Sunday, November 2, 2008

தோற்றுப்போன வெற்றி: என் உயிர்த் தோழன்

மிக தீவிரமான திரைப்பட ரசிகனாக இருந்தும் நல்ல சினிமா, கெட்ட சினிமா என்கிற விவாதங்களில் நான் ஒரு போதும் ஈடுபடுவதில்லை. என்னை பொறுத்தவர சினிமாவை ரசித்த சினிமா, ரசிக்காத சினிமா என்றுதான் பாகுபடுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று கூறுவது இப்போதெல்லாம் ஒரு fashion ஆகவே மாறிவிட்டது. மொழி திரைப்படத்தின் 100வது நாள் விழாவின் போது ஞாநிக்கு பதிலாக இயக்குநர் அமீர் சொன்னது போல நல்ல சினிமாக்களை எல்லாம் திரையரங்கில் சென்று பார்த்திருந்தால், அதனை மற்றவர்களுக்கும் சொல்லியிருந்தால் நிச்சயம் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கும். எந்த இயக்குநர்களும் மோசமான படங்களை எடுக்கவேண்டும் என்று படம் எடுப்பதில்லை. திரைப்பட தயாரிப்பில் பெருமளவு பணமும் முதலீடு செய்யப்படுவதால் வணிகரீதியான வெற்றி பற்றிய தயக்கம் சில சமயங்களில் நல்ல படங்கள் எடுப்பதை தவிர்த்துவிடுகிறது. இந்த தொடரில் நல்ல கதையம்சத்துடன் வெளியாகி, பரவலான கவனிப்பை பெறாத, வசூல் ரீதியாக தோல்வியடைந்த சில திரைப்படங்கள் பற்றிய பார்வை.


என் உயிர்த் தோழன்


பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான படங்களில் ஒன்றான இது வசூல் ரீதியாக எடுபடாமல் போனது பலத்த ஏமாற்றமே. 16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு பூபாளமாக புகுந்த பாரதிராஜா வித விதமான கிராமத்து காதல்கதைகளை திரையில் கவிதையாக விவரிப்பதில் தனித்த ஆளுமை கொண்டவராக விளங்கினார். இடையில் நகர்ப்புற கதைகளுக்கு வந்த போதும் அந்த கதைகளிலும் கூட அவரது கிராமத்து தேவதைகள் வெள்ளையுடையுடன் வந்து போனார்கள், சில காட்சிகள் கிராமங்களில் நடந்தன, அவையே மக்களால் பெரிதளவும் ரசிக்கப்பட்டன (உதாரணம் : நிழல்கள், ஒருகைதியின் டயரி, சிகப்பு ரோஜாக்கள்). இந்த நிலையில் தொடர்ந்து கிராமத்து காதல்களையும், த்ரில்லர்களையும் எடுத்து வந்த பாரதிராஜா சற்று மாறுபட்டு விமர்சனத்துக்குரிய ஒரு காதலை முதல் மரியாதை என்ற பெயரில் இயக்கினார். படம் பெரு வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தாஷ்கெண்டில் வைத்து கௌரவிக்கப்பட்டபோது (வழமைபோல ) உணர்ச்சிவசப்பட்டு இனி சமூக சீர்திருத்த படங்களை மட்டுமெ எடுப்பேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து வேதம் புதிது, கொடி பறக்கிது (இது சமூக நீதிக்காக எடுக்கபடவில்லை, நிதி ரீதியான சில சிக்கல்களை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டது.)

இதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்து கொண்டு தந்த அற்புதமான படம் தான் என்னுயிர் தோழன். இந்த படத்தின் டைட்டில் வரும்போது கூட பாரதிராஜாவின் என்று ஒரு slide வரும் பின்னர் என்னுயிர் தோழன் என்று அடுத்த slide வரும். பின்னர் இளையராஜா என்று அடுத்த slide வரும். அதாவது சேர்ந்து வாசித்தால் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், இளையராஜா என்று அர்த்தம் வரும். ஆனால் இளையராஜாவுடன் இணைந்ததால் 1980ம் ஆண்டு வைரமுத்துவை அறிமுகம் செய்த பின்னர் இந்த படத்தில் தான் (10 ஆண்டுகளின் பின்னர்) முதன் முதலாக வைரமுத்து பாடலெழுதாமல் ஒரு பாரதிராஜா திரைப்படம் வெளியானது.

புதுமுகங்களை வைத்து பெரு வெற்றிகளை பெற்ற பாரதிராஜா கமல், ரஜினி, சத்யராஜ் என்று பெரிய நடிகர்களை வைத்தே படங்களை இயக்குகிறார் என்ற குற்றசாட்டு பலமாக வைக்கப்பட்டபோது மீண்டும் மூன்று புதுமுகங்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த பாபுவே வசனங்களை எழுதியிருந்தார். (இது போலவே புதிய வார்ப்புகள் திரைப்படத்துக்கும் அதன் வசன கர்த்தாவான பாக்யராஜையே நாயகனாக்கியிருந்தார்). மண்வாசனை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா படங்களை போலவே கலைமணியே இதற்கும் கதையெழுதிருந்தார்.

இந்த படத்தின் முக்கிய விடயம் இது சொல்லும் செய்தியாகும். எல்லா அரசியல்வாதிகளிற்கும் உணார்ச்சிவசப்பட்ட இளைஞர்களையும், மாணவர்களையும் தமது சுயநலத்துக்கு உள்ளாக்கினாலும் அதை விமர்சித்து எடுக்கப்பட்ட படங்கள் மிக குறைவு. இதற்கு காரணம் ஒரு புறம் அரசியல்வாதிகளால் வரக்கூடிய எதிர்ப்பாக இருந்தாலும் இன்னொரு காரணம் அரசியலில் ஈடுபடும் இளைஞர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்ற நிஜத்தை முகத்தில் அடிப்பது போல சொல்லி திரையரங்குகளுக்கு இளைஞர்களின் வருகை குறைந்துவிடக்கூடாதே என்பதுதான். இன்னும் சொன்னால் புதிய மன்னர்கள் (விக்ரம் நடிக்க விக்ரமன் இயக்கம்), சத்யா (கமல் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்) போன்ற பெரிய நட்சத்திரங்கள் இணைந்த படங்கள் பெருந்தோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிட்டு (ரமா) வசிக்கும் கிராமத்தில் நாடகம் போடவரும் தென்னவன் (ரமேஷ், பின்னர் தனது பெயரை தென்னவன் என்றே மாற்றி ஜெமினியில் “கை”யாக நடித்து பிரபலமானவர்) சிட்டை காதலித்து அவளை கூட்டிக்கொண்டு சென்னை செல்வதாக ஏமாற்றி அவளது நகைகளையும் எடுத்துக்கொண்டு அவளை ரயிலில் விட்டு விட்டு பிரிகிறான். அவள் தர்மனிடம் அடைக்கலம் கோருகிறாள். அதே நேரம் உள்ளூர் அரசியல்வாதி டெல்லியும் (லிவிங்ஸ்டன்) அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயல்கிறார். அப்போதைய எதிர்கட்சியான பொதுக்கட்சியின் தொண்டனான தர்மன் டெல்லியின் முயற்சிகளை முறியடைத்து அவளை மணக்கிறான். இதே சமயம் தென்னவனும் போர்முரசு பொன்வண்ணன் என்ற பெயரில் நடிகனாகிறான். டில்லி அரசியல் லாபம் தேடி டெல்லி பொதுக்கட்சியில் இணைந்து பின்னர் போர்முரசு பொன்வண்ணனையும் அதேகட்சியில் இணைக்கிறான். தர்மன் – பொன்னி இருக்கும் குயிலு குப்பம் தொகுதியில் போர்முரசு பொன்வண்ணன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறான். அவனை அடையாளம் காணும் பொன்னி தர்மனிடம் உண்மையை சொல்ல அவன் கட்சி செயல்பாடுகளிலிருந்து விலக, ஊரே பொதுக் கட்சியை புறக்கணிக்கிறது. அதன் பின்னர் கட்சி தலைவர் தர்மனை அழைத்து அழகு தமிழில் உணார்ச்சிமயமாக் ஒரு உரையாடலை நிகழ்த்த தர்மன் மனம் மாறி மீண்டும் தன் தலைவரின் நியாயங்களை பொன்னியிடம் சொல்லுகிறான். மீண்டும் கட்சி பணியில் முழுவீச்சில் இறங்குகிறான். தலைவர் புகழ்பாடி போஸ்டர்களை ஒட்டிவிட்டு, தேர்தல் பணிசெய்து களைத்துபோய் தன் சக கட்சி தொண்டனிடம் உணர்ச்சிவசப்பட்டு தன் தலைவரின் புகழ்பாடி, அவருக்கு பணி செய்யும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தர்மனை கொன்று அந்தப் பழியை எதிர்க்கட்சி மீது போட்டால் தாம் பெரு வெற்றி பெறலாம் என்ற அவன் கட்சியின் சதியில் பரிதாபமாக கொல்லப்படுகிறான். அதன் பின்னர் இறுதி காட்சியில் ஊரே கூடி போர்முரசு பொன்வண்ணனை, கட்சி தலைவரை, டெல்லியை என்று எல்லாரையும் கொன்று தள்ளுகிறது.


சமுதாயமும் அதில் இருக்கின்ற கட்சிகளும் எப்படியெல்லாம் மக்களை, அப்பாவி மனிதர்களை தமது சுயநலத்துக்கு பகடைகளாக பாவிக்கின்றாது என்று அருமையாக சொல்கிறதுபடம். எந்த விடயத்தையும் அளவுக்கு மிஞ்சி உணார்ச்சிவசப்பட்டு பார்க்கின்ற தமிழர்களின் நிலையை படம் துல்லியமாக் சொல்கின்றது. கட்சிதலைவர் பொன்னம்பலத்தை விடுதலை செய்யவேண்டும் எனக்கேட்டு தர்மன் தீக்குளிக்கும் காட்சி ஒரு உதாரணம். இந்த தீக்குளிக்கும் கலாசாரம் மிகப்பெரிய ஒரு பித்தலாட்டம் என்பது என் கருத்து. நடிகர்கள் இறக்கின்றபோது, அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரி, அவர்கள் புதிய பட அறிவிப்பை செய்யவேண்டும் என்றேல்லாம் கேட்டு செய்யப்படும் தீக்குளிப்புகள் மிகப்பெரிய அபத்தங்கள். படத்தின் இறுதியில் வரும் தர்மனுடனான கட்சிதலைவரின் உரையாடல் அரசியல்வாதிகளின் கபட பேச்சுக்கு ஒரு உதாரணம். தமிழர்களை பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய டாப் 10 குணாம்சங்களுல் முண்ணனி வகிப்பது அவர்களது பேச்சாற்றல். உணர்ச்சிவசப்படுத்தி மக்களை அறிவுரீதியாக சிந்திக்க வைக்காமல் உணர்வுபூர்வமாக சிந்திக்க வைக்கும் இந்தப் பேச்சுகளால் எமது வாழ்க்கைநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டது என்று கடந்த கால வரலாற்றை பார்த்தால் தெரியும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னியுடனான தென்னவனின் பேச்சுகளும் தர்மனுடனான பொன்னம்பலத்தின் பேச்சுகளும் இதற்கு உதாரணங்கள். அதேபோல மக்கை கையில் பிடித்துகொண்டு எல்லாரும் பேசும் அப்த்தமான பேச்சுகள் (உதாரணமாக LIC கட்டடத்தை இரவில் ஏழைகள் தஙும் இடமாக மாற்றவேண்டும் போன்றா கருத்துகளை இப்படத்தில் ஒரு அரசியல்வாதி பேசுகிறார்). மேலும் எல்லா கதாபாத்திரங்களும் வழமையான தமிழில் கதிக்கின்றன, ஆனால் போலியான, மற்றவரை ஏமாற்றும் விடயங்களை பேசும்போது மட்டும் அழகு தமிழுக்கு மாறுகின்றன. திராவிடக்கட்சிகளினால் தமிழரின் பல அடையாளங்கள் காக்கப்பட்டாலும், இந்த ஆடம்பரமான அலங்கார வார்த்தைகளாலான பேச்சுகளும், ரசிகர்மன்ற, கட்சி தொண்டர் என்கிற, கட் – அவுட் போன்ற மக்களின் அடிப்படை வாழ்வை பெருமளவு பின்னோக்கி தள்ளிய கூறுகள் வாழ்வியலுடன் இணைந்தது மிகப்பெரிய ஒரு பாதிப்பே.



படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஒரு குறியீடாக காட்டபடும் முதியவரின் கதாபாத்திரம். அது பார்வையாளரை / அவர்களது மனநிலையை குறிப்பதாக அமைகின்றது. இறுதிக்காட்சியில் அந்த கதாபாத்திரம் மூலமாகவே டில்லி (லிவிங்ஸ்டன் - அப்போது அவர் ரஞ்சன் என்ற பெயரில் நடித்துவந்தார்) மற்றும் அரசியல்வாதிகள் கதாபாத்திரங்கள் கொல்லப்படுகின்றன. இதே போன்ற உத்தி பாலாவின் சேது திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதேபோலவே கட்சிக்காரர்கள் தயாரிக்கும் தர்மன் பற்றிய மரண அறிவித்தலிலும் அதேபோல தர்மன் எழுதும் தலைவர் ”பொன்னம்பபலம் வாழ்க” என்கிற சுவரோர வரிகளிலும் காண்பிக்கபடும் எழுத்துப்பிழைகள் கூட இயக்குணரின் வேண்டுமென்றே செய்தகுறியீடுகளாஅகத்தான் இருக்கவேண்டும்.


இந்தப் படத்தின் வணிக ரீதியான தோல்வியை நான் மக்களின் மனநிலையுடனேயே தொடர்புபடுத்தி பார்க்கின்றேன். என்னுயிர் தோழன் சொல்லும் நீதிகளை எவருமே ஒத்துக்கொள்ளப்போவதில்லை. கேட்டால் எனது தலைவர் அப்படிப்பட்டவரில்லை என்பார்கள். இருக்கலாம், ஆனால் ஒரு தனிமனிதனை தலைவனாக ஏற்று அவன் சொல்லும் கருத்துகளை எல்லாம் கண்மூடி தலையாட்டி மாற்றுகருத்துக்களை அடியோடு நிராகரிக்கும் சமுதாயம் மீளவே முடியாத பின்னடைவைத்தான் சந்திக்கும். இது வரலாறு சொல்லும் பாடம்.

20 comments:

ஆயில்யன் said...

அரசியல் கட்சி தொண்டன் வாழ்க்கை வரலாறு பற்றி நான் முதன் முதலாய் பார்த்து தெரிந்துக்கொண்ட படம்! இதே கேரக்டர்களில் வாழும் நிறைய மனிதர்களில் நானும் ஒருவரை சந்தித்திருக்கிறேன்! - படத்தில் வரும் பாபுவினை போலவே ! -இப்பொழுது எப்படி இருப்பாரோ என்று நினைக்கவைத்தது பதிவினைபடித்து முடித்தப்போது!

முழுமையாய் படத்தினை பற்றிய பகிர்தலுக்கு நன்றிகளுடன்...

Anonymous said...

இப்படியானவர்களை பார்க்கும் போதெல்லாம் வரும் வெறுமையை நான் உணர்ந்திருக்கிறேன்.

இளம் வயதில் ஒரு மாயையில் சிக்கி சின்னாபின்னமாகும் வாழ்க்கை இவர்களுடையது.....

சதங்கா (Sathanga) said...

//அரசியல் கட்சி தொண்டன் வாழ்க்கை வரலாறு பற்றி நான் முதன் முதலாய் பார்த்து தெரிந்துக்கொண்ட படம்!//

இதுக்கு கூடவா ரிப்பீட்டு என்று கேட்கலாம். ஆனால் எனக்கும் ஒரு சராசரி தொண்டனின் வாழ்வை, எப்படி அரசியலாக்குகிறார்கள் அன புரிந்து தெரிந்து கொண்ட படம். இதை எனது 'சினிமா' பதிவிலும் சொல்லியிருக்கிறேன்.

அருண்மொழிவர்மன் said...

//அரசியல் கட்சி தொண்டன் வாழ்க்கை வரலாறு பற்றி நான் முதன் முதலாய் பார்த்து தெரிந்துக்கொண்ட படம்! இதே கேரக்டர்களில் வாழும் நிறைய மனிதர்களில் நானும் ஒருவரை சந்தித்திருக்கிறேன்! - படத்தில் வரும் பாபுவினை போலவே ! -இப்பொழுது எப்படி இருப்பாரோ என்று நினைக்கவைத்தது பதிவினைபடித்து முடித்தப்போது!//

இந்த நிலை ஏன்ந்தான் தமிழர்களிடம் தான் அதிகமாக இருக்கிறாதோ தெரியாது. இந்த ரசிக மன்ற கலாசாரமும் இதைபோலவெ ஒரு விஷ விதை எனபது என் கருத்து.

இனிமேலாவது இவர்கள் திருந்துவார்களா என்பது தான் என் கவலை

அருண்மொழிவர்மன் said...

//இளம் வயதில் ஒரு மாயையில் சிக்கி சின்னாபின்னமாகும் வாழ்க்கை இவர்களுடையது.....//

இந்தப்படம் வந்து கிட்ட தட்ட 20 வருடமாகியும் இன்னும் இந்த நிலை மோசமாகியிருப்பது தான் யதார்த்தம்

அருண்மொழிவர்மன் said...

//ஒரு சராசரி தொண்டனின் வாழ்வை, எப்படி அரசியலாக்குகிறார்கள் அன புரிந்து தெரிந்து கொண்ட படம்.//

இதைபோலவே சத்யா படத்திலும் அழகாக காட்டியிருப்பார்கள்

தமிழ் விரும்பி said...

நான் படம் பார்க்கவில்லை. ஆனால் எழுத்து ஓட்டத்தில் உங்கள் எண்ண அலைகளை அறிய முடிகிறது. உணர்ச்சி வசப்படும் நிலை என்பது நேரத்தைப் பொறுத்தது. அவரவர் மனநிலையைப் பொறுத்தது. உணர்ச்சி வசப்படாமல் மனிதன் இருக்கமுடியாது என நினைக்கிறேன். ஆனாலும் அதை தவறாக பயன்படுத்துவது அல்லது பயன்படுத்த தூண்டுவது மிகப்பெரிய தவறு. தப்புகளுக்கு தண்டனை நிச்சயம் உண்டுதானே. அருமையான பகிர்தல்...!நன்றி.

அருண்மொழிவர்மன் said...

உணர்ச்சிவசப்படுவது வேறு, உணார்ச்சிவசப்படுத்துவது வேறு. நான் சொல்லவந்தது இரண்டிலிருந்தும் அவதானமாக இருக்கவேண்டும் என்பதை. எனினும் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

கானா பிரபா said...

சிறப்பான ஒரு படம் குறித்து சிறப்பான பகிர்வு அருண்மொழி, எனக்கு எப்போதும் பிடித்த நிஜவாழ்வைப்பிரதிபலிக்கும் சித்திரங்களில் இது என்றும் உண்டு. அரசியல் அழுக்கை சிறப்பாக காட்டிய பாரதிராஜா முத்திரை இது.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பிரபா

ஆனால் இப்படியான நல்ல படங்கள் சரியான கவனத்தை பெறாமல் போவது பெரும் வேதனை. இதில் வருகின்ற சில உரையாடல்களின் ஒலிவடிவத்தையும் தரவேண்டும் என்று நினத்திருந்தேன். முடியவில்லை...

மிக விரைவில் அதையும் தருவேன்

அதிரை ஜமால் said...

உண்மையில் இதுவரை இந்த படம் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை அல்லது நான் அமைத்துக்கொள்ளவில்லை.

உங்கள் விமர்சனமே படம் பார்த்த உணர்வு தரும் போல் உள்ளது.

SUREஷ் said...

இது போண்ற சில படங்கள் வெற்றீ பெற்றிருக்க வேண்டும். ஆனால்............

SUREஷ் said...

(உதாரணமாக LIC கட்டடத்தை இரவில் ஏழைகள் தஙும் இடமாக மாற்றவேண்டும் போன்றா கருத்துகளை இப்படத்தில் ஒரு அரசியல்வாதி பேசுகிறார்).



இப்ப இதவிட சூப்பர பேசுவம் அப்பூ

SUREஷ் said...

நீங்கள் எழுதுகின்ற இந்த விமர்சனம்...

பாரதிராஜாவின் வெற்றீ

SUREஷ் said...

கொடி பறக்கிது (இது சமூக நீதிக்காக எடுக்கபடவில்லை, நிதி ரீதியான சில சிக்கல்களை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டது.)



உருவாக்கியதாகச் சொல்லுவார்கள்

அருண்மொழிவர்மன் said...

//உங்கள் விமர்சனமே படம் பார்த்த உணர்வு தரும் போல் உள்ளது//
நன்றி. ஆனால் நிச்சயமாக இந்தப் படத்தை பாருங்கள். வாழ்க்கை பற்றிய மிகப்பெரிய சொற்பொழிவை கேட்டதாக உணர்வீர்கள். தமிழில் வந்த மிக முக்கியமான அரசியல் படங்களில் ஒன்று.

அருண்மொழிவர்மன் said...

//நீங்கள் எழுதுகின்ற இந்த விமர்சனம்...

பாரதிராஜாவின் வெற்றீ//

காலமாற்றத்தால் ஓரங்கட்டபட்ட பெருங்கலைஞன் பாரதிராஜா. மேலுன் அவரது கூட்டணி கலைந்ததும் (இளையராஜா - வைரமுத்து) இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்

//கொடி பறக்கிது (இது சமூக நீதிக்காக எடுக்கபடவில்லை, நிதி ரீதியான சில சிக்கல்களை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டது.)



உருவாக்கியதாகச் சொல்லுவார்கள்

//படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லைதான். ஆனால் எடுக்கும்போது இருந்த நோக்கம்தான் நான் குறிப்பிட்டது

Chuttiarun said...

hi please visit www.thamizhstudio.com this site for short film and documentary film in tamil.. pleas visit us and call me back will talk something.

thanks,
arun m.

லேகா said...

எனக்கு பிடித்த பாரதிராஜா படங்களுள் ஒன்று.படத்தின் இசை குறித்து சொல்லாம விட்டுடிங்களே."குயிலு குப்பம்...." பாடல் எப்போதும் எனக்கு பிடித்த ராஜா பாடல்களுள் இருக்கும்.

மொத்தத்தில் நல்ல பதிவு.எதிர்பாரா தோல்வியை சந்திக்கும் இதுபோன்ற திரைப்படங்கள் வணிக ரீதியான வெற்றி பெறாவிட்டாலும்,நம்மை போன்றவர்கள் அதன் சாரத்தை உணர்ந்து பேசிகொண்டிருப்பது அதற்கு கிடைத்த வெற்றியே!!

அருண்மொழிவர்மன் said...

உண்மைதான்,

படம் சொல்லும் செய்தியில் கவனம் செலுத்தியதில் அதன் பாடல்கள் பற்றி கூறாமல் விட்டு விட்டேன். எனக்கு அதிகம் பிடித்த பாடல் ஏ ராசாத்தி பூச்சூடி.....

கோபுர வாசலிலே போலவே இதிலும் ராஜா பிரபல பாடகர்களாஇ பிண்ணனி மாட வைத்திருப்பார்.

Post a Comment