அது 2006ம் ஆண்டு. கனேடிய புலம்பெயர் வாழ்வு தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்த காலம் அது வரை கொண்டாடிய உறவுகளும், நட்புக்களும், நம்பிக்கைகளும் தம் கோரமான சுய முகத்தைக் காட்டி என்னைக் கேலிபேசிக் கொண்டிருந்த காலம். புலம்பெயர முன் ஈழத்தில் கிடைக்கப் பெற்று, உலகெல்லாம் சிதறிக் கிடந்த சில நட்புக்களும், ஓரிரு உறவுகளும், எப்போதும் நான் நேசித்த புத்தகங்களும், திரைப்படங்களும் மட்டுமே எனக்கு துணை வந்து கொண்டிருந்தன. எப்போதும் கூட இருந்த இருபதுக்கு மேற்பட்ட நட்புகளும், ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியும் மெல்ல விலகிச் செல்ல தனிமையின் குழந்தையாய் வெறுமையை உணரத் தொடங்கினேன். அதுவரை புத்தகங்களையும் இதழ்களையும் இணையத்தில் மட்டுமே வாசித்து வந்து கொண்டிருந்த எனக்கு தனது வலைப்பதிவு ஒன்றினை அவுஸ்திரேலியாவில் இருந்து நண்பன் தெய்வீகன் அறிமுகம் செய்தான். அவன் வலைப் பதிவும், அதில் இடப்படிருந்த பின்னூட்டங்களும் எனக்கு அப்போது ஆச்சர்யங்களாக இருந்தன. அந்த பிரமிப்பு தீர முன்னரே தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றையும் அறிமுகம் செய்தான்.
தமிழ் மணத்தில் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் டீசே தமிழனின் எழுத்துக்களைப் பார்த்து அதிகம் பிரமித்து ஒரு ரசிகனாகவே அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். இதே நேரத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு பதிவர் கானா பிரபா. அப்ப்போது அவர் அதிகம் நினைவுப் பதிவுகளாகவும், மலையாள மற்றும் பிறமொழி திரைப்படங்கள் பற்றியும் எழுதிக் கொண்டிருந்தார். அவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விடயங்கள் எனக்கிருந்தன. இயலுமானவரை பின்னூட்டங்கள் மூலம் செய்யப்பட்ட பகிர்தலின் இடையே, பகிர்தலுக்கு பின்னூட்டம் மட்டுமே வழி என்ற நிலையில் இருந்த போதாமையை நான் உணார்ந்து கொண்ட ஓர் இரவில் நான் என் கருத்துக்களை, எண்ணங்களை, கோபங்களை, பேசுவதற்கு எவருமே கிடையாத தனிமையை பதிவுகள் மூலம் வெளியிடத்தொடங்கினேன்.
பதிவுகளுக்கு சொல்வதெல்லாம் உண்மை என்று பெயர் வைத்த பின்னர் என்ன பெயரில் எழுதலாம் என்று யோசித்த போது அந்த நாட்களில் ராஜராஜசோழன் மேல் இருந்த அதீதமான காதலினால் (இதற்கு பொன்னியின் செல்வனும், பாலகுமாரன் எழுதிய ராஜராஜசோழன் பற்றிய கதைகளும் காரணமாக இருக்கலாம்) அருண்மொழிவர்மன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். ஆரம்பத்தில் நான் எழுதிய சில பதிவுகளை வாசிக்கும்போது வெட்கவே தோன்றுகிறது. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை உலக தரத்தில் ஒரு சினிமா என்று சொல்கிற முட்டாள்தனத்தை எல்லாம் செய்திருக்கிறேன். கவிதைகள் என்கிற பெயரில் சில கொடுமைகளை (இது சாடிஸத்தின் கீழ் கூட வரும்..???) கூட பதிந்திருக்கிறேன். அண்மையில் நண்பர் மெலிஞ்சி முத்தன் சில பழைய பதிவுகளை நீக்கி விடலாமே என்றூ ஒரு வேண்டுகோளாக வைத்தபோதும் கூட அதை நான் நீக்கவில்லை. நான் எழுதிய எல்லா அபத்தங்களுக்கு இடையிலும் அப்போதைய என் மன நிலையும், பேதமையும் நிறைந்தே இருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்துதானே நான். தவிர, எத்தனை மேற்படிப்பு படித்தாலும், “அ”னா “ஆ”வன்னா எழுதிப் பழைய பழைய கடதாசிகள் மற்றவர்களுக்குத்தான் குப்பைகள். எழுதினவனுக்கு பொக்கிஷங்கள்.
பதிவுகள் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் தொழினுட்ப ரீதியாக இருந்த சில அறிவுக் குறைவுகள் காரணமாக என்னால் அவற்றை தமிழ்மணத்தில் இணைக்க்வோ, பதிவுப் பட்டையை இணைக்கவோ முடியவில்லை. அப்போது என்னுடன் உலாவந்த தாழ்வு மனப்பாண்மை காரணமாக அதற்கான முயற்சிகளைச் செய்யக்கூடவில்லை. ஒரு இன்ப அதிர்ச்சியாக “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்று நான் எழுதிய பதிவு ஒன்றிற்கு நான் அதிகம் கொண்டாடிய டிசே தமிழன் பின்னூட்டமும் இட்டு, பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கவும் கேட்டுக்கொண்டார். இதே போன்று கானாபிரபாவும் கேட்டுக்கொண்டதுடன், என்னுடன் எந்த அறிமுகமும் இல்லாதபோதும், என் வலைப்பதிவில் பதிவுப்பட்டையை இணைத்தும், வேறு சில வசதிகளைச் செய்தும் தந்தார். தனிப்பட்ட வாழ்விலும் நிறைய சிக்கல்களுல் சிக்கி உழன்று கொண்டிருந்த நாட்களில் எனக்குப் பெரும் நம்பிக்கையும், என் தனிமையை, மன உளைச்சல்களைக் கொல்ல ஒரு வெளியாக ப்திவுகளைத் தொடர உதவிய இருவர்க்கும் காலமெல்லாம் நன்றிகள்.
இதன்பின் ஒரு நீண்ட இடைவெளி. மன உளைச்சல்களால், தனிப்பட்ட சிக்கல்களால், உறவுகள் தந்த ஏமாற்றங்க்ளால், இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னையால் நண்பர்கள் வட்டமே சிதறி விட ஏற்பட்ட வெறூமையினால் அதிகம் அல்லாடினேன். மீண்டும் ஒரு முறை கானாபிரபா மடல் எழுதினார். ஏன் நீண்ட காலம் பதிவுகள் எழுதவில்லை என்று கேட்டு, சுகம் விசாரித்து, மீண்டும் எழுதும்படி மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டிருந்த கடிதம் அது. அன்று இருந்த விரக்தியில் “என் மீதும் அக்கறைப் பட மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை தந்த கடிதம் அது. 2007ம் ஆண்டு பிப்ரவரியில் எழுதிய பதிவின் பின்னர் மீண்டும், 2008 மேயில் பதிவெழுதத் தொடங்கினேன். இடைப்பட்ட இந்தக் காலத்தில் சக பதிவர் விஜேசந்திரன் டொரண்டோ வந்திருந்தார். வலைப்பதிவுகளில் ஏற்பட்ட அறிமுகத்தில் அவர் டொரண்டோ வரும்போது சந்திப்பதாக உறுதி செய்திருந்தேன். உண்மையில் அதில் மிகவும் ஆவலாயும் இருந்தேன். ஆனால் அவர் இங்கு வந்திருந்த நேரம் தேவையில்லாத ஒரு வழக்கு காரணமாக அவர் பலமுறை அழைத்தும் சந்திக்க முடியாமல் இருந்தேன். இப்போதும் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் வேதனை அது.
எந்த நேரத்திலும் நான் மன் அழுத்த நோய்க்கு உள்ளாகிவிடலாம் என்று குடும்ப வைத்தியர் அபாயச் சைகை காட்டியிருந்த நேரத்தில் டிசே தமிழன மற்றும் நிவேதாவை ஒரு குறும்பட வெளியீட்டு விழாவில் முதன்முறையாக சந்தித்தேன். காலம் செல்வம் அறிமுகம் செய்துவைத்தார். அதன் பின்னர் அருண்மொழிவர்மன் என்று என்னை அறிமுகம் செய்து நிறையப் பேசினோம். ” வலைப்பதிவுகளுக்கு நான் புதியவனாக இருந்தாலும் உங்களின் பல பதிவுகளை படித்துவிட்டேன். எனது இலக்கிய தேடல்களுக்கும் வழிகாட்டல் இல்லாத வாழ்க்கைக்கும் உங்கள் அறிமுகம் உதவும் என்று நம்புகிறேன்.” அவரது பதிவொன்றிற்குப் பின்னூட்டமிட்டதனை அதிகம் நம்பத் தொடங்கினேன். அவர் மூலமாக நிறைய எழுத்தாளர்கள், இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அனேகமாக எல்லா இலக்கிய விழாக்களிற்கும் செல்லத் தொடங்கினேன். சராசரி, நடுத்தர புத்தகங்களை விட்டு விலகி நவீன இலக்கியங்களை வாசிக்கவேண்டும் என்ற அதீதமான ஆவலும், எதை வாசிப்பது என்ற குழப்பமும் நிறைந்திருந்த என்னை பல திசைகளில் பயணிக்க பழக்கப்படுத்தினார். அருமையான பல புத்தகங்களை பகிர்ந்துகொண்டார். மெல்ல மெல்ல என்னை மன உளைச்சல்கள், அழுத்தங்கள், அலைச்சல்களில் இருந்து மீட்க அதிகம் உதவியது அவர் அறிமுகம். கிட்டத் தட்ட இதே காலப்பகுதியில் ஊரில் என் தோழனாயிருந்த, பிரதீபனின் கனேடிய வருகையும் எனக்கு ஆதரவாக இருந்தது. தூக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு விடிய விடிய இலக்கியம், அரசியல் என்று நிறையப் பேசினோம். பேசுவதற்கு ஆட்களே இல்லை என்ற தனிமையில் இருந்து மனம் விட்டு நிறையப் பேசலாம் என்று நட்புகள் அருகிலேயே நெருங்கத் தொடங்கின. அனேகமான என் எல்லாப் பதிவுகளின் முதல் வாசகனாய் இருந்து அதிகம் ஊக்கப்படுத்திய, கடல் கடந்து இருந்தாலும் பெரும்பாலும் தினமும் கதைத்து விடுகிற, 17 ஆண்டுகால நட்பில் சண்டை பிடிப்பதற்கான உரிமையை எப்போதும் தந்துவிடுகிற கதியால் தந்த ஆதரவும் பெரும்பங்கு.
பொதுவாக நிறையப் பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டமிடுவது மிகக்குறைவு. பல பதிவுகளை வேலை நேரத்தில் வாசிப்பதாலும் (தமிழில் தட்டச்சும் வசதி கிடையாது) இயல்பாகவே எனக்கு இருக்கும் சோம்பேறித் தனத்தாலும் பின்னூட்டமிடுவதற்கான சந்தர்ப்பங்கள் தவறிப்போய்விடுகின்றன. அப்படி இருந்தும் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவு தரும் கதியால், தமிழன் கறுப்பி, துர்க்கா-தீபன், கிருஷ்ணா, வாசுகி, பாரதி போன்றவர்கள் நிச்சயம் நன்றிக்குரியவர்கள். அது போலவே எந்த அறிமுகமும் இல்லாமல் எனக்கு சுவையார்வ பதிவர் என்று கௌரவம் தந்து நல்ல அறிமுகம் தந்த கோவி. கண்ணனும். ஒரு மூத்த, பிரபல பதிவரான இவர் தந்த அறிமுகம் எனக்கெல்லாம் பெரும் ஊக்கம் தருவது.
-2-
அண்மையில் இந்த பதிவுலகம் எனக்கு இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. அண்மையில் கொழும்புவில் நடந்து முடிந்த பதிவர் சந்திப்பின் படங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன. படங்களைப் பார்த்த நண்பன் விசாகன் msn messenger மூலம் தொடர்புகொண்டு “டே உனக்கு “புல்லட்” யாரென்று தெரியுமா? என்று கேட்டான். கேள்விப்பட்டிருக்கிறேன், தெரியாதென்றேன். அவன் உடனே புல்லட்டின் டம் ஒன்றை அனுப்பினான். ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனேன். அதே மூக்கு, அதே கண், அதே சில்க் தலை முடி, அவனேதான். 95ல் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் ஒரு பாரிய இட

கடிதம் 1
வணக்க்ம்
புல்லட்,
நினைவிருக்கிறதா? என் பெயர் சுதர்ஷன் / சுதன் அண்ணா என்றழைப்பீர்கள்
கொடிகாமத்தில் ஒரே வீட்டில் இருந்தோம்.
இன்றுதான் விசாகன் உங்கள் படத்தைப் பார்த்து நீங்கள்தான் புல்லட் என்று சொன்னான்.
உங்கள் சுகம் எப்படி. நான் சுகமே உள்ளேன். இப்போது கனடாவில் இருக்கிறேன். மிச்ச எல்லாரும் கொழும்பில்.
உங்கள் தந்தையின் செய்தி எனக்கு தாமதமாக தான் கிடைத்தது
சொரி புல்லட்
தம்பி, தங்கை என்ன செய்கிறார்கள்?
அம்மா எப்படி இருக்கிறார்?
நான் சும்மா அருண்மொழிவர்மன் என்ற பெயரில் solvathellamunmai.blogspot.com என்று எழுதுகிறேன்....
உங்களுடன் நிறைய கதைக்க வேணும் போல உள்ளது....
அந்த கொடிகாம வீட்டில் இருந்து 3 பதிவர்கள் உருவாகி விட்டோம்
(நான், நீங்கள், கதியால் என்ற பெயரில் எம் நண்பன்)
உஙகளிடன் ஃபேஸ்புக் இருந்தால் sutharshan@hotmail.com ல் என்னை இணைக்கலாம்... இல்லை நான் இணைக்க முயல்கிறேன்
வேற்ன்ன...
சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்
சுதர்ஷன்
கடிதம் 2
கதிரை மலைக்கந்தா! அட அநியாயமே? உங்கள் முழுப்பெயர் சுதர்சனா? நான் பெஸ் புக்கில தேடாத கொம்பினேசன் இல்லை .. சுதன் சிறிநிவாசன் , சிறிநிவாசன் சுதன் என்று .. உங்கள் ஏனைய சகோதரர்களின் பெயர் மறந்து விட்டேன்.. தீபன் என்று என்வயதில் ஒருத்தன் இருந்ததாக ஞாபகம்.. மற்றது ஒரு 3 வயது மூத்த ஒருவரும் ஒரு தங்கையும் இருக்கிறாரக்ளல்லவா? அம்மாவின் பெயர் தவனாக்கா தானே? கடவுுளே.. எவ்வளவு காலம் 15 வருடங்களாகிவிட்டது.. ம்ம்.. நான் பல்கலையில் எஞ்சினீரிங் முடித்து ஒரு அமெரிக்க கம்பனியில் வேலை செய்கிறேன்.. தம்பியார் ஓரிரு வருடங்களில் மருத்துவராகி விடுவார்.. தங்கை ஏ எல் படிக்கிறார்.. அப்பம்மா 2000 இல் இறந்து விட்டார்.. அப்பா 2006 இல் இறந்து விட்டார்.. வேறு புதினங்கள் இல்லை.. நான் மேல் படிப்புக்காக கனடா அல்லது அமெரிக்கா செல்லும் எண்ணம் உள்ளது.. 2011 இல் என்று முடிவெடுத்துள்ளேன்.... மற்றது உங்கள் வீட்டாருடன் கட்டாயம் தொடர்பை ஏற்படுத்துவேன் முகவரி தரும் பட்சத்தில்.. வேறு என்ன? உங்களின் முகம் ஞாபகம் இல்லை.. ஒரு உயரமான நெடுத்த உருவம் சறமும் டீசேட்டும் போட்டு மங்கலாக ஞாபகம் இருக்கிறது..
தில்லானா முத்து பட பாட்டு கேட்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் ஒரு முறை வந்து போகும்.. ஏனெனில் இந்த பாட்டு முதன்முதல் கேட்டது உங்கள் டேப்ரெக்கோடரில“தான்.. காதலன் பெடராப் பாட்டு நீங்கள் கொண்வந்தபோது கேட்கமுடியாமல் அவஸ்தைப்பட்டதும் ஏறத்தாழ 8 வருடங்களுக்கு பிறகு அந்த பாட்டை கேட்க முடிந்த போது சிரித்துதும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.. உண்மையை சொலவதானால் யாழில் இருக்கும் போதெல்லாம் உங்களயெல்லாம் நினைத்துப்பார்த்ததோ அப்பாவிடம் நீங்கள் எங்கேயென்று விசாரித்ததோ இல்லை.. இப்போது தனிமையில் கொழும்பில் இருந்து பழவையனவற்றை மீட்கையில்தான் மனது கனக்கி றது..
உங்கள் தாயார் ஒரு விசேடமாக புட்டு செய்வார்.. நான் சாகமுன்பு அதை எப்படிச் செய்வது என்று தெரிந்து விடவேண்டுமென்ற முயற்சியில்தான் உங்களை தேடும் மயற்சியில் இறங்கினேன்.. சிரிப்பாயிருக்கிறதா? அவர் ஒரு முறை செய்த சக்கரைப்புட்டு இன்னும் நாவில் நிற்கிறது.. அவர் முகமும் மற்ந்து விட்டது.. எப்படி உள்ளார்கள் எல்லாரும் ? கேட்டதாக சொல்லுங்கள்.. உங்களுக்கு திருமணமாகி விட்டிருந்தால் மனைவி குழந்தைகளை க்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்..
நீங்கள் தொடர்பு கொண்டது இன்ப அதிர்ச்சி.. விசாகன் அண்ணாவுக்கு நன்றிகளை சொல்லுங்கள்.. அவர் தற்போது சிங்கையில்தான் உள்ளாரென்று நினைக்கிறேன்.. அவர் தொடர்பும் இல்லை..
பரபரப்பில் எல்லாம் உளறலாக எழுதி விட்டேன்.. தொகுத்து வாசித்துக்கொள்ளுங்கள்.. :) உங்கள் பதிவை வீடு சென்று அறுதலாக வாசிக்கிறேன்..
நான் சின்னப்பிள்ளைத்தனமாகத்தன் எழுதுவேன்.. பதிவுலகில் சந்திக்க நேர்ந்தது பாரிய மகிழ்ச்சி..
தொடர்பிலிருங்கள்..
புல்லட்..
கடிதம் 3
mmm புல்லட்.
மிகவும் சந்தோஷமாக உள்ளது இப்படியாவது தொடர்பு கிடைத்ததே என்று. நான் நிறைய உங்களைப் பற்றி யோசிப்பேன். விசாகன் சொன்னான் சிலதடவைகள் உங்களை சந்தித்துக் க்தைத்ததாக, ஆனால் தொடர்புகள் இருக்கவில்லை என்று
புல்லட் உண்மையில் அந்தக் கொடிகாம வீட்டில் நிறையப் பேர் இருந்தாலும், நாங்கள் இரண்டு குடும்பமும் நிறையப் பழகினோம் இல்லையா?. நீங்கள் ஒரு கிரிக்கெட் பட் செய்வித்தீர்கள். அதைக் கொண்டு கிரிக்கெட் எல்லாம் விளையாடி இருக்கிறோம்... அதுவும் ஐயாவுக்குத் தெரியாமல். ம்ம் அது ஒரு காலம்.
இன்று எங்கள் வீட்டாரிடம் கொழும்பில கதைப்பேன். அப்போது உங்களைப் பற்றி சொல்வேன். புல்லட்,, உங்கள் தொலைபேசி இலக்கம் என்ன?.
தந்தால் கதைப்பேன்....
வேறென்ன புல்லட், உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்வேன்.
உங்கள் படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். உங்களில் முகத்தில்ல் அதே சாயல் உள்ளது. ஆனால் வளர்ந்துவிட்டீர்கள். மூக்கும், கண்ணும் அதே மாதிரி உள்ளது...
புல்லட், நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை, (உங்கள் உண்மைப் பெயரை மறைத்து) எனது ப்ளாக்கில் போடலாமா? உங்களுடன் உறவு மீண்டது பற்றி ஒரு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்
Enrenrum Anbudan ----------------Sutharshan
கடிதம் 4
நிச்சயமாக செய்யுங்கள்.. வேண்டுமானால் உங்கள் செம்மையான தமிழ்ப்பாணியில் அதை மாற்றி போடுங்கள்.. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.. நேற்றும் முந்தநாளும் உங்கள் பதிவுகளில் தேடியதில் கொடிகாமத்தை பற்றி எதையும் காணோம்.. சற்று கவலையாக இரந்தது.. நவாலிப்பதிவில் இடம்பெயர்ந்து சென்றதாக மட்டும் குறிபிபட்டிருந்தீர்கள்.. ஆனால் நானும் எழுதவில்லைதான் ... எனக்கு என்னத்தை எழுதுவது என்றுதான் பரபரப்பு .. எழுதவெளிக்கிட்டால் ஒரு பெரிய புராணம் போல தான் எழுத வேண்டும்..
என் தொலைபேசி இலக்கம் *********** .. தயவுசேய்து என்னை நீ என்றே அழைக்கவும் ... தொலைவாக உணர்கிறேன்.. :) நீங்கள் சற்றுக்குண்டாகி விட்டதுதான் வித்தியாசமாக உள்ளது..
நன்றி எல்லாவற்றுக்கும்...
புல்லட்
-3-
கீத் உடனான அறிமுகம் எனக்கு அண்மையிலேயே நிகழ்ந்தது. அவரது பல பதிவுகளை வாசித்துள்ளேன். அவரது சுவாரசியமான எழுத்து நடை எனக்கு அதிகம் பிடிக்கும். தவிர கலாசாரம், பண்பாடு என்று சமுதாயம் போடும் வேடங்களைக் கிழித்து நாராக்குவதில் காட்டும் வேகம் அதிகம் பிடிக்கும். ஒரு குறுகிய அறிமுகத்திலேயே “நள்ளிரவு 12 மணிக்கு அழைத்தாலும் சிரித்தபடி பேசும்..” என்று ஒரு அறிமுகத்துடன் என்னை இந்த “பதிவெழுத வந்த கதை” தொடர் பதிவிற்கு அழைத்துள்ளார். நல்ல நட்புகளை தேடுவதில் எப்போதும் ஆவலாய் உள்ள எனக்கு இவை எல்லாம் மகிழ்வூட்டுவனவே. நானும் என் பங்குக்கு 4 பேரை அழைத்து வைக்கிறேன்.
தமிழன் கறுப்பி – ரசனை பூர்வமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய பேரின்பநாயகியின் மயக்கம் எனக்கு இன்னும் தீரவில்லை. உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக அவர் எழுதிய ஒரு கதையைப் பார்த்துவிட்டு, நாம் எல்லாம் என்ன பிழைப்படா பிழைக்கிறோம் என்று சலித்தது தான் மிச்சம் சென்றவாரம் என் பிறந்த நாளிற்கு அமர்க்களமான ஒரு வாழ்த்தை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார்.
கதியால் – கிடுகுவேலி என்ற வலைப்பதிவில் எழுதுபவர். என் நெடுநாள் நண்பர். கடல் கடந்து இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில் அதிகம் நான் பேசிக்கொண்டு இருந்தது இவருடனாகத் தான் இருக்கும். ஈழத்து ஆலயங்கள், கிரிக்கெட் என்று கலந்து கட்டி எழுதுபவர். இன்னும் சுவையான பல விடயங்களை எழுதக் கைவசம் வைத்துள்ளவர்.
புல்லட் – வலைப்பதிவுகள் எனக்குப் புதுப்பித்து தந்த நட்பு. சிறு வயதிலேயே சூட்டிகையானவர். ஒரு முறை மாலை நேர வீதி உலாவிற்கு நானும் தயாபரனும் ஆயத்தமான போது பிராக்குப் பார்க்க போகிறீர்களா? என்று கேட்டார். நாம் ஓமென்று சொல்ல, frock என்றால் பெண்கள் போடும் சட்டை, அப்ப சைட் அடிக்க போகிறீர்கள். அப்படித்தானே என்றார். அப்போது அவருக்கு வயது 10.
இன்னும் நிறையப் பேரை அழைக்க ஆசைதான். ஆனால் எத்தனை பேரிடம் திட்டு வாங்குவது. இப்போதைக்கு இவர்கள் மூவரும் திட்டினால் போதும்.