணுகுவதில் ஏற்படுத்தியிருந்த சிறு தடைகளையும் மீறி உணர்வு ரீதியாக அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.

பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னரான இலங்கைப் பயணம். பதின்மங்களின் இறுதிப் பகுதியில் ஈழத்தை விட்டுப் புறப்பட்ட நான், முப்பதை அண்மித்த வயதில் மீண்டும் ஈழம் நுழைகிறேன். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்ச்சியாக தொலைபேசி மூலமும், கடிதங்கள் மூலமும் தொடர்புகளைப் பேணி வந்தது ஈழத்துடனான என் உறவுகளை தொடர்ந்து உயிர்ப்புடனேயே வைத்திருந்த்து. தவிர, தாயகம் மீண்டு இயல்பான வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அதிகம் இருந்தது. புலம் பெயர்ந்து கனடா வந்த ஆரம்ப நாட்களில் எதிர்காலத்தில் ஈழம் திரும்பி வாழ வேண்டும், அதற்குரிய தகைமையுடன் இருக்கவேண்டும் என்கிற கவனத்துடனேயே கனடாவில் மேற்படிப்பு முதற்கொண்டு, நிறைய விடயங்களைத் தீர்மாணித்துக்கொண்டேன். அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்து என்கிற நிலையைத் தாண்டி குடியுரிமை தொடர்பான எந்த ஒரு அடியையும் கூட கடந்த பன்னிரண்டு வருடங்களில் எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கனேடிய குடியுரிமை பெறுவது என்பதை ஈழத்துடனான என் எல்லா உறவுகளையும் அறுத்துக் கொள்வது என்றே அர்த்தப்படுத்தி இருந்தேன். அதுவேதான் உண்மையாகக் கூட இருந்த்து. ஈழத்தில் நான் வாழ்ந்த தெருக்களும், பழகிய மனிதர்களும், நினைவுகளும் என் கனேடிய வாழ்க்கைக்கு சமாந்தரமான ஒரு கனவுலகில் எப்போதும் என்னுடன் பயணித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் நிஜத்தின் வெம்மை ஒரு போதும் கனவில் இருப்பதில்லை என்பதை முகத்தில் அறைந்து உறுதிப்படுத்தியது எனது இலங்கைப் பயணம். எந்த ஒரு காரணத்துக்காகவும் சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அந்த நாட்டைப் பொறுத்தவரை அன்னியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். இன்னும் சற்று அழுத்தமாகச் சொல்லப்போனால் “மாயமீட்சியில்” மிலன் குந்த்ரோவ் சொல்வது போல தாயகத்தை விட்டுப் பிரிந்து போனவர்களை தாயகத்தில் உள்ளோர் இறந்து போனவர்களாகவே பார்க்கின்றனர். அல்லது அப்படிப் பார்க்காவிட்டாலும், தாயகம் பற்றியும், தாயகத்தில் உள்ளோர் தன்னை எப்படி எப்படி எதிர்கொள்வார்கள் என்ற மிகு கற்பனைகளுடனும் தாயகம் செல்பவர்களுக்கு அப்படியே தோன்றுகிறது. இங்கே ஒன்றை தெளிவாகவே சொல்லியாக வேண்டும். தாயகத்தை விட்டு வெளியேறியது முதல் மீண்டும் ஈழம் திரும்பும் நாள்வரை என் பார்வையிலும், கருத்துகளிலும், குணவியல்புகளிலும் நிச்சயம் பெரிய மாற்றங்கள் இருக்கவே செய்கின்றன. நாட்டை விட்டுப் போனவன் அப்படியே திரும்பிவருவான் என்று அங்கிருப்போர் எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதை ஒத்த முட்டாள தனம்தானே, நான் விட்டு வந்த நாள் முதல் தாயகமும் அங்கிருக்கும் உறவுகளும் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும். மாற்றங்கள் நாளாந்தம் நடந்து கொண்டே இருக்கின்றன. நாளும் பார்ப்பவனுக்கு மாற்றங்கள் தெரிவதில்லை. இடைவெளி விட்டுப் பார்ப்பவனுக்கே மாற்றங்கள் மலை போல தெரிகின்றன. என் பதின்ம வயதில் நானும் நண்பன் குணாளனும் ஒரு முடிவெடுத்தோம். ஒரு கன்றுக் குட்டியை அது குட்டியாக இருக்கும்போதிருந்து தினமும் தூக்கிவந்தால், அது பசுவாக அல்லது மாடாக வளர்ந்த பின்னரும் இலகுவாக தூக்கலாம் என்று. அதன்படியே செய்தும் வந்தோம். பின்னர் காலம் தூக்கி எறிய அவன் கொழும்பிலும் நான் கனடாவிலுமாக தெறித்து விழுந்தோம். அந்தப் பசு எங்கேயோ இருக்கலாம். ஆனால் இப்போது அதைக் கண்டாலும் எம்மால் அதைத் தூக்க முடியாது. இடையில் விட்ட காலம் அப்படி. அது போலவேதான் நாம் விலகி இருந்த தாயகத்தை மீண்டும் சென்று பார்க்கும்போது அது ஒரு போதும் “நாம் பார்த்த தாயகமாக” இருப்பதில்லை.

ஈழத்தில் இருந்து கனடா திரும்பிய பின்னர் பலரும் “அங்க அப்படி இருக்குது” என்று கேட்டபோதெல்லாம், “இங்கே சொல்வது போல அங்கே இல்லை..” என்ற தொடக்கத்துடன் தொடங்கி, என்னால் இயன்றவரை அங்கே நான் கண்ட நிலையினை தெளிவாகவே சொன்னேன். “இங்கே சொல்வது போல அங்கே இல்லை” என்பதன் அர்த்தம் அங்கே எல்லாம் ஒழுங்காக இருக்கின்றது என்பதல்ல. முதலில், மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம் என்கிற ரீதியில் இப்போது அங்கே இருக்கும் நிலையை அணுகினால், ஈழத்தில், சிங்களவர்களோ, தமிழர்களோ அல்லது முஸ்லீம்களோ வாழும் எந்தப் பிரதேசத்திலும், ஏன் சிங்கள அரசாங்கத்தாலோ அல்லது தமிழ்க் குழுக்களாலோ ஆளப்பட்ட எல்லாப் பிரதேசங்களிலும் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் காலவதியாகி எனக்குத் தெரிந்து 25 ஆண்டுகளாகிவிட்டன. ஈழத்தில் இருக்கும் இன்றைய மிக முக்கிய பிரச்சனையாக அதை மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை விட்ட மிக அண்மைக் காலத்தில் உருவான கட்டுப் படுத்த முடியாத விலை உயர்வுகள் கண்மூடித்தனமாக பிரயோகிக்கப்படும் குடும்ப அதிகாரம் (ராஜபக்சே குடும்பம் – இந்த ஒரு விடயத்திலாவது ஒரு தமிழரை – கருணாநிதியை- பின்பற்றுகிறார்கள்) போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து பேசப்படவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை அதன் தற்போதைய விலைவாசியில், வெளிநாட்டு வருமானம் எதிலும் தங்கியிராத ஒருவர் (இலங்கையில் வாழும் பெரும் பணக்கார்ர்கள் மற்றும் தொழிலதிபர்களைத் தவிர்த்து) தன் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறவேற்றுவது சிரமம் என்ற நிலையே அங்கே நிலவுகிறது. அதிலும் பெரும் பாலும் நகர்ப் புறங்களில். இலங்கையில் விலைவாசி அதிகம் உச்சத்தில் இருக்கும் இடம் என்ற பெயரை இப்போது வெள்ளவத்தை கைப்பற்றி உள்ளது. வெள்ளவத்தையில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரமே இருக்கக் கூடிய புறக்கோட்டை மற்றும் தெஹிவளை பகுதிகளில் விற்கப்படும் விலைகளை விட ஒன்றரை அல்லது இரண்டு மடங்கு விலையில் வெள்ளவத்தையில் பொருட்கள் விற்கப்படுகின்றன. அதே நேரம், வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இருக்கும் அதிக விலை கொடுத்தும் வாங்க்க் கூடிய ஆற்றல் காரணமாக பொருட்கள் அதிகம் தரமானதாக இருக்கின்றன.

இலங்கையில் வெளிப்படையாக்க் கவனித்த இன்னொரு விடயம் அங்கே பரவி இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளும், அந்த முதலீடுகளின் போர்வையிலான தலையீடுகளும். அதிலும் குறிப்பாக சீனத் தலையீடுகள். தெஹிவளைக்கு அண்மையிலான மேம்பாலங்கள், அம்பாந்தோட்டையில் 100 கோடி முதலீடு, கொழும்பில் கட்டபட்டுவரும் “சீனக் கலாசார நிலையம்”, இது தவிர இலங்கைக்கு எதிராக சர்வதேச அமைப்புகளில் சுமத்தப்படும் குற்றச்சாற்றுகளில் இருந்து எப்போதும் இலங்கையைக் காக்கும் ஆதரவுக்கரம் என்று சீனத் தலையீடு நீண்டு கொண்டே செல்கின்றது. அதே நேரம் இலங்கையின் எல்லாவிதமான அராஜகங்களுக்கும் ஆதரவாக மட்டுமன்றி, ஓரளவு பங்காளியாகக்கூட இந்தியாவின் பங்களிப்பு தொடர்கிறது. மறு புறம் சீனாவின் நட்பு நாடுகளான இரானும், ரஷ்யாவும் கூட அண்மைக்காலமாக இலங்கையின் ஆதரவாளார்களாக நெருங்கி வருகின்றனர். இந்த நாடுகள் இலங்கைக்கு காட்டும் அத்தனை ஆதரவுமே இந்து சமுத்திரத்தில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தவிர்ந்த வேறு ஒன்றுமே இல்லை. தவிர சீனா, ரஷ்யா, இரான், இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனையுடன் தனது நிகழ்ச்சி நிரலை அண்மைக்காலமாகத் தயாரித்துவரும் இலங்கை, எதிர்காலங்களில் இந்த நாடுகள் மாற்றுக் கருத்தாளர்களையும், அரசின் மீது விமர்சன்ங்களை முன்வைத்தவர்களையும் எப்படி ஒடுக்கின என்பதையும், அவர்களை எப்படி நரவேட்டை ஆடின என்பதையும் தனக்கான முன் மாதிரியாக எடுக்காது என்பது என்ன நிச்சயம். இந்த அந்நியத் தலையீடுகள் பற்றி விமர்சன்ங்களை முன்வைக்கும் தமிழ் அறிவுஜீவிகள் கூட தம் அரசியல் சார்பு நிலைகளால் தொடர்ந்து சில விடயங்களில் கள்ள மௌனம் சாதித்தே வருகின்றனர். உதாரணமாக கம்யூனிஸ்டுகள்/மார்க்ஸியவாதிகள் செய்யும் விமர்சனங்களில் எப்போதும் இந்தியத் தலையீடுகள் பற்றியும், இந்தியப் பேரினவாதம் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாற்றுகளை முன்வைத்து இறுதியில் உலகத் தொழிலாளரே ஒன்று படுவீர் என்கிற பழைய கோஷங்களுடன் முடித்துவிடுவார்கள். அது போல இந்திய அனுதாபிகளும், நலன் விரும்பிகளும், இந்தியா என்று சொன்னாலே புல்லரித்துப்போபவர்களும் சீனாவே இறுதிப் போரை நடத்தியது என்றும், ராஜீவ் காந்தி படுகொலை மட்டும் நடந்திராவிட்டால் இந்தியா தாம்பாளத் தட்டில் வைத்து தமிழீழத்தைத் தந்திருக்கும் என்றும் கவலைப் பட்டுக் கொள்வார்கள். இது போன்ற எத்து வாதங்களே எம்மை ஒரு போதும் அடுத்த கட்டம் நோக்கி சிந்தியாமல் தேக்கி வைத்திருக்கின்றன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். கொழும்பில் பல உணவகங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் சீனர்களைத் தொடர்ந்து பார்த்தபோது இலங்கையுடனான சீன உறவுகள் அதிகம் நெருங்கி வருவது வெளிப்படையாகவே தெரிந்தது. சீனா போன்ற, தனி மனித சுதந்திரம் ஒடுக்கப்பட்ட சர்வாதிகாரத் தன்மை வாய்ந்த ஒரு அரசுடன் இலங்கையின் ஆளும் கட்சி நெருக்கம் காட்டி வருவது நிச்சயம் இலங்கையில் வாழும் சிறு பான்மையினருக்கு பாதகமான ஒரு அம்சமே.

இலங்கைக் குளிர்பானங்கள் என்றாலே யானை மார்க் சோடாக்கள்தானே ஞாபகம் வரும். ஆனால் இலங்கையில் நிலைமையைப் பார்த்தபோது இன்னும் கொஞ்ச நாளிலேயே யானை மார்க்குக்கும் மூடு விழா நடந்து விடும்போலத்தான் தெரிந்த்து. அனேகமாக எல்லா சில்லறை வியாபாரக் கடைகளின் பெயர்பலகைகளும் கொக்கோ கோலாவின் உபயத்தில் இருக்க, கொக்கோ கோலா என்கிற பெரிய எழுத்துக்களின் மத்தியில் இருந்து கொண்டு சங்ககாரவும், ஜெயவர்த்தனேயும் கோக் குடிக்கிறார்கள். மத்தியில் கடையின் பெயர்ப் பலகையும் இருக்கின்றது. முன்பு அனேகமாக எல்லாக் கடைகளிலும் இருந்த யானை மார்க் குளிர்பான விளம்பரங்களை இப்பொது அனேகமாகக் காணமுடிவதில்லை. கொழும்பில் இருந்த நாட்களில் மாலை நேரங்களில் அதுவும் 96 காலப் பகுதிகளில் வெள்ளவத்தை கடற்கரையோரமாக பம்பலப்பிட்ட்யில் இருந்து ராமகிருஷ்ணா வீதி வரை நடந்து வருவோம். இப்போது அது உயர்பாதுகாப்பு வலயமாம். மாலை ஆறு மணியின் பின்னர் அங்கே நடமாடமுடியாதாம். ஆனால் கடற்கரையோரமாக இரண்டு கிளைகளுடனும், அது தவிர வெள்ளவத்த, பம்பலப்பிட்டி பகுதிகளில் பல கிளைகளுடனும் MB என்ற எழுத்துக்களைத் தாங்கி “மேரி ப்ரௌன்” உணவகங்கள் வரிசையாக இருக்கின்றன. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு வகையான உணவை சந்தைப்படுத்துகிறார்கள். எளிமையாக்வும், சுத்தம் மற்றும் சுவையாகவும் இருக்கின்றன உணவுகள். அதே நேரம் கொழும்பில் நான் இருந்த காலங்களில் அதிகம் போய் வந்த கிறீன்லாண்ட்ஸ் போன்ற உணவகங்களில் உணவை ருசிக்கவே முடியவில்லை. இன்னும் உண்மையாகச் சொல்லப்போனால் கொழும்பில் நான் இருந்த காலங்களில் நான் சாப்பிட்ட உணவுகளில் சுவையே இல்லாதது என்றால் கிறீன்லாண்ட்ஸ் சாப்பாடுதான். அதே நேரத்தில் நிறைய துரித உணவகங்கள் விற்பனையை வெகுவாகக் கைப்பற்றி இருக்கின்றன என்றே சொல்லவேண்டும். குறிப்பாக KFC. இலங்கையில் இருக்கின்ற KFCகளில் புரியாணியும், கொத்துரொட்டியும் கூட விற்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தமது பலமான விளம்பரங்கள் மற்றும் வியாபார அணுகுமுறைகள் ஊடாக வியாபாரத்தைக் குறி வைக்கின்றபோது அவற்றிற்கு ஈடு கொடுத்து உள்ளூர் நிறுவனங்கள் செயற்பட முடியாத நிலையே தொடர்கின்றது. முன்பெல்லாம் கொழும்பில் தாராளமாகக் காணக்கிடைக்கும் elephant house ஐஸ்கிறீம் கடைகளைக் கூட இப்போது காணக் கிடைப்பதில்லை. அண்மையில் கூட ஒரு பதிவர், வடக்கு கிழக்கிற்கு இலங்கையின் மற்றைய பகுதிகளில் இருந்து குளிர் பான்ங்கள் கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்ப்ட்டிருந்தபோது பரவலாக விற்கப்பட்ட அர்ச்சயா மற்றும் புத்தூக்கி போன்ற குளிர்பான தயாரிப்புகள் பின்பு காணாமலே போய்விட்டன என்று எழுதி இருந்தார். (அதற்கு அரசியல் காரணங்கள் கூட காரணிகளாக இருக்கலாம்).

இலங்கை செல்லவேண்டும் என்ற கனவுகள் இலங்கை சென்று திரும்பியபின்னரும் கூட கனவாகவே தொடர்கின்றன. இலங்கை சென்றேன். நிறைய இடங்கள் பார்த்தேன். நிறைய அனுபவங்களைப் பெற்றேன். ஆனால் எதுவும் நான் நினைத்த இலங்கையாக இல்லவே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், ஈழத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதில் முக்கியமான ஒரு பார்வையை அனேகமாக எல்லாரும் தவற விட்டே இருந்தார்கள். பட்த்தில் வரும் அந்தக் குழந்தை தன் தாயிடம் போகவேண்டும், தாயிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்கிற பெரும் ஏக்கத்துடனேயே தாயகம் செல்கின்றது. தடைகளைத் தாண்டி தாயையும் சந்திக்கிறது. ஆனால் அப்படி சந்திக்கிறபோது தாயாலும் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது, குழந்தை தாயிடம் கேட்கின்ற கேள்விகளுக்குக் கூட தாயிடம் விடை இல்லாமல் இருக்கின்றது, கடைசியில், தனது அடையாளம் தெரிந்த்து முதல் தன்னால் இயல்பாக ஏற்றுக் கொள்ளவே முடியாமல் இருந்த வளர்ப்புப் பெர்ற்றோரிடமே குழந்தை திரும்பும்படி ஆகி விடுகின்ற்து. தாயகம் பற்றிய அதீத கற்பனைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் தாயகம் செல்பவர்கள் கூட கடைசியில் இப்படித்தான் தாயகத்துடன் ஒட்ட முடியாமல் புகலிடத்துக்கே தூக்கி எறியப்படுகிறார்கள் போலும்.

வைகறை மார்ச் 2010க்காக எழுதப்பட்டது



Tuesday, March 9, 2010

சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”


நித்தியானந்தர் பற்றி எழுதாமல் வலைப்பதிவே எழுத முடியாது என்பது போல எல்லாப் பக்கம் இருந்தும் நித்தியானந்தர் பற்றிய கட்டுரைகளே குவிகின்றன. எரிகிற கொள்ளியில் பிடுங்கினவரை லாபம் என்பது போல சன்னும், நக்கீரனும் தொடக்கி வைத்த இந்த வியாபாரத்தில் இப்போது எல்லாத் தரப்பாருமே குதித்துள்ளனர். ஒரு கள்ளனைக் காட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல கள்ளர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். நான் இப்படி எழுதுகிறேன் என்றவுடன் நான் ஏதோ நித்தியானந்தருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்கவேண்டாம். நித்தியானந்தர் மட்டுமல்ல எந்த நவீன சாமியார் மீதும் நான் நம்பிக்கை வைப்பது கிடையாது. ஏன் நம்பிக்கை வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக சதுர்வேதி, ஜெயேந்திரர், விஜயேந்திரர், பிரேமானந்தா என்ற மிக நீண்ட வரலாறு கண் முன்னே விரிகின்றது. தவிர, இந்த சாமியார்கள் மீண்டும் மீண்டும் நிறுவ முயல்வதெல்லாம் மிக மோசமான ஆணாதிகத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் தவிர வேறு எதையுமே அல்ல.


விகடன், குமுதம் என்ற என்ற இரண்டு ஊடக வியாபாரிகளும் முன்னெடுத்து விட்டவர்களே சுக போதானந்தாக்களும், ஜக்கிகளும், நித்திகளும். உண்மையில் 80 களில் பி.சி. கணேசன், எம். எஸ். உதயமூர்த்தி என்ற இரண்டு சுய நம்பிக்கை எழுத்தாளர்கள் எழுதியதன் தொடர்ச்சியாகவே இவர்கள் எழுதிய கட்டுரைகள் பார்க்கப் படவேண்டியவை. ஓரளவுக்கு இவர்கள் எழுதிய கட்டுரைகளை மனோ தத்துவக் கட்டுரைகள் என்று பாகுபடுத்திக்கொள்ளலாம். துரதிஸ்ட வசமாக சாரு நிவேதிதா அந்தக் காலப் பகுதிகளில் லத்தீன் இலக்கியங்கள் படிப்பதிலும், உத்தமத் தமிழ் எழுத்தாளர் 1 பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவதிலும் பிஸியாக இருந்ததால் அவரால் எம். எஸ் மற்றும் பி.சியின் கட்டுரைகளைப் படிக்க முடியாமல் போய்விட்டது. உத்தம தமிழ் எழுத்தாளர் 1 இறந்து, உத்தம தமிழ் எழுத்தாளர் 2 பற்றி சாரு எழுதாமலே எல்லாருக்கும் தெரிந்து விட்ட காலப்பகுதிகளில், லத்தீன் இலக்கியங்கள் எல்லாம் சாருவால் ஏற்கனவே படித்து முடிக்கப்பட்டதாலும், தொடர்ந்து ஃப்ரான்ஸ் செல்ல ஏதோ காரணங்களால் அழைப்பு வராததாலும் சாரு மெல்ல தமிழில் வாசிக்கத் தொடங்கியபோது அவர் வாசித்த கதவைத்திற காற்று வரட்டும் வகையறாக்கள் அவரை அதிகம் கவர்ந்திருக்கலாம். (கதவைத் திற காற்று வரட்டுமின் எழுத்தாக்கம் வலம்புரி ஜானால் செய்யப்பட்டது என்ற பதிவர் ஒருவர் குறிப்பிட்ட ஞாபகம், பெயர் மறந்து விட்டது). ஆனால் சாரு ஏற்கனவே பாபாவிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் தாண்டி நேரடியாக நித்தியானந்தரின் பிரசாரகராகவே மாறினார்.


உண்மையில் சாரு இந்தக் காலப் பகுதிகளில் எழுதிய அனேக பத்திகளும் கட்டுரைகளும் வெறும் பித்தலாட்டம் மட்டுமே. நித்தியானந்தர் புற்று நோயைக் கூடு விட்டு கூடு பாய்ந்து குணப்படுத்தினார் என்பது தொடங்கி தனது புத்தகங்களின் விற்பனை நித்தியானந்தரின் சீடராகவோ / பக்தராகவோ மாறிய பின்னர் எவ்வாறு கூடியது என்பது வரை அவர் உளறியதை நினைத்தால் அவரின் எந்த ஒரு தீவிரமான வாசகனுக்கும் கூட வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது நித்தியானந்தரின் வீடியோ சர்சைகளின் பின்னர் திடீரென்று பல்டி அடித்து நித்தியானந்தர் பற்றி தான் முன்னரே அறிந்து தான் மெல்ல மெல்ல அவரை விட்டு விலகியதாகவும், அவர் தனக்கு காய்ச்சல் வந்திருந்தும் கூட தன் மனைவி அவந்திகாவை ஆசிரமத்தை விட்டு விலகாமல் “அய்யாவுக்கு சுகமாகி விடும்” என்று கூறினார் நித்தியானந்தர் என்றும் இப்போதும் கூறும் சாரு, முன்னர் உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் சர்வர்ரோக நிவாரணி போன்று நித்தியானந்தரை முன் மொழிந்ததை இட்டு இது வரை எந்த வருத்தத்தையும் வெளியிடவில்லை. இப்போது, தான் ரிப்போர்ட்டரில் நித்தி பற்றி எழுதவிருப்பதாக அறிவிப்பு விடுகிறார். ஏதோ நித்தியின் அருளால் சாருவுக்கும் குமுதத்துக்கும் இடையில் இருந்த முறுகல் சரியாகிவிட்டது போல தோன்றுகின்றது. (சில வேளை அதற்காகக்த்தான் நித்தி இப்படி வீடியோ வரை போனாரோ தெரியாது).


நித்தியானந்தர் பற்றி முன்னர் ஒரு ஒரு வாசகர் தனக்கு மெயில் அனுப்பியதாகவும், அதை ஒரு மகான் மீது செய்யப்படு அவதூறு என்றெண்ணி அழித்து விட்டதாகவும் இப்போது கூறி, அந்த வாசகரை அதே மெயில்களை மறுபடி அனுப்பச் சொல்லுகிறார். தனது வாசகர்களுக்கு நித்தியானந்தரை முன் மொழியும் முன்னர் ஒருமுறையேனும் இது பற்றி யோசித்துப் பார்த்திருக்கலாம் தானே?. தான் வள்ளலாருடன் பழகினால் வள்ளலார் கூட கத்தியெடுத்து தன்னைக் குத்த வந்து விடுவார் என்று சுய இரக்கம் தோன்ற பேசிகின்ற சாரு, தான் அப்படிக் கொண்டாடி மற்றவர்களுக்கு பிரேரிப்பவர்களை தானே ஒரு குறுகிய காலத்தின் பின்னர் திட்டித் தீர்ப்பதில் இருந்தாவது மனிதர்கள் பற்றி தான் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு தூரம் நிலை இல்லாதன என்று ஒரு முறை ஏனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா?. முன்னர் தன் வாரிசு என்று இவரே சொன்ன வா. மு. கோமு முதல், கனிமொழி, நித்தியானந்தர், பாபா, நாகார்ஜூன் என்ற மிக நீண்ட வரிசையில் இருக்கிறது இவரே கொண்டாடி விட்டுப் பின்னர் இவரே திட்டித் தீர்த்த பட்டியல்.


முன்பு சாரு காளான் கோப்பி பற்றி தொடர்ச்சியாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தார். அது பற்றி எனது தம்பி ஒரு முறை அப்பாவிடம் “காளான் கோப்பி பற்றி முன்னெடுப்பவர்களுக்கு (promote பண்ணுபவர்களுக்கு) காளான் கோப்பி விற்பவர்களால் பணம் வழங்கப்படும், அதனால்தான் சாரு இப்படி எழுதுகிறார் என்று சொன்னபோது எந்த அடிப்படையில் இவன் இப்படி சொல்கிறான் என்றே தோன்றியது. ஆனால் அது போன்ற சந்தேகங்கள் உறுதிப்பட சாருவின் செயல்களே காரணமாகிவிடுகின்றன. சாருதான் இப்படி என்றால் சாருவாலேயே புகழபட்ட பின்னவீனத்துவ விமர்சகர் (????!!!!) ஒருவர் “சாருவுக்கு முன்னர் நித்தியானந்தரைப் பிடிக்கும், எனக்கு இப்பவும் சாருவைப் பிடிக்கும்” என்று பதிவிடுகிறார். மேலும், தான் தன் நண்பர்களிடம் நித்தியானந்தர் எதிலாவது மாட்டும்போது சாரு பல்டி அடிப்பார் என்று முன்னரே கூறியதை இன்னொரு நண்பரின் கடிதம் மூலம் உறுதிப்படுத்துகிறார். அனேகமாக இது போன்ற தகுதிகளை முன்வைத்து இவரை சாரு தன் அடுத்த வாரிசு என்று விரைவில் அறிவிக்கலாம். (சாரு தன் வாரிசு என்றோ, அல்லது சிறப்பாகவோ ஒருவரைப் பற்றி எழுதினால் எழுதப் பட்டவருக்கு என்ன நடக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே!).


நித்தியானந்தர் விவகாரத்தில் சாரு நேர்மையாக தன் தவறுகளை ஒப்புக்கொண்டிருக்கலாம். அதை விட்டு ஆங்கிலத்தில் இது பற்றி முதலிலேயே கதை எழுதினேன் அது இதென்று இவர் செய்யும் அழிச்சாட்டியத்தைத் தாங்கவே முடியவில்லை.


சாருதான் இப்படி என்றால் ஜெயமோகன் செய்யும் அட்டகாசம் இன்னொரு பக்கத்தில் போகிறது. நித்தியானந்தர் பற்றி தான் முன்பே அறிந்ததாயும் நித்தியானந்தரிடம் பணம் வாங்கியே சில எழுத்தாளர்கள் (சாரு??) நித்தியானந்தர் பற்றி எழுதியதாயும் கூறுகிறார் ஜெமோ. இது பற்றி எழுதாததில் எனக்கு எந்த வியப்பும் இல்லை, அவாள் கட்டிக் காக்க விரும்பும் இந்து ஞான மரபிற்கு இது போன்ற விடயங்களை எழுதுவது கூட ஊறாக அமையலாம். நித்தியானதர் விவகாரத்தின் பின்னர் “ஜாக்ரதை” என்று அவர் எழுதிய ஒரு கட்டுரையே காணும் ஜெமோ எடுக்கின்ற நிலைப்பாட்டைச் சொல்ல. போதாதென்று ஆன்மீகம், போலி ஆன்மீகம் என்ற தொடர் கட்டுரை வேறு


எழுத்தாளர்கள் தான் இப்படி என்றால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் ஊடகத்துறை செய்யும் பித்தலாட்டம் அடுத்த பக்கம். நக்கீரன் தன் அட்டைப் படத்திலேயே இந்தக் காட்சிகளைப் போட்டு வியாபாரம் தேடுகின்றது. முன்னர் கடந்த மே மாதம் கூட பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் இருந்த ஒரு படத்தை எடிட் பண்ணி பிரபாகரன் செத்துவிட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்படுவதை பிரபாகரனே பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு படத்தை வெளியிட்டது நக்கீரன். இது போலவே இந்த முறையும். மேலும் இந்த முறை ஒரு படி மேலே போய் தம் இணையத் தளத்தில் இந்த வீடியோவை ட்ரெய்லராய் வெளியிட்டு, பின்னர் முழு வீடியோவையும் பார்க்க சந்தாதாரர் ஆகவேண்டும் என்றும் சொல்லி விற்றுத் தள்ளியது நக்கீரன். சொல்லப் போனால் நக்கீரன் செய்தது “நீலப்பட விற்பனை” என்கிற பிரிவில் நடவடிக்கை எடுக்கவேண்டிய குற்றம் அதையேதான் சன்னும் செய்தது. அப்போ இந்த ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்?. அது தான் சொல்வார்களே குருக்கள் -- விட்டால் குற்றம் இல்லை என்று, அதான் ஞாபகம் வருகின்றது. இவ்வளவு காலமும் நித்தியை வைத்து / அல்லது நித்தி பெயரால் கட்டுரை போட்டு (கதவைத் திற காற்று வரட்டும் எழுதிக் கொடுத்தது வலம்புரி ஜான் என்று ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார், சாருவுக்கும் நித்திக்கும் அடுத்த ஒற்றுமை) வியாபாரம் செய்த குமுதம் அது பற்றி எந்த சொரணையும் இல்லாமல் தனது தளத்திலேயே நித்தியின் வீடியோ கிளிப்பிங்கினைப் போட்டு வியாபாரம் செய்கின்றது. நிற்காது நித்தியின் சக “ப்ராண்ட் அம்பாசடரான” சாருவுடன் சேர்ந்து ரிப்போட்டரில் நித்தியின் லீலைகள் பற்றி சாரு எழுதும் தொடர் என்று அறிவித்து அடுத்த சரவெடியைத் தொடக்கிவைத்துள்ளது. இதற்குப் போட்டியாக ஏதேனும் விகடனின் எழுதவேண்டும் என்பதற்காக விகடன் ஜக்கி வாசுதேவ் பற்றி ஏதாவது ஒரு விடயத்தைப் புலனாய்ந்து அதை அம்பலப்படுத்தி சுபாவைக் கொண்டே ஜூனியர் விகடனில் ஒரு தொடரை தொடங்கினால் கூட தொடங்கலாம்.....


அந்த மாதிரியான காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்


(இந்தக் கடைசி வசனம் எழுதியவர் மனுஷ்யபுத்திரன், அண்மையில் அவ்ர் ஏற்படுத்திய அதிர்ச்சி பற்றி விரைவில் எழுதுவேன், என்ன செய்வது இந்த மாதிரியான காலத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லி விட்டீர்களே)

Sunday, March 7, 2010

நம்மை நாமே சிலுவையில் அறைவோம்

யூலை மாதம் 11ம் திகதி 20 பேர் கொண்ட இன்னொரு தமிழ்க் குழுவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 23 வயது இளைஞரின் கொலையுடன், அதற்கு சில வாரங்கள் முன்னர் மோதல் ஒன்றின் தொடர்ச்சியாக காரால் இடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது இந்த கோடை காலத்திலும் வழமை போல தமிழ் இனக்குழுக்களின் இடையிலான மோதல் வலுப்பெறத்தான் போகிறது என்பது தெளிவாகின்றது. அதிலும் பெரும்பாலும் 16 வய்து முதல் 28 வயதுக்கு இடையிலான, இளைஞர்கள் என்கிற பருவத்தில் இருந்து மனிதர்கள் என்கிற பருவத்திற்கு மாறும் வயதிற்கு உட்பட்டவர்களே பெரும்பாலும் இந்தக் குழு மோதல்களில் ஈடுபடுவதும், குழுக்களில் அங்கம் வகிப்பதும் நிச்சயமாக கவலைப்படவேண்டிய விடயமாகும். கனேடிய சமூகத்தைப் பொறுத்தவரை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்த இனங்களுள் ஒன்றாக தொடர்ந்து குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழ் சமுதாயத்தில் இப்படியான நிகழ்வுகளும் இன்னோர் பக்கமாக அதிகரித்து வருவது ஏனென்ற கேள்வியுடன் சில விடயங்களை ஆய்வது கட்டாயமான ஒன்றாகவே தெரிகின்றது.



இலங்கையில் இனப் பிரச்சனை தீவிரமடைந்து ஆயுதப் போராட்டமாக மாறத் தொடங்கிய 80களின் பின்னர் தமிழர்கள் புலம்பெயர்வதும் அதிகரித்தது. ஆரம்ப காலத்தில் ஐரோப்பிய நாடுகளை நோக்கியே புலம்பெயர்வுகள் அமைய, 90களின் இறுதியில் கனடா நோக்கிய புலம்பெயர்வுகளும் பெரிதளவு நடக்க ஆரம்பித்தது. அதே காலகட்டத்தில் கனேடிய தமிழ் இளைஞர் குழுக்களும் உருவாக தொடங்கின. ஆரம்பத்தில் வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஆகிய இரண்டு பிரதேச மக்களுக்கிடையில் ஈழத்தில் நிலவிய பிணக்குகளை மையமாகக் கொண்டே இந்த மோதல்கள் இடம்பெற்றன. அந்தப் பிதேசங்களில் இறுக்கமாக நிலவிய சாதிப் பிரச்சனைகளின் நீட்சியாகவே இந்த மோதல்கள் தொடர்ந்தன. டவுன்டவுனில் (Downtown ) இருக்கின்ற லான்ஸ்ரவுண், மற்றும் வெலஸ்லி & பார்லிமென்ற் பிரதேசங்களை மையமாகக் கொண்டே இந்த மோதல்கள் இடம்பெற்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இரண்டு பிரதேச மக்களும் தத்தம் ஊர் சேர்ந்தவர்களை வீரர்களாகவும், நாயகர்களாகவுமே பார்த்தனர். இன்றும் இவ்வூர் ஒன்று கூடல்களில், இம்மோதல்களில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூறப்படுவதைக் காணலாம். அதிலும் குறிப்பாக சப்வே (Subway) ஒன்றில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை அந்த ஊர் மக்களே பிணை எடுத்த்துடன் அது தொடர்பான வழக்குகளிற்கு செலவான தொகையையும் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. ஊரபிமானம், ஊர்ப் பற்று போன்ற கருத்தாடல்களுடன் செய்யப்பட்ட இது போன்ற செயல்கள் பின்னாட்களில் பலர் இதே வழியில் குழு மோதல்களில் ஈடுபடுவதற்கு வழியமைத்த மோசமான முன்மாதிரியாகவும் அமைந்தது.



92ல் ஏகே கண்ணன் என்ற பெயர் பரவலாக அறியப்பட்ட பின்னர் மோதல்கள் VVT, கண்ணன் குழு என்கிற இரண்டு குழுக்களிடையேயான மோதல்களாக தொடர்ந்தது. இரண்டு குழுக்களிலும் இருந்தவர்கள் அப்போதைய சூழலில் பாடசாலைகளுக்கு சென்றுவரும்போது புதிதாக வந்த இளைஞர்களை பெரிதும் கவர, பல இளைஞர்கள் அவர்களுடன் நட்பாகி, அந்த நட்பின் நிமித்தம் தாமும் அந்த அந்த குழுக்களை சார்ந்தவர்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். இதே சமயம் கனேடியச் சட்டங்களின் படி 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான தண்டனைகள் மிகமிக குறைந்த அளவே இருந்ததால் குழுக்களைச் சார்ந்தவர்கள் இந்த வயது குறைவான(Under Age) இளைஞர்களை வைத்து பல விடயங்களை செய்துகொண்டதுடன் தாம் செய்த சில குற்றங்களிற்காகவும் வயது குறைந்த சிலரை சரணடைய வைத்து தண்டனைகளில் இருந்து தாம் தப்பிக் கொண்டனர். இதன் எதிரொலியாக மாற்றுக் குழுக்களால் புதிதாக இணைந்த இளைஞர்கள் குறிவைக்கப்பட அடுத்த நிலைக்கு குழுமோதல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதுவரை காலமும் இலங்கையில் சொந்த இடம் சார்ந்தும், உறவுமுறை சார்ந்தும், சாதி பிரச்சனைகளை மையம் வைத்தும் நடந்த மோதல்கள் பிற்பாடு கனடாவில் பாடசாலைகளையும், இடங்களையும் பெரும்பாலும் மையமாகக் கொண்டு தொடரத் தொடங்கின. அது மட்டுமல்லாமல், சட்டவிரோதமான முறையில் பணம் ஈட்டும் கடனட்டை மோசடி (Credit Card Skimming) , திருட்டு, அடையாளத் திருட்டு (Identity Theft), முகவர் வேலைகளின் பிண்ணனி, போலி ஆவண தயாரிப்பு, காப்புறுதி மோசடி மற்றும் சிறிய அளவில் போதை மருந்து கடத்தல்/விற்பனை என்பனவற்றில் எழுந்த போட்டிகளும், பண ரீதியிலான பிரச்சனைகளும் மோதல்களுக்கு காரணமாகின. 90களின் பிற்பகுதியில் இருந்து இப்படி நிறைய குழுக்களாக இயங்கியவர்களுல் Gilders Boys, rough riders, B3, Brave Heartz, True Born Thugs, Marganeau Boyz போன்றவர்கள் முக்கியமானவர்கள். இக்குழுக்கள் அவற்றின் ஆரம்பகாலத்தில் ஏற்கனவே பலமாக வளர்ந்திருந்த இன்னுமொரு குழுவின் ஆதரவுடன் இயங்கினாலும் சிறிது காலத்தில் தம்மை தனியொரு குழுக்களாக அடையாளாப்படுத்தினர். இந்த அடிப்படையில் பார்க்கும்போது கனடாவில் இயங்குகின்ற ஏறாத்தாழ எல்லாப் பாடசாலைகளிலும் (பெரும்பாலான கத்தோலிக்க மற்றும் தனியார் பாடசாலைகள் நீங்கலாக) ஏதாவது ஒரு குழுவின் செல்வாக்கேனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தக் குழு மோதல்கள் யாரோ சிலர்தான் செய்கின்றார்கள் என்றோ, எம்மவரை மட்டம் தட்ட இது போன்ற நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்குகின்றனர் என்றோ காரணம் சொல்லி எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் இது குறித்த காரணங்களையும், இது பற்றிய விமர்சனங்களையும் திறந்த உரையாடல்களுக்கும், விவாதங்களுக்கும் உள்ளாக்குவது அவசியமானதாகின்றது.



2



ஆரம்ப காலத்தில் இலங்கையில் இருந்து புதிதாக வந்தவர்களேஎ இந்த இனக்குழுக்களில் ஈடுபடுவது போன்ற ஒரு கற்பிதம் இருந்தது. இதற்கு காரணமாக, ஆங்கில மொழியுடன் போதுமான பரிச்சயம் இல்லாதவர்கள் அதன் தொடர்பில் எதிர்நோக்கும் தொடர்பாடல் சம்பந்தமான பிரச்சனைகளே இந்த குழு மோதல்களுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது (அடிப்படையில் இது இலங்கையின் மேல்த்தட்டு வர்க்க மக்களின் மனோபாவத்தை ஒத்தது). ஆனால் இன்றைய கால கட்டங்களில் சிறு வயது முதலே கனடாவில் வளர்ந்து வந்தவர்களும், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுமே பெரும்பாலான குழு மோதல்களில் ஈடுபடுவதைக் காணலாம். சென்ற ஆண்டில் குழு மோதல்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவரை (19 வயது என்று நினைவு) டொரண்டோ ஸ்டார் பத்திரிகை பேட்டி ஒன்று எடுத்தது. அப்போது அவர் சார்ந்த குழுவுக்கும் அவர் எதிர் குழுவினருக்குமான பிரச்சனைகளின் காரணமாக அவர் இருந்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிகழ்வுகளுக்கான காரணங்கள் பற்றிக் கேட்டபோது அவர் இலங்கையில் இருந்து புதிதாக வந்த அவர்களைப் பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கின்றது. அவர்கள் உடை அணியும் முறை, போன்றவற்றைப் பார்க்கும் போது அவமானமாக இருக்கின்றது. அவர்கள் அணிந்து வரும் உடைகளில் இருந்து சமையல் வாசம் வீசுகின்றது.......என்றெல்லாம் கூறியிருந்தார். உண்மையில் வேற்றினத்தவர்கள் கூட எம்மவர்களைப் பற்றி கூறாத அளவுக்கு துவேசம் பொங்கியிருந்தது அவர் பேச்சில். இந்த அளவு எம் இளைஞர்கள் தம்மிடையே பிளவுபட்டிருக்க என்ன காரணம்? அதற்குரிய விடையும் அவரது பேச்சிலேயே இருக்கின்றது. புதிதாக வந்தவர்களை மட்டமாக நினைக்கவும், வெறுக்கவும் அவர் எடுக்கின்ற நியம அலகு புதிதாக வந்தவர்ர்கள் கனேடிய நாகரிகத்துள் இன்னும் முழுமையாக புகவில்லை என்பதை சார்ந்து எடுக்கப்படுகின்றது. இது எந்த அளவிலும் ஏற்கமுடியாத ஒரு மன நிலை. இதற்கு காரணம் பெரும்பாலும் எமது வீடுகளில் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதை, மேற்கத்திய பாணியில் உடை அணிவதைப் பார்த்து பெருமித்து, மற்றவர்களை ம்ட்டம் தட்டும் மனநிலை. இதன் காரணமாக பிள்ளைகள் பலர் தமிழே தெரியாமல் / தமிழில் பேசாமலே வளர்கிறார்கள். இது மறைமுகமாக பெற்றோருக்கும், உறவினருக்கும் இடையில் (அவர்கள் அதிகளவு ஆங்கிலம் தெரியாமல் இருக்கும் இடத்து) பிள்ளைகளுடன் பெரும் இடைவெளிகளை உருவாக்கிவிடுகின்றது.



மேலும் இன்னொருவகை மக்கள் இருக்கின்றார்கால். அவர்கள் பிள்ளைகளை தாம் இலங்கையில் வளர்ந்த அதே நாகரீகத்தின் தொடர்ச்சியாகவே இங்கேயும் வளர்க்க முனைகின்றார்கள். அதே பாணியிலான் உடுப்புகள், உணவுப் பழக்க வழக்கங்கள். பொதுவாக நடுத்தர குடும்பங்களின் நிலை இது. இதனால் பிள்ளைகள் தாம் பழகும் சூழலிலும், நண்பர்கள் மத்தியிலும் பெரியளவிலான மனப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றார்கள். உயர் கல்லூரிகளில் வீட்டில் இருந்து அணிந்து வந்த உடுப்பை locker களில் வைத்துவிட்டு, வேறூ விதமான உடைகளை கல்லூரியில் அணிந்து திரிபவர்கள் பலரைக் காணலாம். வீட்டில் இருந்து படிய வாரிய தலையுடன் வந்து பாடசாலையில் Gel அணிந்து திரிந்துவிட்டு வீடு போகமுன்னர் தலையை தண்ணீரால் அலசிச் செல்லும் ஒரு மாணவனை நான் நன்கறிவேன். இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்து அந்நியப்பட்டுப் போவதுடன், மெல்ல மெல்ல தம் குடும்பத்தை வெறுக்கவும் தொடங்குகிறார்கள். இந்த நிலையில் தமக்குரிய சுதந்திரத்தை தாம் அனுபவிப்பதாக உணரும் நண்பர்கள் ஆபத்பாந்தவர்களாய் மாற அவர்களுடனான உறவு வலுவடைகின்றது. இவர்களுக்கு ஏற்கனவே குடும்பத்தினருடன் இருக்கின்ற ஒட்டாத மனநிலையும், பாடசாலை மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஏற்படுகின்ற புறக்கணிப்பு உணர்வுகளும் சேர்த்து தம்மை ஒத்த பிறருடன் நெருக்கமாக்கின்றது. நண்பர்கள் வட்டம் பெருக, குழு மனப்பான்மை வருகின்றது. குழுவாக, கூட்டமாக இருக்கின்ற போது ஏற்படுகின்ற அதிகார போதை அவர்களிடம் அத்து மீறும் தன்மையினை உருவாக்கின்றது. நட்பு என்பது உயிரை கொடுப்பது அல்லது நட்புக்காக ஒருவனின் உயிரை எடுப்பது என்று ஏற்கனவே திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்திருக்க, நட்பும், காதலுமே வாழ்க்கையாக தெரியும் பதின்மங்களுக்குப் பிந்திய வயதில் இவை இரண்டிற்காகவும் வீணாக தம் வாழ்வைத் தொலைக்க தொடங்குகின்றார்கள்.



நாம் வாழும் சூழலில் திரைப்படங்களும் இதைத்தானே சொல்லித் தருகின்றன. 95 முதல் 99 வரையான ஐந்து ஆண்டுகளும் மென்மையான உணர்வுகளைக் கொண்ட திரைப்படங்களே பெரிதும் வெளியாகின. அவையே பெரிதும் வெற்றியும் பெற்றன. (இந்த மென்மையான திரைப்படங்களும் கூட விதம் விதமான காதல், நம்பவே முடியாத அளவு குடும்பப் பாசம் போன்ற அபத்தங்களைத்தான் காட்டின என்பது வேறுவிடயம். ஆனால் அவற்ரில் வன்முறைகள் பெரிதாக இருக்கவில்லை) இந்த நிலையில் அமர்க்களம் என்கிற திரைப்படம் வருகின்றது. முழுக்க முழுக்க குழுத்தலைவன் ஒருவனின் நாயகத் தன்மையை முன்னிலைப்படுத்தி, அவன் பக்கத்தை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வெற்றிபெறுகின்றது. அந்த இளைஞன் அந்த நிலைக்கு வர அவன் அனுபவித்த மோசமான குழந்தைப் பருவம்தான் காரணம் என்று இயக்குனர் தெளிவாக காட்டியபோதும் அதை பார்த்த பெரும்பாலான இளைஞர்களுக்கு நாயகன் செய்யும் அடிதடிகளும், அவன் மேல் இரக்கமுற்று துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகியும் மட்டுமே கண்ணில்பட்டார்கள். இந்த திரைப்படத்தின் வெற்றி இது போன்ற ரவுடிகளையும், தாதாக்களையும் முன்னிலைப்படுத்தும் நிறையப் படங்களை உருவாக்கியது. அவர்களுக்கான புதுப் புது நியாயங்களை உருவாக்கியது. அவை பலவற்றில் உண்மைகள் இருந்தபோதும், அது பற்றிய சமூக ரீதியான கண்ணோட்டம் இன்றி, அடிதடி செய்யும் நாயகன், அவனை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகி, அவன் புகழ் பாடும் சமூகம் அல்லது நாயகனின் சமூக அக்கறை என்ற பெயரில் அவன் செய்யும் அத்துமீறல்களுக்காக முன்வைக்கப்படும் நியாயங்கள் என்பனதான் பதின்மங்களில் இருக்கும் பல இளைஞர்களின் பார்வையில்பட்டன. தாம் திரையில் பார்த்த நாயகத் தன்மைகளுடன் தம்மையும் ஒப்பிட்டபோது அவர்களுக்கு தம்மை ஒரு குழு சார்ந்தவனாகவோ, இல்லை குழுக்கள் சார்ந்த அத்துமீறல்களை செய்தவன் என்றோ வெளிக்காட்டுவதில் எந்த தயக்கமும் இல்லாமல் போயிற்று.

பொதுவாக குழு மோதல்களுக்கான காரணங்கள் ஆரம்பத்தில் ஈழத்தில் வாழ்ந்த ஊர் சார்ந்ததாகவே இருந்தது. அதன் பின்னர் பல மோதல்களுக்கு காரணமாக காதல் சார்ந்த பிரச்சனைகளே இருந்தன. இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொதுவாக பதின்மங்களின் பின்னர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் மிகப்பெரும் திரை விழுந்துவிடுகின்றது. அதனால் ஒருவன் / ஒருத்தி தன் உறவினர்களைத் தவிர்த்து பல்கலைக்கழகம் செல்லும்வரை அல்லது திருமணமாகும் வரை எதிர்ப்பாலாருடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதில்லை. இதனால் எதிர்ப்பாலர் பற்றிய புரிதல்கள் இல்லாமல் வளரும் ஒரு சமூகம் திரைப்படங்களில் காட்டப்படும் காதல் பற்றிய கதையாடல்களை உண்மை என்று நம்பி அதன் வழி தானும் நடந்து கொள்ளுகின்றது. அதிலும் தற்போதைய காலங்களில் கூட உயர்கல்லூரிகளில் படிக்கின்ற தமிழ் மாணவர்களிடையே ஒரு பெண்ணை எவன் முதலில் காதலிக்கின்றானோ அவனைத்தான் அந்தப் பெண் காதலிக்கவேண்டும் (அந்த பெண்ணிற்கு அவன் மீது காதலோ அல்லது சாதாரண ஈடுபாடோ இல்லாமல் கூட இருக்கலாம்.) என்ற எழுதப்படாத ஒரு சட்டம் இருக்கின்றது. அது போல தன் சகோதரியை ஒருவன் காதலிக்கின்றான் என்று தெரிந்தாலே அவனை அடித்து நொறுக்கி, மிக மோசமாக மிரட்டும் இயல்பும் நிறைய இளைஞர்களிடையே இருக்கின்றது. இப்படி மிரட்டும்போது மிரட்டப்படுபவனும் தனக்குரிய ஆட்பலத்துடன் இருந்தானென்றால் நிச்சயம் அது ஒரு குழு மோதலாக வெடிக்கும். தொடர்ச்சியாக தொடரும் இப்படியான நிகழ்வுகள் இறுதியில் கொலைவரை கூட சென்று முடியலாம்.


புலம்பெயர்ந்து ஒரு புதிய சூழலில் தன்னைப் பொறுத்திக்கொள்ள போராடும் ஒரு இனத்தில் எழக்கூடிய இப்படியான உறவு முறைச் சிக்கல்களும் அதனால் எழும் விளைவுகளும் ஓரளவுக்கு எதிர்பார்க்கக்கூடியனவே. ஆனால் தற்போது பெரும்பாலான தமிழ்க் குழுக்களிடம் வேரூன்றியுள்ள கடனட்டை மோசடி, காப்புறுதி மோசடி போன்றவை இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த மோதல்கள் தொடரப் போவதையே காட்டுகின்றன. ஆரம்ப காலத்தில் பணம் உழைப்பதற்காக கார்களையும், கார்களில் இருந்து விலை உயர்ந்த பொருட்களையும் திருடி ஓரளவுக்கு தமது ஆடம்பர தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். அதிலும் பெரும்பாலும் கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டீரியோ சாதனங்களும், கார்களை அழகுபடுத்துவதற்காக பொருத்தப்பட்டவைகளுமே குறிவைக்கப்பட்டன. இதற்குப் பிறகு மெல்ல மெல்ல இதர மோசடிகளும் பரவ ஆரம்பித்தன. கிட்ட தட்ட எல்லாக் குழுக்களை சார்ந்த இளைஞர்களும் ஏதோ ஒரு வகையில் இந்த மோசடி வலையில் பங்கெடுத்தனர். பெருமளவு பணம் இளைஞர்களிடையே பரவ இந்த மோசடிகள் காரணமாக இருந்தன. ஆரம்பத்தில் இந்த மோசடிகளில் கைது செய்யப் பட்டவர்கள் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பாவித்து சுலபமாக் தப்பிவிட, விழித்துக் கொண்ட காவல் துறையினர் சட்டங்களை கடுமையாக்கி, தீவிர வாத தடுப்பு சட்டம்போன்ற கடுமையான சட்டங்களின் கீழும் கூட பலரை கைது செய்தனர். இந்த நேரம் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் போலிக் கடனட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கி மிக மலிவு விலைகளிற்கு இவர்கள் விற்கின்றபோது இவர்களின் நெருங்கிய உறவினர்களும், சில சமயங்களில் பெற்றோரும் கூட இவர்களிடம் இருந்து மலிவு விலைக்கு பொருட்களை வாங்குகின்றனர். பெரிய அளவு திரைகளை கொண்ட தொலைக்காட்சிகளை போலிக் கடனட்டைகள் மூலம் பொதுவாக 65%ற்கு விறகப்பட்டபோது ஒரு இளைஞன் 60% என்ற விலைக்கு விற்று வந்தான். அவனை அவனது தந்தையே விபரம் புரியாதவன் என்று சொல்லி கவலைப்ப்பட்டதை நான் காதாரக் கேட்டிருக்கின்றேன். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் நிச்சயமாக இந்தக் குழு மனப்பானமைக்கு, அதன் மூலமாக செய்யப்படுகின்ற இது போன்ற மோசடிகளுக்க்கும் இளைஞர்களை மட்டுமல்லாமல், எம் சமூகத்திலேயே கலந்துள்ள, அதிலும் பெரும்பாலும் உறவுகளுக்குள் உள்ள சில குறைபாடுகளைப் பற்றியும் பேசவேண்டிய அவசியம் உண்டாகின்றது.

இன்றைய உலகில் பெரும்பாலும் வெற்றி என்பது பண ஈட்டல் தொடர்பானதாகவும், பொருளாதார ரீதியானதாகவுமே பார்க்கப்படுகின்றது. அதே நேரம் பண ஈட்டல் என்பது பேசப்படுவது போல, அது ஈட்டப்பட்ட முறை பேசப்படுவதில்லை. போர்க்களத்தில் நியாயங்கள் ஏதுமில்லை என்று சொல்வது போல, பணம் உழைப்பதிலும் நியாயம் பார்க்கலாகாது என்று தர்க்கம் பேசுபவர்களிடம் பேச எமக்கு எதுவுமிலை. அவர்களை மோசமாகிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை இன்னும் மோசமாக்கிச் செல்லும் நோய்க்காவிகளாக மட்டுமே பார்க்க முடியும் ஆனால் பல சமயங்களில் பெற்றோரும், குடும்பத்தாருமே இதே மன நிலையுடன் அடைவதைக் காணும்போதுதான் அதிகம் கவலையாக இருக்கின்றது. இவர்களை ஊக்கி வளர்க்கும் ஒரு சமுதாயம், மறைமுகமாக இவர்கள் மீது காட்டும் அபிமானமும், அவர்களை வெற்றியாளர்களாகக் கொண்டாடுவதும் நேர்மையான முறையில் உழைத்து வாழ்பவர்களை, வாழ முற்படுபவர்களை மிகப்பெரிய அவ நம்பிக்கைகளுக்கு உள்ளாக்குகின்றது. அண்மையில் ஒருவர் என்னிடம் எண்ட அக்காண்ட மகன் படி படியென்று படிச்சு இப்ப ஒன்றரை லட்சம் வருஷத்துக்கு உழைக்கிறான். எண்ட மகன் பள்ளிக்கூடம் படிச்சு முடிக்கவேயில்லை. ஆனால் அவன விட டபிளா உழைக்கிறான். உதான் தம்பி கெட்டித்தனம் என்றதுஎன்று சொன்னார். அவரது மகன் செய்யும் முறைகேடுகள் பற்றி நன்கு அறிந்தவர் அவர். இப்படி இருக்கின்றபோது இவரே இப்படி சொன்னால், அதை கேட்டு வளரும் அவரின் இளைய மகன்களின் மன நிலை எவ்வாறு மாறும். தாமும் அது போல செய்யலாம், நிறையக் காசு சேர்க்கலாம் என்று அவர்கள் மனம் சிந்திக்காதா? எதற்கெடுத்தாலும் ஔவை, பாரதி என்று பேசுபவர்களே; அவர்கள் தானே எப்போதோ தீயோர் குண இயல்புகளை பிறர்க்கு உரைப்பதுவும் தீதேஎன்றும் மோதி மிதித்துவிடு பாப்பா, அவ்ர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பாஎன்று பாடிப் போனார்கள்.



இதைத் தவிர குழுக்களை ஆதரிக்கவும், தத்தம் பக்க நியாயங்களை சொல்லவும் இன்னோரு கதையும் அதிகம் சொல்லப்படுகின்றது. அதாவது தமிழர்கள் கனடாவில் குடியேறிய ஆரம்ப காலங்களில் கறுப்பினத்தவரும், சீனர்களும் தமிழர்கள் மீது நிற வெறியுடன் நடந்ததாகவும், அதில் இருந்து தம் இனத்தைக் காக்கவே தமிழர்கள் தம்மிடையே குழுக்களை அமைத்துக் கொண்டனர் என்றும். இப்படிச் சொல்பவர்களை என்ன சொல்லித் திட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை. சரி, ஒரு கதைக்கு அப்படியே எடுத்துக் கொண்டாலும் தமிழ் இனக்குழுக்கள் இதர தமிழ்க் குழுக்களிடையே மோதியதைத் தானே எம்மால் அறியமுடிகின்றது இது தவிர தமிழர்களாலேயே ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் இவர்கள் மோதியதை எப்படி எடுத்துக் கொள்வது. உதாரணமாக 2006ல் கனடாவில் வொண்டர்லாண்டில் தமிழர் நாள்நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அதில் மார்க்கம் பிரதேசத்தையும், டொரண்டோ பிரதேசத்தையும் மையமாக வைத்து இயங்கும் இரண்டு குழுக்கள் மோதின. இரண்டிலும் பெரும்பாலும் 20 வயதுக்கு குறைந்தவர்கள். அதன் பின்னர் இரண்டு குழுக்களும் அந்தக் கோடை விடுமுறை முடிந்து பாடசாலை தொடங்கிய முதல் நாளில், தம்மில் பெரியவர் யார் என்று உறுதி செய்யும் நோக்குடன் இரண்டு பிரதேசங்களிலும் இயங்கும் பாடசாலைகளில் வைத்து அடிதடியில் இறங்கினர். பலர் காயமடைந்தனர். இதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவது?



ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முதலாவது படி அப்படி ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று ஒத்துக் கொள்வது. முதலில் நாம் தமிழ் இளைஞர்களிடையே இந்த குழுக் கலாசாரம் நன்கு பரவிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். 90களில் இறுதியில் கனடாவில் நடக்கும் தமிழர்களிடையேயான வன்முறைகள் பற்றி கேட்கப்பட்டபோது டி..ஜி. சுந்தரலிங்கம் தமிழர்கள் சமுதாயத்துக்கும், கனேடிய சமுதாயத்துக்கும், போலீசுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. இதனால் தமிழர்கள் தம்மிடையே நிகழும் வன்முறை பற்றிய போலீசாரின் விசாரணைகளில் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த நிலை நீடிக்கும்வரை வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்என்ற பொருள்பட கூறியிருந்தார். இந்த கருத்து நிச்சயம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டியது. இப்படிச் செய்கின்றார்களே என்று அவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும் என்றோ அல்லது இன்னும் சிலர் சொல்வது போல (இலங்கையின் வடக்கு கிழக்கில் செய்தது போல) போஸ்டில் கட்டி வெடி வைக்கவேண்டும் என்றோ நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். எல்லா சரி பிழைகளையும் தாண்டி, இத்தனையும் செய்யக் காரணமாய் சில சமூக ரீதியான, உளவியல் ரீதியான, இன ரீதியான/இலங்கையில் இருந்த காலத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் காரணங்களாய் இருந்திருக்கின்றன என்பதையும், புலம் பெயர் நாடுகளில் தமிழர்களிடையே இப்படியான ஒரு முக்கிய பிரச்சனை இருக்கின்றது என்பதையும் அங்கீகரிக்கும் அதே வேளை அதற்காக அவர்கள் செய்யும் சமூக விரோத செயல்களை முற்றாக நிராகரிப்பது என்ற அடிப்படையில் தொடர்ச்சியான உரையாடல்களையும், செயற்பாடுகளையும் செய்வது மூலமே ஓரளவுக்கு இனியும் இது போன்ற அனர்த்தங்கள் நிகழாமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் இதற்காக பொறுப்பேற்று எம்மை நாமே சிலுவையில் அறையலாம்.



செய்தி 1


-------------என்ற 22 வயதான தமிழ் இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கிரிக்கட் மட்டைகள் மற்றும் பேஸ்போல் மட்டைகளினால் கடுமையாக தாக்கப்பட்ட காரணத்தினால் தலையில் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது 2009/07/15; GTN



செய்தி 2


The reputed leader of a Tamil gang whose battle with rival gang members on the streets of Toronto claimed the lives of more than a dozen youths in the late 1990s, and once led to a midday shooting on Highway 404, was deported late last night to Sri Lanka.- மார்ச்/2006



செய்தி 3


Police said among those who were arrested were leaders of some of the Tamil gangs. Fraud, robbery, drug, immigration, and firearms charges were among the plaints filed against the Tamil gang members. These arrests also mark the first time in Canada the Police have used a section of the Immigration Act that prohibits criminal organizations. In this instance the police applied it to street gangs, as a new tactic, and if convicted could lead to deportations or imprisonments for some who were arrested.

The quasi-political Tamil gangs have been active in the metropolitan area of Toronto for the whole of the last decade. But the last two months saw a sudden increase of violence by the gangs. Two Tamils of Sri Lankan origin in their early twenties and loosely connected to these gangs died during this period in an execution style shooting. A News Release in 2005



செய்தி 4


Today according to police a new breed of Tamils hope to fill the void left by the VVT and AK Boys. Gangs such as McF,Keele n Hoes, Westend tamilz, Born to Murdah boyz, Braveheartz have all slowly aimed towards gaining the status that has left behind slowly starting with credit card frauds. Numberous gangs members have been taken in over the last 3 years for violent crimes. A fierce feud is currently underway between the SL Soc and the Selly Oak Souljahs, resulting in casualties on both sides. A known rivalry is between the Murdah Boyz and B3 Juniors which erupted into street wars where members of both sides were arrested numberous times on contempt to commit criminal activities while putting lives in danger. Police believe the new breed of tamil gangs will die of slowly before a fatal crime could happen but if a crime of such was to happen police believe the consequences could be deadly depending on which crews it happens to. The B3 juniors are known to be in the Malvern area and Markham and Ellesmere. The Born to Murdah boyz are said to be in the Markham and Eglinton and also reside in the Mccowan n larence area they are believed to be under the OTK , the rivals of the B3. Keele and Finch Killa are known to reside in Keele n Finch and and Ossinginton areas. The west End Tamils are known to reside in Etobicoke west. And the Bravehearts r known to b in Markham. All these gangs have grown to make a gang profile on the up and coming gangs lists and are all believed to turn to violent actions if felt disturbed.



செய்தி 5


In Toronto, there are about 200, 000 Tamils. But fewer than 100 are involved in Toronto street gangs, police say. That 5 per cent of the population feeds the racism and misconceptions the general public has about Toronto's Tamil community, various leaders complain.

It's street violence, it's a criminal community,not the Tamil community. In so many ways it's exactly the same as the gangs that fight up at Kipling or other ones in Scarborough or even the bikers," said a veteran organized crime officer. "We have to treat these gangs as organized crime because that's what they are."

Courtesy: The Star Ontario



நன்றி: எம்மை நாமே சிலுவையில் அறையலாம்.கட்டட காடு கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற வியாகூலப் பிரசங்கம் என்ற கவிதையில் வருகின்ற வரி. எழுதியவர் கவிஞர் காலம்செல்வம்.


நன்றி: இரவு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது; கூர் 2010