Wednesday, September 17, 2008

கார்த்திக் என்றொரு மகா நடிகன்


90 களின் பிற்பகுதியில் தொடர்ச்சியான ஹிட்களை கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தியும், சக நடிகர்களை வயிறெரியவும் பண்ணி கொண்டிருந்தார் ஒரு ஹீரோ. அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து விஜய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டிருந்த, அஜித் ஒரு அங்கீகாரத்துக்காக போராடிக்கொண்டிருந்த, சூர்யா, விக்ரம் இருவரும் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த, பிரசாந்தின் காற்று ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை என்று சற்று பலமாக வீசிவிட்டு ஓய ஆரம்பித்திருந்த அந்த நாட்களில் மேற்சொன்ன ஹீரோக்களின் பதின்ம வயதுகளிலேயே பிரபல நாயகனாக இருந்த அந்த ஹீரோ அப்போதும் அவர்களுக்கு போட்டியாக, மாறாத இளமையுடனும் குறும்புடனும் இருந்தார். கேள்வி பதில் பகுதியில் பத்திரிகை வட்டாரத்தில் பிரபலமான அரசு கேள்வி பகுதிகளில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பூவே உனக்காக, காதல் கோட்டை, லவ்டுடே என்று விஜய் அஜித் புறப்பட்டிருந்த காலம். விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, அரவிந்த்ஸ்வாமி இந்த இளம் நாயகர்களில் உங்களை கவர்ந்தவர் யார் என்பது கேள்வி. அதுக்குஅரசு சொன்ன பதில் “இவர்களெல்லாம் இருக்கட்டும், அந்த துடிப்பென்ன, குறும்பென்ன, உற்சாகமென்ன…ம்ம்ம் முன் முடியில் உதிர்ந்த அந்த முடிகள் மட்டும் இல்லாவிட்டால் முத்துராமனின் குமாரனை பிடிக்க இன்னும் சில ஆண்டுகளுக்கே யாருமில்லை” என்பது. ஆம் அந்த நாயகன் நவரச நாயகன் கார்த்திக். கமல், சிவாஜி, விக்ரம், சூர்யா என்று சிறந்த நடிகர்களை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லும் கருத்து ஒப்பனையாலோ, வேடங்களை மாற்றியோ, மிகை நடிப்பாலோ காட்டப்படுவது மட்டுமே நடிப்பல்ல. இவையேதுமில்லாமல் யதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற இரண்டு மகா நடிகர்கள் ரகுவரனும் கார்த்திக்குமே என்பது.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அவருக்கு இருக்கவேண்டிய தகுதி அவர் யாராவது ஒரு சினிமா பிரபலத்தின் வாரிசாக இருக்கவேண்டும் என்பது தான். அப்படி வாரிசு நடிகர்களாக உருவானவர்களுல் தம் பெற்றோரின் புகழை காத்தவர்கள் என்றால் கார்த்திக், விஜய், சூர்யா என்று மிக சிலரை மட்டுமே கூறலாம். சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, மயங்குகிறாள் ஒரு மாது, குரு போன்ற பிரபல படங்கஈள் நடித்த காலஞ்சென்ற நடிகர் முத்துராமனின் மகன் தான் கார்த்திக். பதினாறு வயதினிலே என்று அறிமுகமான பாரதிராஜா பின்னர் மணிவண்ணனின் கதையினை வைத்து நிழல்கள் என்ற படத்தை எடுத்தார். இப்படத்தில் தான் வைரமுத்து முதன் முறையாக திரைப்பாடல் எழுதியிருந்தார். அற்புதமான கதையினை கொண்ட இப்படம் தோல்வியைதழுவ மணிவண்ணன் ஒரு மாபெரும் வெற்றிப்படத்துக்கான கதையை உங்களுக்கு தருவேன் என்று சபதமிட்டு அமைத்த கதைதான் அலைகள் ஓய்வதில்லை. 1981ல் வெளியான இப்படத்தின் அறிமுக நாயகனாக அறிமுகமானவர் முரளி என்ற இயற்பெயர் கொண்ட கார்த்திக். அப்பொழுது அவரது வயது 21. ஜாதி மத வேறுபாடுகளை கடந்து காதலிக்கும் நாயகனும் நாயகியும் இறுதிக்காட்சியில் ஊரைவிட்டே ஓடுவதாக கதை.
வைரமுத்துவின் வரிகளும் இளையராஜாவின் இசையும் அற்புதமாக கைகொடுக்க மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இதை தொடர்ந்து கேள்வியும் நானே, பதிலும் நானே, சீறும் சிங்கங்கள், இளஞ்சோடிகள் முதலிய படங்களில் நடித்தாலும் அவை எதுவுமே பெரிய வெற்றியை தரவில்லை. ஆனால் 82ல் வெளியான இயக்குனர் ஸ்றீதரின் நினைவெல்லாம் நித்தியா, ஆயிரம் நிலவே வா போன்ற படங்கள் அவற்றின் பாடல்களுக்காக பெரும் புகழ்பெற்றவை. நினைவெல்லாம் நித்தியாவில் வரும் பனிவிழும் மலர்வனம், ரோஜாவை தாலாட்டும் போன்ற பாடல்களும் ஆகாய கங்கையில் வரும் தேவதை இளம் தேவி போன்ற பாடல்களும் இன்றளவும் காதலர்களின் வேதங்களாக இருப்பதோடு கார்த்திக் மீதான ஒரு ரொமாண்டிக் ஹீரோ என்கிற விம்பத்தையும் ஏற்படுத்தின. பின்னர் 85ல் குறிப்பிடவேண்டிய படமாக நல்லவனுக்கு நல்லவன் படத்தை குறிப்பிடவேண்டும். இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகனாக வரும் கார்த்திக்கிற்கு ரஜினியின் மகளை கொடுமைப்படுத்தும் சற்றே வில்லத்தனமான ஒரு வேடம். கிட்டதட்ட ஒரு துணை நடிகர் / குணசித்திர வேடம் மட்டும் ஏற்ற இப்படமும் 86ல் வெளியான மௌனராகம் திரைப்படமும் இவரது திரையுலக வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தின. மணிரத்ணம் இயக்க, மோகன் – ரேவதி நடித்த மௌனராகம் திரைப்படத்தில் கிட்டதட்ட ஒரு 20 நிமிடம் மட்டுமே கார்த்திக் வருவார். ஆனால் படம் பார்த்து முடித்ததும் எல்லார் மனதிலும் அவர்தான் நிறைந்திருப்பார். அப்படியான ஒரு நிறைவான நடிப்பை இப்படம் மூலமாக வழங்கியிருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தில் ஒரு கௌரவ நடிகர் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவது தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக மிக கடினமானது.
அதன் பிறகு அக்னி நட்சத்திரம், உரிமைகீதம், வருஷம் 16 என்று 90களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் கார்த்திக். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவரது திரைவாழ்வு சற்று வித்தியாசமானது. பொதுவாக அவரது எல்லாப் படங்களுமே பார்க்க கூடியதாக இருந்தாலும் திடீர் திடீரென்று மாபெரும் ஹிட்களை அவர் தருவார். கிட்டதட்ட ஒவ்வொரு இரண்டாண்டுகளிலும் அவரது ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை பார்க்கமுடியும். அது மட்டுமின்றி இமேஜ் பாராமல் பல படங்களில் இரண்டு நாயகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் நல்லவனுக்கு நல்லவன், ராகவேந்திரா போன்ற படங்களிலும், பிரபுவுடன் இரும்பு பூக்கள், உரிமை கீதம், அக்கினி நட்சத்திரம், தை பொறந்தாச்சு, குஸ்தி போன்ற படங்களிலும், அர்ஜீனுடன் நன்றி படத்திலும், அஜித் உடன் ஆனந்த பூங்காற்றே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்படங்களிலும் விஜய காந்துடன் ஊமை விழிகள், தேவன் படங்களிலும் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ராஜெஷ்வர் (அமரன், இதயத்தாமரை), ஆர். வி. உதயகுமார் (முத்துக்காளை, பொண்ணுமணி, உலகைவிலை பே
சவா), கே. சுபாஷ், சுந்தர். சி (உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி,) என்று சில இயக்குனர்களின் ஆஸ்தான நடிகராகவும் திகழ்ந்தார்.

தற்போதைய நடிகர்களை போல இல்லாமல் கார்த்திக்கின் சிறப்பம்சம் எந்த வேடமானாலும் அதில் வெளுத்துவாங்குவது தான். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியும் (கோகுலத்தில் சீதை) வருவார், வாய் நிறைய வெற்றிலையோடும் (பொண்ணுமணி) வருவார், நாகரீக இளைஞராகவும் வருவார்(கோகுலத்தில் சீதை, உள்ளத்தை அள்ளித்தா, தொட்டா சிணுங்கி) பேட்டை ரவுடியாகவும் வருவார் (அமரன்). 80 களின் இறுதியில் அவர் இளம் தாடியுடன் நடித்தால் படம் வெற்றி என்ற செண்டிமெண்ட் பரவியபோது சினம் கொண்ட இளைஞனாக இவர் நடித்த இதய தாமரை, உரிமை கீதம், காளிச்சரண், அக்னி நட்சத்திரம், காதல் கீதம், போன்ற படங்கள் இன்றளவும் சிறப்பாகவே உள்ளன. அது போல சின்ன தம்பி, சின்ன கவுண்டர், என்று கிராமிய படங்கள் ஆதிக்கம் செலுத்திய 90களின் தொடக்கத்தில் அவர் நடித்த கிழக்கு வாசல், பொண்ணுமணி, முத்துக்காளை, சின்ன ஜமீன் (மனவளர்ச்சி குன்றிய வேடம்), படங்களில் கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் கார்த்திக். இத்தனைக்கும் அவர் கான்வெண்டில் ஆங்கில மொழியில் படித்து வளர்ந்தவர். பின்னர் நகைச்சுவை படங்களும் மென்மையான உணர்வுகளி கொண்ட படங்களும் (நட்பு, காதல், பாசம்) வெற்றி பெற்ற 90 களின் பிற்பகுதியில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, மேட்டுக்குடி, கண்ணன் வருவான், அழகான நாட்கள் போன்ற நகைச்சுவை படங்களும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, தொட்டா சிணுங்கி, கோகுலத்தில் சீதை, நிலவே முகம் காட்டு போன்ற மென்மையான படங்களும் பெரு வெற்றி பெற்றன. அதுவும் கோகுலத்தில் சீதை, தொட்டா சிணுங்கி, பூவேலி போன்ற நடிப்பினை இப்போதைக்கு மற்றவர்களால் நினனத்துப் பார்க்க கூட முடியாது.

சில பாடல்களை பாடியும் இருக்கிறார். அவற்றில் அமரனில் பாடிய வெத்தல போட்ட சோக்கில மிக பிரபலமானது. தவிர பிஸ்தா, சிஷ்யா படங்களிலும் பாடியிருக்கின்றார். இது தவிர இவரது இன்னொரு குறிப்பிட தக்க குணாதிசயம் நட்பை பேணும் விதம். பல நடிகர்களால் சிறந்த நண்பர் என்று போற்றப்படுபவர் இவர். அது மட்டுமன்றி சுஹாசினி, குஷ்பூ, ரேவதி என்ற நடிகையராலும் சிறந்த நண்பரென கூறப்படுபவர் இவர். தனது வீட்டு வரவேற்பறையில் இருக்கும் ஒரே ஒரு சினிமாக்காரரின் புகைப்படம் கார்த்திக்கின் புகைப்படம் தானென்று ஒரு முறை குஷ்பூ கூறியிருந்தார்.

பெரும்பாலான கலைஞர்
களுக்கு இருப்பது போலவே இவருக்கும் சில பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம். 89ல் சோலைக்குயில் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ராகிணியை திருமணம் செய்த கார்த்திக் பின்னர் ராகிணியின் சகோதரி ரதியையும் திருமணம் செய்தார்( இதை 99ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் அவராகவே கூறினார்). அதே வேளைகளில் படப்பிடிப்புக்கு தாமதமாக போகும், சிலசமயம் போகாமல் விடும் இவரது பழக்கம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேசமயம் வினியோகஸ்தர்களும் இவரது படங்களை வாங்க தயக்கம் காட்ட இவரது சினிமா வாழ்க்கை பெரும் முடக்கத்தை சந்தித்தது. பின்னர் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது கொடுத்த ஆதரவினால் இவர் ஓரளவு மீண்டு வந்தாலும் அது கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரமாகவே அமைந்தது. ஏற்கனவே வாங்குவாரில்லமல் இவரது படங்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் புதிதாக படம் தயாரிக்க யாரும் தயாராகவில்லை.

இதன் பின்னர் தன் சமூகம் (தேவர்) சார்ந்து சரணாலயம் என்ற சேவை அமைப்பினை தொடங்கிய கார்த்திக் பின்னர் அரசியலில் சேர்ந்து (F)பார்வார்ட் ப்ளாக் என்ற கட்சியின் தமிழ்நாட்டு தலைவராகவும் இருந்தார். பின்னர் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அவரது அரசியல் ரீதியான பார்வைகளை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் கார்த்திக் என்ற மகா நடிகனுக்கான இடம் இன்னுமே காலியாக இருக்கையில் ஒரு ரசிகனாக கார்த்திக்கின் அரசியல்
பிரவேசம் எனக்கு அர்த்தமற்றதாகவேபடுகிறது.

சில வாரங்களின் முன்னர் பத்திரிகைகளில் ஊர்ஜிதப்படுத்தாத ஒரு செய்தி வந்தது. அதாவது மணிரத்ணத்தின் அடுத்த படத்தில் கார்த்திக் ஒரு வில்லனாக நடிக்கிறாராம். அது நிஜமாகவே ஆகட்டும். எப்படி மௌனராகம் ஒரு வாழ்வு தந்ததோ, அப்படியே மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகட்டும். வில்லன் என்பதெல்லாம் ஒரு விடயமே அல்ல. 99% கதாநாயகர்களைவிட ரகுவரனையும், பிரகாஷ்ராஜையும் ரசிக்கும் என்போன்ற ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள்.