Wednesday, July 8, 2009

அத்தினாபுரத்துப் பெண்கள் - பாகம் 2

அத்தினாபுரத்துப் பெண்களும், பாரதம் பேசும் கதைகளும் என்று தேவகாந்தனின் கதாகாலத்தை முன்வைத்து சென்ற வாரம் எழுதிய பதிவிலே என்னை அறியாமலே பெருந்தவறொன்றை செய்துவிட்டேன். கதாகாலம் என்பதற்குப் பதிலாக அசிரத்தையால் மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை. கடைசியில் தேவகாந்தனே இதை சுட்டிக்காட்டும்படி ஆகிவிட்டது. அக்கறை இன்மையால் இடம்பெற்ற மிகப்பெரும் தவறு இது. இது போன்ற தவறுகள் இனியும் இடம்பெறக்கூடாது என்று உறுதியும், எழுத்தாளர் தேவகாந்தனிடம் மன்னிப்பும் கேட்டபடி இந்த பகுதிக்குள் புகுகின்றேன்.


அம்பை
அம்பை என்ற பெயர் மீது எனக்கு பாரதக் கதை தாண்டியும் மிகப்பெரும் ஈடுபாடு. தேர்ந்த பெண்ணியவாதியும், எழுத்தாளருமான அம்பையின் ஆளுமைகள் பற்றி அதிகம் அறிந்திருக்கின்றேன். அவருடைய கதைகளை நான் வாசித்தது குறைவென்றபோதும் கனடாவில் கவிஞர் திருமாவளவனின் வீட்டில் இடம்பெற்ற இருள் யாழி புத்தக அறிமுக சந்திப்பிற்கு அம்பை வந்திருந்தபோது ஈழப்பிரச்சனை சம்பந்தமான பலவிடயங்கள் தனக்கு முழுமையாக தெரியாது என்று ஒப்புக்கொண்டு, அக்கறையுடன் நிறைய விடயங்களை கேட்டறிந்துகொண்டார். இந்த நேர்மை எனக்கு அதிகம் பிடித்திருந்தது. ஈழப் பிரச்சனை பற்றி அறிந்திருந்தும் அதை பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பவர்களையும், எதுவும் தெரியாமல் வெறும் தத்துவங்கள் ஊடாக மட்டுமே ஈழப் பிரச்சனை பற்றி அணுகுபவர்களையும், ஒரு சித்தாந்தத்தை உள்வாங்கி / சித்தாந்தத்தால் உள்வாங்கப்பட்டு (இரண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை கவனிக்கவும்) அந்த சித்தாந்தத்தின் வழி சப்பைக்கட்டு நியாயங்களை சொல்பவர்களையுமே பெரிதளவு கண்டுள்ள மோசமான சூழ்நிலையில் உண்மையான முகங்கள் சிலவற்றை காணும்போது பிரமிப்பு வருவது வழமை தானே?. அந்த வகையில் லக்ஷ்மி என்கிற பெண் அம்பை என்கிற பெண்ணியப் போராளியாக மாறும்போது தேர்ந்தெடுத்த ”அம்பை” என்கிற பெயர்கூட பெண்மையின் எதிர்க்குரலாக பாரதக்கதையில் முதலில் பதியப்பட்ட பெயரான சிகண்டி என்று பிற்காலத்தில் அறியப்பட்ட அம்பையின் பெயர்தான் என்பது அதிகம் பொருத்தமானதாகவே படுகின்றது.


அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று சகோதரிகளின் தந்தையான காசிராஜன் தன் பிள்ளைகளுக்கு நடத்திய சுயம்வரத்தில் அழைப்பின்றிப் போய் மூன்று பெண்களையும் கவர்ந்துவருகின்றான் பீஷ்மன். அந்த நேரம் அம்பை பிரம்மத்தன் என்ற பிறிதொரு மன்னன் மேல் தான் கொண்ட காதல் பற்றி சொல்ல பீஷ்மனும் அவளை பிரம்மத்தத்தனிடம் அனுப்பி வைக்கின்றான். பிறிதொருவனால் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணை தன்னால் மணுமுடிக்க முடியாதென்று அவன் அவளை திருப்பி அனுப்ப தன் பிறந்த தேசம் செல்கிறாள் அம்பை. பீஷ்மனால் கவர்ந்து செல்லப்பட்ட அவள் இனி பீஷ்மனுடன் இருப்பதே முறை என்று அவள் தந்தை காசிராஜனும் திருப்பி அனுப்ப தன்னை ஏற்குமாறு பீஷ்மனிடம் வேண்டுகிறாள் அம்பை. ஏற்கனவே தான் தன் சிற்றன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (பிரம்மசாரிய விரதம்) சுட்டிக்காட்டி அவளை ஏற்க மறுக்கிறான் தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது. (இத்தனை அறம் காத்த பீஷ்மர் தான் பின்னர் துரியோதனின் அவையிலே திரௌபதி துகிலுரியப்பட்ட போது அமைதி காக்கிறார்.). இதன் பின் தான் இந்த நிலைக்கு வர காரணமான பீஷ்மனை வெல்வேன் என்று சபதமிட்டு வனமேகி, கடுமையான பயிற்சிகள் மூலம் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை உடலில் ஏற்றி யதுசேன மன்னனிடம் அடைக்கலம் பெற்று சிகண்டி என்ற பெயரில் உறுமீன் வரக் காத்திருகிறாள் அம்பை. சென்ற பதிவில் நான் சொன்னது போல பாரதக் கதையின் தனக்கு இழைக்கப்பட்ட் கொடுமகைகளுக்கெதிரான பலவீனமான எதிர்க்குரலாக காந்தாரி தன் கண்கள் மறைத்ததை சொன்னென். அதன் தொடர்ச்சியாக அதே கொடுமைகளுக்கெதிரான பலமான எதிர்க்குரலாக அம்பையே தெரிகிறாள். (திரௌபதியை இதில் எதிர்க்குரலாக சொல்லவே முடியாது அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தன் கணவர்கள் மூலமாக பழிவாங்கிய, சராசரி தமிழ் திரைப்பட கதாநாயகி போன்றவளே). இங்கு மூலக் கதையில் அம்பை தவமிருந்து பீஷ்மனை கொல்ல வரமும், ஆணாக மாற வரமும் பெற்றதாய் சொல்ல தேவகாந்தன் ”அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகங்களாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள். மிருதுவான மேனி வன்மை கண்டது.......................................பெண்ணின் மாறா அவயத்துடன் ஆணாய் ஓர் அபூர்வ அடைதல் – பக் 11” என்று நடைமுறை யதார்த்தத்துடன் கூறுகிறார். அதுபோல போரிலே சிகண்டி பீஷ்மன் மீது அம்பு தொடுக்க தொடங்க அவள் அடிப்படையில் ஒரு பெண் என்பதால் அவளுடன் போரிடல் (அக்கால வழக்கப்படி) முறையில்லை என்பதால் சும்மாயிருந்த பீஷ்மர் மீது அம்பெய்து சிகண்டி கொண்டான் என்று மூலத்தில் சொல்லப்பட கதாகாலம் “சிகண்டியின் அம்புகள் காற்றைத் துளைக்கத் துவங்கின. சிகண்டிக்குள் அம்பையை கண்டிருப்பார் பீஷ்மர். நெஞ்சுக்குள் ஒரு மூலையில் இருந்த வலி மறு படி எழுந்திருக்கும்” என்று குற்ற உணர்ச்சியின் கைதியாய் பீஷ்மர் இருந்தபோதே கொல்லப்பட்டதாய் சொல்லும்.


சகாதேவன்
பாண்டவ புத்திரர்களில் பிறவி ஞானி என்று அழைக்கப்படுபவன். பெரியன்னை குந்தியின் தூற்றல்களாலே தாய் மாத்ரி உடன் கட்டை ஏறுவதன் சாட்சியாக இருந்த சோகம் கைகூடியவன். அந்த சோகமும், குந்தி மேல் இயல்பாக ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட தனிமை உணர்வுமே அவனை ஞானியாக்கிற்று என்று கதாகாலம் சொல்வதை மறுக்கமுடியவில்லை. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் ஞானியான சகாதேவனே ஒரு இடத்தில், ஐவருக்கும் சம உரிமையாக பங்கிடப்பட்ட திரௌபதியிடன் தனக்கான உரிமைகள் குறைவாக இருந்ததாக வருந்துகிறான். அஞ்ஞாத வாசம் முடிந்த பின்னர் திரௌபதியும் சகாதேவனும் சந்திக்கும் பகுதி ஒன்றை இலங்கையின் கிழக்குமாகாண நவீன கதை சொல்லி சொல்வதாக கூத்து வடிவிலே சொல்கிறார் தேவகாந்தன். துரியோதன் ரகசியமாக சகாதேவனை சந்தித்ததையிட்டு திரௌபதி சகாதேவன் மேல் சந்தேகம் கொல்லும்போதும் பின்னர் தன் தாயிழந்த துயரை ஒரு மகளை ஈன்றிருப்பின் அவள் வடிவிலே சிறிதேனும் மறந்திருப்பேன் என்று சகாதேவன் சொல்லும்போதும் சக மனிதர்களுக்கேயான குணவியல்புகள் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அவர்களை காணமுடிகின்றது.

இதைவிட முக்கியமாக விராட நாட்டிலே அஞ்ஞாத வாசம் முடியும் முன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்று அறிந்தும் திரௌபதிக்காக அதை சகாதேவன் மறைக்கிறான். அதை தொடர்ந்தே இந்த சந்திப்பில் சகாதேவனை விட்டு விலகியே இருந்த திரௌபதி அவனுடன் கூடுகிறாள். இதை சகாதேவன் “அர்ச்சுணன் வெளிப்பாட்டில் காலக் குறைபாட்டை / நான் மடுத்துக் கட்டுதற்கே / தன்னை எனக்குத் தந்தாளென்று / எனக்குத் தெரியாதோ” என்கிறான். பாரதப் போர் நடந்து தன் சபதம் நிறைவேற வேண்டும் என்பதில் திரௌபதி எவ்வளவு உறுதியாக இருந்தாள் என்றும் இந்த அத்தியாயம் உறுதிப்படுத்துகின்றது.


தருமன் / யுதிஷ்டிரன்.
பாரதக் கதையை வாசிக்க தொடங்கிய நட்களில் இருந்து என்னுள்ளே அதிகளவு கேள்விகளை எழுப்பிய கதா பாத்திரம் தருமனின் கதாபாத்திரம். பாண்டவர்கள் ஐவருள்ளும் தருமன் தவிர ஏனைய நால்வரும் தமக்கேயுரிய தனித்திறன்களை கொண்டவர்கள். அர்ச்சுணன், பீமன் போன்றோர் பலவீனங்களையும் கொண்டவர்கள். ஆனால் தர்மனைப் பொறுத்தவரை அவன் தனித்திறான் என்று எதையுமே கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் பலவீனமான சூதாட்டம் குருக்ஷேத்திரப் போருக்கே காரணமானது. இங்கு முக்கியமாக காணாவேண்டிய விடயம், அர்ச்சுணனும் பீமனும் தத்தம் பலவீனங்களால் வந்த எல்லா துன்பங்களையும் தாமாகவே எதிர்கொள்ள தர்மன், தான் சூதாடி தோற்றபோது தன் தோல்வியின் பங்காளிகளாக தன் தம்பியரையும், திரௌபதியையும் ஆக்கிக்கொண்டான். பாரதப் போர் நடந்தபோது கூட போர்க்களத்தில் தர்மனின் வெற்றியாக எதையும் பதிவாக்கப்படவில்லை. ஒரு தலைவனாக அவன் போரைக் கொண்டு நடத்தக்கூட இல்லை. பாரதப் போரில் அவன் பெயர் இடம்பெறுவது அவன் சொன்ன “அஸ்வத்தாம ஹத” என்பதுவே. கதாகாலத்தில் இந்தக் கட்டத்தை சொல்லும் கதை சொல்லி “இதுவரை யுதிஷ்டிரன் என்று அழைத்தவன், தர்மம் தவறீயதின் குறியீடாக இனி அவன் தர்மன் என்றழைப்பேன்” என்கிறான். தர்மன் தர்மம் காத்து வாழ்ந்தான் என்பதைவிட, தன் பக்க பலங்களை சரியாக பாவித்து தன்னை வளாமாக்கிக் கொண்டான் என்பதே பொறுத்தமாக இருக்கும். தன் திறன் பாவித்து தான் வென்ற திரௌபதி மீது தன்னால் முழுமையான ஆளுமை செலுத்தப்படாமல் போனதே அர்ச்சுணன் கட்டுக்கடங்கா காமம் கொண்டலையக் காரணம் என்றும், குருக்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர் பட்டத்து ராணியாக தர்மனுக்கே அதிகம் உரித்துடையவளாக திரௌபதி மாற பீமன் கூட தர்மனிடம் கோபம் கொண்டான் என்றும் கதாகாலத்தில் கட்டுடைக்கப்படும்போது மறுக்க முடியாமல்தான் இருக்கின்றது.


அசுவத்தாமன்
வழி வழியாக வந்த பெரும்பாலான கதைகளில் அசுவத்தாமனை மரணமற்றவன் என்றூ சொல்வர். ஆனால் தேவகாந்தனின் கதாகலத்தில் அஸ்வத்தாமன் தீராப்பழியின் நினைவாக சொல்லப்படுகின்றான். உப பாண்டவர்களை கொன்றதிலும், இறுதியில் அர்ச்சுணன் மீது அவன் எய்த அம்பு, நதிக்கரையில் பிதிர்க்கடன் செய்துகொண்டிருந்த அபிமன்யுவின் மனைவியைத் தாக்கியதாலும், எத்தனையோ அறங்களைக் காத்தவனும், ஆற்றல் மிகுந்தவனுமாகிய அஸ்வத்தாமன், ஒரு பழியின் நினைவாகவே காலமெல்லாம் நினைக்கப்படுவான் என்கிறது கதாகாலம்.
“அஸ்வத்தாமனின் நினைவே அவன் ஜீவன், அவன் மரணமற்றிருந்த முறைமை அதுதான். அவன் தீராப் பழியின் நினைவு-பக்கம் 144”


கதாகாலத்தின் இன்னும் சில அம்சங்கள்
பாரதம் என்கிற அமானுஷ்யத்தன்மை அதிகம் பொருந்திய, நடைமுறைக்கு பெரிதும் ஒவ்வாத இதிகாசத்தை ஒரு நாவல் வடிவில் நடைமுறையுடன் ஒத்த, முன்னொரு காலத்தில் நடந்தது என்று சொல்லக்கூடியதாக கதாகாலம் அமைகின்றது. இந்த இடத்தில் திரௌபதி துகிலுருவுதல் பற்றி தேவகாந்தன் சொல்வது ஒரு பொறிமுறை சார்ந்த விளக்கமாக இருந்தாலும் மிகுந்த சுவாரஸ்யமானதாகவே இருக்கின்றது.

“”துச்சாதன் அவளாது ஆடையை இழுத்தான். நிலையில் பெயராது நின்று அவள் சுழன்றாள். அவிழ்ந்து நிலம் புரண்டு கிடந்த அவள் கூந்தல் மேலிருந்து கீழ்ப் புரியாய்ச் சுற்றி அவள் அவயங்களை மறைத்து வந்தது. அவமானத்தைச் செறிவாய் இறக்க வெறீபிடித்து நின்ற துச்சாதனன் துகிலை விட்டு அவள் கூந்தலை இழுத்தான். கீழிருந்து மேற்புரியாய் துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது. திரும்ப அவன் துகில் பற்றி இழுக்க கூந்தலும், கூந்தல் பற்றி இழுக்க துகிலும் அவள் செந்நிற மேனி யார் கண்ணும் காணாது மறைத்துவர, மௌனித்த சபை சலசலக்கத் துவங்கியது. அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அச்சமடைய ஆரம்பித்தது. ..............................................துச்சாதன் களைத்து வீழ்ந்த்தான். அனைவர் மனதிலும் துரோபதி “தெய்வமே” என்று கூவிய சொல் ஒரு உருவமாய் நின்றிருந்தது...........பக்-85.”


-2-

உண்மையில் தேவகாந்தனின் கதாகாலம் தவிர்த்து உபபாண்டவம் என்ற எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகமும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் மகாபாரதத்தின் மறுவாசிப்பாக வெளியானது. ஆனால் உபபாண்டவம் பெற்ற கவனிப்பு அளவு கதாகாலம் கவனிக்கப்படவேயில்லை. இத்தனைக்கும் உபபாண்டவத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாதது கதாகாலம். ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளார்களில் ஒருவராக அடையாளம் காணப்படவேண்டிய தேவகாந்தனின் எத்தனையோ புத்தகங்களை ஈழத்தமிழ் வாசகர்களே வாசித்தது கிடையாது என்றறியும்போது ஈழத் தமிழினம் என்றொன்று இருந்தது என்பதே வரலாற்றில் மறக்கப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகின்றது. எம்மவர் எழுத்துக்களை நாமே படிக்காததால்தான் ஜெயமோகன் போன்ற சிலர், ஈழத்தமிழ் எழுத்துக்களே தட்டையானவை, ஒரு வட்டத்துள் உழல்பவை என்றெல்லாம் உதறித் தள்ள, புலம்பெயர் நாடுகளில் உள்ள அவர் ரசிகர்கள் சொல்லும் சில நியாயங்களையும் கேட்டுக்கொண்டு அதை சகிக்குமாறு நாமும் சபிக்கப்பட்டிருக்கின்றோம்.

சென்ற வார இறுதியில் நானும் சிறிய காலத்திலேயே எனக்கு மிக மிக நெருக்கமான நண்பர் ஒருவரும் “தோழர் சிவத்தின்” நினைவு விழாவுக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு அருமையான பாடலைக் கேட்டேன். ஒரு முறை கேட்டால் அன்று முழுவதும் ஹம் பண்ண தோன்றுமே அப்படி ஒரு பாடல். கவிஞர் சேரன் எழுதி சின்மயி பாட, ஒரு மலையாள இசையமைப்பாளர் (பெயர் நினைவில் இல்லை; - இந்த இசைத்தட்டில் ஒரு பாடலுக்கு மட்டும் ராஜ் ராஜரத்தினம் இசையமைத்துள்ளார்) இசையமைத்த . காற்றோடு.... என்று தொடங்கும். (அன்று இந்தப் பாடாலைக் கேட்டபோது யார் எழுதிய பாடல் என்று நானும் நண்பரும் யோசித்தபோது –ஜெயபாலனா/சேரனா – “முற்றாத காதலோடு முழுமையைத் தேடுகின்றேன்” என்ற வரிகளைக் கேட்டது இது சேரன் பாடல் என்று ஒரே நேரத்தில் சொன்னது தனிகதை) இதே இசைத்தட்டில் தான் ”பூமியின் அழகே...” என்ற வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய பாடலும் உள்ளது. சேரன் ஒரு நாடகத்துக்காக எழுதி (சாதிகளை மறைமுகமாக சொல்லிக்காட்டும் பாடல் என்று வாசித்தேன்) பின் இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற “எவடம் எவடம்...” பாடலும் உள்ளன. இந்த இசைத் தட்டை எம்மவர்களில் எத்தனை பேர் கேட்டிருப்போம். இந்த இசைத் தட்டில் வரும் மேற் சொன்ன மூன்று பாடல்களையும் கீழே இணைத்துள்ளேன். ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.








Evidam.wma -



Bhoomiyin.wma -

இதுபோல எம்மவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் தான் எம்மவர் படைப்புகளை நாம் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாறவேண்டும். தேவகாந்தனின் கதாகாலம் நூலகம் என்ற வலைத் தளத்தில் மின் நூலாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பினைப் பெற இங்கே அழுத்தவும்.

தேவகாந்தனின் வலைத்தள முகவரி பெற இங்கே அழுத்தவும்

11 comments:

அருண்மொழிவர்மன் said...

couldn't send any comments in to your blog. plz chek.

''மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை''

i have noticed it, but didn't think about the seriousness of it.

s.kumar

----------

(எனது blogல் பின்னூட்டமிடுவத்ல் சிக்கல் ஒன்று ஏற்பட்டு இருந்தது. அதை சுட்டிக் காட்டி எனக்கு மின்மடல் அனுபியிருந்தார் குமார்)

எனது blog ல் இருந்த தொழில் நுட்ப சிக்கலை சுட்டிக் காட்டியதுக்கு நன்றிகள் குமார்

---அன்புடன்
அருண்மொழிவர்மன்

Anonymous said...

ஈழப் பிரச்சனை பற்றி அறிந்திருந்தும் அதை பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பவர்களையும், எதுவும் தெரியாமல் வெறும் தத்துவங்கள் ஊடாக மட்டுமே ஈழப் பிரச்சனை பற்றி அணுகுபவர்களையும், ஒரு சித்தாந்தத்தை உள்வாங்கி / சித்தாந்தத்தால் உள்வாங்கப்பட்டு (இரண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை கவனிக்கவும்) அந்த சித்தாந்தத்தின் வழி சப்பைக்கட்டு நியாயங்களை சொல்பவர்களையுமே பெரிதளவு கண்டுள்ள மோசமான சூழ்நிலையில் உண்மையான முகங்கள் சிலவற்றை காணும்போது பிரமிப்பு வருவது வழமை தானே?.




??????????????
கதைச்சா துரோகி, கதைக்காட்டி அக்கறையில்லை. என்னதான் செய்ய சொல்லுறீங்கள்

DJ said...

அருண்,
க‌தாகால‌ம் குறித்து ப‌ல்வேறு வ‌கையான‌ வாசிப்புக்க‌ள் வெளிவ‌ர‌வேண்டும். எஸ்.ராவின் உபபாண்ட‌வ‌த்தின் பெரும் பாதிப்பில் இருந்த‌போதே இதையும் வாசித்திருந்தேன். இப்போது உங்க‌ள் ப‌திவை வாசிக்கும்போது இன்னொருமுறை வாசிக்கும் விருப்பு ஏற்ப‌டுகின்ற‌து.
க‌தாகால‌ம் வெளியீட்டு நிக‌ழ்வு இங்கு ந‌ட‌ந்த‌போது எழுதிய‌ ப‌திவொன்று...
http://elanko.net/?p=544

......
இங்கே ப‌திந்த‌ பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றி.
'க‌ண்ணீரும் குருதியும் காத்திருப்பும்', 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' ஆகிய‌ இறுவ‌ட்டுக்க‌ள் என்னிட‌மிருந்த‌ன. இப்போது என் வ‌ச‌மில்லை, வ‌ளாக‌த்தில் ந‌ண்ப‌ர்க்ளுக்குக் கேட்கக் கொடுத்த‌ பொழுதில் தொலைந்திருக்க‌க் கூடும். நீங்க‌ள் குறிப்பிடும் பாட‌ல்க‌ள் 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' இறுவ‌ட்டில் இருப்ப‌வை என‌ நினைக்கின்றேன். அந்த‌ இறுவ‌ட்டு வெளியீட்டு விழாவுக்குப் போன‌தும் அது குறித்து முன்னெப்போ எழுதிய‌தும் நினைவிலுண்டு.

ஒரு சின்ன‌ திருத்த‌ம், அதில் ஒரு பாட‌ல் த‌விர்த்து, மிகுதி அனைத்துப் பாட‌ல்க‌ளுக்கும் இசைய‌மைத்த‌வ‌ர் ம‌லையாள‌ இசைய‌மைப்பாள‌ர் ஒருவ‌ர். பெய‌ர் இப்போது நினைவினில்லை. ராஜ் ராஜ‌ர‌த்தின‌ம் ந‌ன்கு பாட‌க்கூடிய‌வ‌ரும் இசைய‌மைக்க‌க் கூடிய‌வ‌ரும் என்றாலும், இதில் பாடியிருக்கின்றாரே தவிர‌ இசைய‌மைக்க‌வில்லை.

ந‌ம‌து த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் கொடுத்த‌ 'அமோக‌ ஆத‌ர‌வால்'தான் ராஜ்ஜூம், இனி இந்த‌ வேலை போதும் என்று இர‌ண்டு இறுவ‌ட்டுக்க‌ளோடு ஒதுங்கிவிட்டார் போலும் :-(.

அருண்மொழிவர்மன் said...

//கதைச்சா துரோகி, கதைக்காட்டி அக்கறையில்லை. என்னதான் செய்ய சொல்லுறீங்கள்//

துரோகி என்ற நிலைப்பாடு பொதுவாக பிழையாகத்தான் எடுக்கப்பட்டது வீழ்ச்சிக்குரிய காரணங்கள் என்றாவது ஒரு நாள் பட்டியலிடப்படும்போது இந்த துரோகி என்ற தீர்ப்புகளும் காரணமாக சொல்லப்படும்

அருண்மொழிவர்மன் said...

DJ said...

// அருண்,
http://elanko.net/?p=544

......//


இதை முன்னரே படித்துள்ளேன்.


// இங்கே ப‌திந்த‌ பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றி.
' நீங்க‌ள் குறிப்பிடும் பாட‌ல்க‌ள் 'தோணிக‌ள் வ‌ரும் மாலை' இறுவ‌ட்டில் இருப்ப‌வை என‌ நினைக்கின்றேன். அந்த‌ இறுவ‌ட்டு வெளியீட்டு விழாவுக்குப் போன‌தும் அது குறித்து முன்னெப்போ எழுதிய‌தும் நினைவிலுண்டு.

ஒரு சின்ன‌ திருத்த‌ம், அதில் ஒரு பாட‌ல் த‌விர்த்து, மிகுதி அனைத்துப் பாட‌ல்க‌ளுக்கும் இசைய‌மைத்த‌வ‌ர் ம‌லையாள‌ இசைய‌மைப்பாள‌ர் ஒருவ‌ர். பெய‌ர் இப்போது நினைவினில்லை. ராஜ் ராஜ‌ர‌த்தின‌ம் ந‌ன்கு பாட‌க்கூடிய‌வ‌ரும் இசைய‌மைக்க‌க் கூடிய‌வ‌ரும் என்றாலும், இதில் பாடியிருக்கின்றாரே தவிர‌ இசைய‌மைக்க‌வில்லை.//

அவை தோணிகள் வரும் மாலை இசைத்தட்டில் தான் இடம்பெற்றன. இசையமைப்பாளார் பற்றிய பிழை திருத்தல்களுக்கு நன்றிகள்.

//ந‌ம‌து த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் கொடுத்த‌ 'அமோக‌ ஆத‌ர‌வால்'தான் ராஜ்ஜூம், இனி இந்த‌ வேலை போதும் என்று இர‌ண்டு இறுவ‌ட்டுக்க‌ளோடு ஒதுங்கிவிட்டார் போலும் :-(.//

உண்மைதான். இஅர்கள் இப்படியான வரவேற்பை கொடுத்தால் எவர்தான் ஒதுங்க மாட்டார்கள்????

வாசுகி said...

//தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது.//

சத்தியம் செய்ததால் பீஷ்மர் திருமணம் செய்யவில்லை என்று பழிப்பதை விட அப்படி அவர் சத்தியம் செய்ததிற்கு
வாரிசு போட்டி ஏற்படக்கூடாது என்ற வலிமையான காரணம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.


தனது தந்தை சந்தனு சத்தியவதியை திருமணம் செய்ய விரும்புவதாக அறிந்து அவளது தந்தையிடம் சென்று தனது தந்தைக்காக பீஷ்மர் பெண் கேட்கிறார் அதற்கு சத்தியவதியின் தந்தை " தடையாக இருப்பது நீங்கள் தான்.நீங்கள் இருக்கும்போது உங்களைப் பகைத்துக் கொண்டு என் பேரன் எப்படி மன்னனாக முடியும்? நீங்கள் விட்டுக் கொடுத்தாலும் உங்களுக்குப் பின் உங்கள் மகன்கள் இதற்கு சம்மதிப்பார்களா? என்று கேட்கின்றான்.

" என் தந்தையின் விருப்பத்தை நிறவேற்ற்றுவது எனது இலட்சியம்.எனக்கு வாரிசுகள் பிறந்தால்தானே பிரச்சினை. அதனால் நான் திருமணமே செய்யவில்லை" என சத்தியம் செய்கிறான் .


*****************************

சந்தனுவின் மகன் விசித்திரவீரியனுக்கு பெண் எடுக்க பீஷ்மர் சுயம்வரம் சென்ற போது
அங்கிருந்தவர்கள் "சத்தியம் எல்லாம் மறந்து பெண் பார்க்க வந்தீரோ" என அவமானப்படுத்தியதாக பாரதத்தில்
வருகிறது.

பீஷ்மர் உத்தமர் என்று சொல்லவரவில்லை.
பீஷ்மர் கவர்ந்து சென்றதால் சால்வன் அம்பையை புறக்கணிக்க, இன்னொருவரை விரும்பியதால் விசித்திரவீரியன் புறக்கணிக்க அம்பையின் வாழ்க்கை வேடிக்கை பொருளானது வேதனை.


பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவதும் இருந்தது. பீஷ்மர் விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா? அம்பைக்கு பீஷ்மரில் இருந்த கோவம்
நியாயம். அவர் கடத்தி வந்திரா விட்டால் அம்பையின் கதி இப்படி ஆகியிருக்காதே.

ஆனால் சத்தியம் காப்பாற்றுகிறேன், சந்ததியை வளர்க்கிறேன் என்ற பெயரில் பீஷ்மர் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். அம்பையை மட்டுமல்ல , காந்தார தேச இளவரசியை கடத்தி வந்து
குருட்டு அரசனுக்கு திருமணம் செய்தார்.

கர்ணனை அவமதித்ததில் பீஷ்மருக்கு பெரும் பங்கு உண்டு.

வாசுகி said...

சிகண்டி விடயத்தில் நிறைய குழப்பம் இருக்கிறது.அம்பை தான் சிகண்டி என்பார்கள்.

துருபத மன்னன் மகள் (திரௌபதியின் சகோதரி) சிகண்டினி தான் சிகண்டியானதாக‌
பாரதத்தில் படித்த நினைவு. அம்பையின் மாலையை சிகண்டி அணிந்ததால் அம்பையின் மறுபிறப்பு என நினைத்து துருபத மன்னன் சிகண்டியை துரத்தியதாக வருகிறது.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் வாசுகி

//
பீஷ்மர் சத்தியம் மூலம் ஒரு வாரிசுப்போரை தடுத்திருக்கிறார் எனவும் கொள்ளலாம்.(ஆனால் அந்த வாரிசுப்போர் பின்னர் வேறு வடிவில் வந்தது.)//

உண்மையில் பார்க்கப்போனால் பாரதப் போர் முழுதும் பதவிக்காக நடந்த தந்திரங்கள்தான் நிறைந்து கிடக்கின்றன. இறுதியில் கௌரவர்கள் சந்ததியே இல்லாமல் ஒழிக்கப்பட்டதால் பாணடவர் வம்சம் , பின்னர் அதுவே பரத வம்சமாக தொடர்ந்தது.



//தவிர பிற்காலத்தில் குந்தி, காந்தாரி கையில் ஆட்சி இருந்தது போல அப்போது சத்தியவதி கையில் தான் முழுவதும் இருந்தது. பீஷ்மர் விரும்பினாலும் சத்தியவதி விட்டிருப்பாரா? அம்பைக்கு பீஷ்மரில் இருந்த கோவம்
நியாயம். அவர் கடத்தி வந்திரா விட்டால் அம்பையின் கதி இப்படி ஆகியிருக்காதே.

ஆனால் சத்தியம் காப்பாற்றுகிறேன், சந்ததியை வளர்க்கிறேன் என்ற பெயரில் பீஷ்மர் நிறைய பெண்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். அம்பையை மட்டுமல்ல , காந்தார தேச இளவரசியை கடத்தி வந்து
குருட்டு அரசனுக்கு திருமணம் செய்தார்.//

பீஷ்மர் என்றவுடன் பிதாமகர் பீஷ்மர் என்று எழும்பியிருந்த பலத்த மரியாதை விம்பத்தை சிதறடைத்தவை இப்படியான செயல்கள். அது மாதிரி, மகாபாரதக் கதையை சத்தியவதி---> காந்தாரி & குந்தி-----> திரௌபதி என்றா தொடர்ச்சியில் பெண்களே நடதினர் என்று தேவகாந்தனும் அந்த பார்வையிலேயே கதை சொல்லிச் செல்லுகின்றார். அந்தப் பார்வை நன்றாகத்தான் இருந்தது. நூலகத்தில் மின் நூலாக அதன் இணைப்பை இணைத்துள்ளேன். வாசித்துப் பார்க்கவும்.


//கர்ணனை அவமதித்ததில் பீஷ்மருக்கு பெரும் பங்கு உண்டு.//
இது கௌரவர்களுக்கு பெரும் பாதகமாக அமைந்தது. இதன் விளைவாக கர்ணன், பீஷ்மன் களத்தில் இருக்கும்வரை போரிடவேயில்லை....

அருண்மொழிவர்மன் said...

வாசுகி said...

சிகண்டி விடயத்தில் நிறைய குழப்பம் இருக்கிறது.அம்பை தான் சிகண்டி என்பார்கள்.

துருபத மன்னன் மகள் (திரௌபதியின் சகோதரி) சிகண்டினி தான் சிகண்டியானதாக‌
பாரதத்தில் படித்த நினைவு. அம்பையின் மாலையை சிகண்டி அணிந்ததால் அம்பையின் மறுபிறப்பு என நினைத்து துருபத மன்னன் சிகண்டியை துரத்தியதாக வருகிறது.//




வாசுகி, பாரதத்தை நிறைய வாசித்திருக்கின்றீர்கள். அதனால் இந்த உரையாடல் முழுதும் நன்றாக போகின்றாது. நீங்கள் சொன்ன கதையை நானும் கேடிருக்கின்றேன்.
ஆனால் கதைப்படி,

“யாராலும் ஏற்கப்படமுடியாத அம்பை காடு சென்று வரமிருக்கிறாள். அப்ப்போது இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து இதை அணிபவனே பீஷ்மனை கொல்வான் என்கிறார். மீண்டும் நாடு வந்த அம்பை தனக்காக நியாயம் கேட்குமாறு பல மன்னர்களிடம் கேட்கிறாள். பீஷ்மனை பகைக்க விரும்பாத மன்னர்கள் மறுக்க கடைசியில் துருபதனிடம் உதவி கேட்கிறாள். அவனும் மறுக்க (அரண்மனை வாயிலில் மாலையை மாட்டிவிட்டு) சில துறவிகளின் ஆலோசனைப் படி பீஷ்மனின் குருவான பரசுராமனின் மூலம் பீஷ்மனை தன்னை மணக்கும்படி கேட்கின்றாள். அதையும் பீஷ்மன் மறுக்கவே பரசுராமரும், பீஷ்மரும் போரிட்டு கடைசியில் பீஷ்மன் வெல்கிறான். பீஷ்மனை வெல்ல தான் எடுத்த முயற்சி எல்லாம் தோற்றது கண்டு மீண்டும் காடேகி தவமிருக்க இறைவன் தோன்றி அவளது அடுத்த பிறவியில் அவள் மூலமாகவே பீஷ்மன் கொல்லப்படுவான் என்கிறார். உடனே அம்பை மீண்டும் துருபதன் அரண்மனை செல்கிறாள். அங்கே அவள் மாடிய மாலை அப்படியே, எவரும் பயத்தில் கையே வைக்காமல் இருக்கின்றது. அதன் முன்னரே தீக்குளித்து இறக்கிறாள். இதன் பின்னர் மீண்டும் துருபதன் மகளாக பிறந்து சிகண்டினி என்ற பெயரில் வளர்கையில் அந்த மாலையை எடுத்து அணிந்துவிடுகிறாள். அதன் பின்னர் நீங்கள் சொன்னபடி, துருபதனால் துறத்தப்பட்டு பின்னர் சிகண்டியாகி - ஆணாக மாறி இறுதியில் பீஷ்மனின் இறப்பின் காரணமாகின்றாள்....

எனக்கு பாரதத்தில் கவர்ந்த இன்னுமொரு பாத்திரம் அரவான் பாத்திரம். அர்ச்சுணனின் மகனாக இருந்தும் அதற்கான எந்த அங்கீகாரமும் இல்லாமல் , பாண்டவர்களுக்காக தந்திரமாக பலியாக்கப்பட்டவன்.

வாசுகி said...

//யாராலும் ஏற்கப்படமுடியாத அம்பை காடு சென்று வரமிருக்கிறாள்.அப்போது இறைவன் தோன்றி ஒரு மாலையை கொடுத்து இதை அணிபவனே பீஷ்மனை கொல்வான் என்கிறார். மீண்டும்.......................//

ஆமாம். நானும் இதை எழுத தொடங்கி, அரைவாசி எழுதி பின் அழித்துவிட்டேன்.ஏற்கனவே நிறைய எழுதியிருந்தேன். இதையும் எழுதினால் வாசிக்க உங்களுக்கும் அலுப்பாக இருக்கும் என்று.
அதுமட்டுமல்லாமல் அதில் மறு பிறவி பற்றி வருகிறது. பகுத்தறிந்து கதை எழுதியிருக்கும் போது
நான் மறு பிறவி பற்றி கதைப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நினைத்தேன்.அம்பை , சிகண்டி பாத்திரத்திற்கு நிறைய தொடர்பு இருந்ததால் மறுபிறவி என்றிருப்பார்களோ.


//எனக்கு பாரதத்தில் கவர்ந்த இன்னுமொரு பாத்திரம் அரவான் பாத்திரம். //
அர்ச்சுனனுக்கும் உலூபி என்ற நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான்.
முப்பதிரண்டு லட்சணங்கள் உடைய ஆணை பலியிட வேண்டும் என்ற சகாதேவனின் ஆலோசனைப்படி
அரவானை பலிகொடுக்கிறார்கள்.( 32 லட்சணங்கள் உடையவர்கள் கிருஷ்ணன், அர்ச்சுனன், அரவான்
ஆகிய மூவரும் தான் என்பது சகாதேவனாலேயே சொல்லப்பட்டது. )துரியோதனனும் சகாதேவனிடம் யுத்த ஆலோசனை கேட்டதால் அவனுக்கும் இதைப்பற்றி
சகாதேவனால் சொல்லப்பட்டது. அதனால் அரவானை பலி கொடுப்பதற்கு இரு தரப்பும் போட்டி
போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

வாழும்போது தம் அரச பரம்பரைக்கு இழுக்கு என தம்முடன் சேர்க்காமல் காட்டில் அலைய விட்டார்கள். பலி கொடுக்க மட்டும் அரவான் தேவை.


எழுத்தாளர் எஸ்.ரா அவர்களுக்கு பிடித்த பாத்திரமாக 'அரவான்' இருக்க வேண்டும்.அவரது 'அரவான்' என்ற 9 நாடகங்கள் அடங்கிய புத்தகம் பிரசித்தமானது.அதில் அரவான் பற்றிய நாடகமும் இருக்கிறது.(நான் இதுவரை வாசிக்கவில்லை.)

அதே போல பீமனுடைய மகன் கடோத்கஜனையும் யுத்தத்திற்காக மட்டும் பயன்படுத்தினார்கள்.

நன்றி

அருண்மொழிவர்மன் said...

வாசுகி..

தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகின்றேன்..

//தில் மறு பிறவி பற்றி வருகிறது. பகுத்தறிந்து கதை எழுதியிருக்கும் போது
நான் மறு பிறவி பற்றி கதைப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நினைத்தேன்.அம்பை , சிகண்டி பாத்திரத்திற்கு நிறைய தொடர்பு இருந்ததால் மறுபிறவி என்றிருப்பார்களோ.//

இதே காரணத்தால்தான் சிலவேளை தேவகாந்தன் கூட / பிற கதைசொல்லிகள் கூட மறு பிறப்பு என்ற கதையாடலை கைவிட்டிருக்கலாம். மேலும், ஒருவனின் இருப்பு ஏற்கனவே இருந்த ஒருவனை நினைவுறுத்துமாறு அமைந்த சந்தர்ப்பங்களில் அவை கால ஓட்டத்தில் மறு பிறவி என்றாழைக்கப்பட்டிருக்கலாம்...


அது போல அரவானும், கடோத்கஜனும் சந்தர்ப்பவாதத்திற்காக பயன்படுத்தப்பட்டவர்கள். அதிலும் யுத்த காலத்தில்தான் முதன் முதல் பீமனும், கடோத்கஜனும் சந்த்தித்ததாக கூட கதை உண்டு....

மேலும், பாரதப் போரில் தர்மனின் பங்கு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்????

Post a Comment