Monday, June 8, 2009

பொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்


கனடாவில் பிடித்த காலம் எது என்ன என்று கேட்டால் கோடைகாலம் என்று உடனடியாகவே சொல்லிவிடுவேன். கோடை காலம் தொடங்கிவிட்டாலே பல் கலாசார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிடும். இந்த முறையும், வழமையைவிட சற்று அதிகமாகவே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. மே மாதம் 16ம் திகதி முதல் இன்றுவரை 5 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுகங்கள் நடைபெற்று இருக்கின்றன


பொ. கருணாகரமூர்த்தி

80களின் தொடக்கத்திலேயே போரினால் இடம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளார் கருணாகரமூர்த்தி அண்மையில் வெளியிட்ட பெர்லின் இரவுகள் என்ற புத்தகம் மூலம் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டவர். இவர் எழுதிய அகதி உருவாகும் நேரம், அவர்களுக்கென்று ஒரு குடில், பெர்லின் இரவுகள், கூடு கலைதல், போன்ற நூல்கள் பற்றிய விமர்சனமாக ஸ்கார்பரோவில் நடைபெற்ற நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது. தேவகாந்தன், குரு அரவிந்தன், நவம், என். கே. மகாலிங்கம், இளங்கோ ஆகியோர் நூல்கள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க பொ. கருணாகரமூர்த்தி ஏற்புரையாற்றினார். பொ. கனகசபாபதி நேர்த்தியான முறையில் நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினார்.

நிகழ்வில் பலரும் பேசும்போதும் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி என்ற வரிசையை முன்வைத்து பேசினர். நவம் சொன்னது போல, அ.முவின் எழுத்துகளை படிக்கும்போது கொடுப்புக்குள் சிரிப்பு வரும். பொ. கருணாகரமூர்த்தியின் எழுத்துகளை படிக்கும்போது கொல்லென்று சிரிப்புவரும் என்ற கருத்தை எல்லா வாசகர்களுமே உணர்ந்திருப்பர். இருவரும் கதை சொல்லும் பாங்கில் கூட நிறைய ஒற்றுமைகளை காணலாம். (இதே போல சுவையாக கதை சொல்லக்கூடிய இன்னொரு ஈழத்துக் கதை சொல்லி சுகிர்தராஜா).

நிகழ்வில் எனக்கு அதிகம் நெருடலாகப் பட்ட விடயம் ஏறத்தாழ பேசிய எல்லாருமே பொ. கருணாக்ரமூர்த்தியை ஜெயமோகன் பாராட்டியிருக்கின்றார், ஜெயமோகன் இவரைப் பற்றி இப்படி சொல்லியிருக்கின்றார் என்கிற ரீதியில் பேசியதும், தாம் சொல்வதற்கெல்லாம் ஜெயமோகனை மேற்கோள் காட்டியதும். ஒரு கட்டத்தில் இது என்ன ஜெயமோகன் குருகுலப் பள்ளியின் விழாவா அல்லது ”ஜெயமோகன் பார்வையில் பொ.கருணாகரமூர்த்தி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கமா என்ற சந்தேகமே எனக்கு தோன்றிவிட்டது. ஜெய்மோகன் பல விடயங்களை பார்க்கும் விதத்தில் இருக்கின்ற கோளாறை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. அண்மையில் கமலாதாஸ் சூரையா பற்றிய பதிவில் அவர் தெரிவித்த கண்டுபிடிப்புகள் அவரது தீவிர ரசிகர்களை கூட மௌனமாக்கியிருப்பதை அவதானித்து இருக்கின்றேன். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை என்ற தேய்ந்துபோன தட்டையே திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து 10 வருடமாக சொல்லிவரும் இவரது அங்கீகாரத்தை இவ்வளவு முக்கியத்துவப்படுத்த வேண்டியதில்லை. அ.முத்துலிங்கம் தவிர்ந்த வேறு ஈழத்து எழுத்துகளை இவர் தொடர்ந்து படிக்கின்றாரா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. இதையொற்றி எதிர்வினையாற்றின இளங்கோ “திசேரா, மலர்ச்செல்வன், இராகவன், மைக்கேல், சித்தார்த்த சேகுவேரா, நிருபா” போன்றவர்களின் எழுத்துகளை ஜெயமோகன் வாசித்திருப்பாரா என்பதே தெரியாது என்று சொன்னார். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை, ஒற்றைத்தன்மையானவை என்று தொடர்ந்து அறிக்கைவிடும் ஜெயமோகனின் எழுத்துகள் பல சமயங்களில் எவ்வளாவு அலுப்பூட்டும் பிரதிகளாக இருக்கின்றன என்பதை கனடாவில் இருக்கும் அவரது நண்பர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி மாடன் மோட்சம், பல்லக்கு போன்ற நல்ல சிறுகதைகளை எழுதிய ஜெயமோகன் மீள உதவலாம் என்பது என் வேண்டுகோள். மேலும் தொடர்ந்து தலையணை அளவு புத்தகங்களை எழுதுவதை சற்றுக் குறைத்து, கூறியது கூறாமல் தன் கருத்துகளையும், பார்வையையும் மீள்பரிசீலனை செய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

இறுதியில் ஏற்புரையாற்றிய பொ.கருணாகரமூர்த்தி தனக்கேயுரிய மென்மையுடன் தன் உரையை படித்தார். இஸங்கள் பற்றிய கருத்துகளோடு அவர் மீது முன்வைக்கபட்ட விமர்சனங்களை “எனக்கு எந்த இசங்கள் பற்றியும் தெரியாது, அதனால் தான் அப்படியான குறைகள் வந்திருக்கும்” என்று ஏற்றுக்கொண்டது என்னைக் கவர்ந்திருந்தது. பொதுவாக எழுத்தாளார்கள் என்றால் எல்லாவிடயங்கள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் என்ற கருதுகோள் எம்மவர்களிடையே உள்ளது. சில எழுத்தாளர்களும் இப்படியே உள்மனதில் நினைப்பதால்தான் தமக்கு தெரியாத விடயங்கள் பற்றியெல்லாம் ஏதோ உளறித்தள்ளி விடுகின்றனர் (சரியான உதாரணம் காலச்சுவடில் கருணா பற்றிய கட்டுரை). அதே நேரம் ஒரு அகதி உருவாகும் நேரம் தொகுப்பில் சொல்லப்பட்ட கற்பு, சோரம் போதல் போன்ற கற்பிதங்கள் பற்றிய விமர்சனத்துக்கு அவர் எந்த எதிர்வினையுமே ஆற்றாமல்விட்டது ஏமாற்றத்தையே தந்தது. ஏற்கனவே கருணாகரமூர்த்தியை நண்பர்களுடன் ஒருமுறை சந்தித்திருந்திருக்கின்றேன். இந்த இரண்டு சந்தரிப்பத்திலும் கருணாகரமூர்த்தி எந்த ஒளிவட்டத்தையும் தனக்கு அணிவித்துக் கொள்ளாத, பழகுவதற்கு இனிய மனிதராக, மனதுக்கு மிக நெருக்கமாக எனக்கு தோன்றினார். அதன் பிறகு அவரது பெர்லின் இரவுகளை வாசித்தபோது அவரே முன்னல் இருந்து கதை சொல்வதுபோன்ற ஒரு அனுபவத்தையே உணர்ந்தேன்.


================================================================


அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள் – அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கத்தின் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணியை முன்வைத்து ஒரு விமர்சன நிகழ்வினை காலம் குழுவினர் மே 23 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். தற்கால தமிழ் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத இடத்துக்குச் சொந்தக்காரர் அ. முத்துலிங்கம். அவரது எழுத்தில் அவர் மௌனம் சாதிக்கும் தளங்களும் களங்களும் பற்றி எனக்கு நிறைய விசனங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் அவரது எழுத்து தருகின்ற வாசிப்பனுபவம் அருமையானது. சுஜாதா, அசோகமித்திரன், கோபிகிருஷ்ணன், சாரு போன்றவர்களிடம் நான் அனுபவித்த அதே கட்டுமானத்தை இவரிடமும் உணர்ந்திருக்கின்றேன். நிகழ்வுக்கு முன்னதாக “காலம்” குழுவினரின் “வாழும் தமிழ்” புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சுக்களாக நுஹ்மானின் பேச்சும், பொ. கருணாகரமூர்த்தியின் பேச்சும் இடம்பெற்றன.

அனேகமாக பேசியவர்கள் எல்லாம் அ.முத்துலிங்கம் இந்தியாவிலும் பிரபலமான ஈழத்து எழுத்தாளர், இந்தியாவில் அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன என்று தவறாமல் குறிப்பிட்டனர். இது பற்றிய எனது பார்வை வித்தியாசமானது. அ.முவைப் பொறுத்தவரை அவர் ஈழத்தில் பிறந்த எழுத்தாளரே தவிர அவர் எழுதுபவை ஈழத்தவரின் இலக்கியம் அல்ல. ஒரு பயணியாக தனக்கு கிடைத்த அனுபவங்களை சுவைபட கதை சொல்பதே அவரது பாணி. அப்படிப் பார்க்கும்போது அவரது எழுத்துக்கள் ஒரு பொதுவான தளத்தில் அமைந்த எழுத்துக்கள். அதாவது ஒரு ஈழத்து வாசகன் அவரது எழுத்துக்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் இந்திய வாசகன் வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏனென்றால் அவர் கதைகள் ஒரு பொதுவான தளாத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியவையே. மேலும், நண்பர் ஒருவர் குறிப்பிட்டபடி தான் ஒரு கணவான் எழுத்தாளர் என்பதை அவர் தொடர்ந்து பேணிவருகின்றார். இதுவரை எந்த ஒரு சமுதாய கோபங்களோ அல்லது, காட்டமான விமர்சனங்களோ அவர் எழுத்துக்க்ளில் இருந்தது கிடையாது. இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் இந்தியாவில் அமோகமாக விற்பனையாகின்றன என்று மகிழும் அதேவேளை, அவரை ஈழத்து எழுத்தாளர் என்று முழுமையாக உரிமை கொண்டாடமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு. அது மட்டுமல்ல அண்மையில் அவர் உயிர்மையில் ஜெயமோகனுடன் நடத்திய உரையாடலிலும், இந்த நிகழ்விலும் எழுத்துக்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசியதில் எல்லாமே மேற்கத்திய இலக்கியத்தின் ஆதிக்கமாகவே இருந்தன. தமிழ் பெயரை தேடித்தான் பார்க்கவேண்டியிருந்தது. அ. முத்த்லிங்கம் எம்மை விட்டு அந்நியமாகிக்கொண்டு போகின்றர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கின்றது.

சில காரணங்களால் சற்று தாமதமாக சென்றதால் நுஹ்மானின் உரையை என்னால் கேட்கமுடியவில்லை. ஆனால் ஜயகரன், வெங்கட்ரமணன், மகாலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி போன்றவர்கள் தாம் எப்படி எப்படியெல்லாம் அ.முவை ரசித்தோம் என்று கூறினர்.

இதற்கு ஒருவாரம் முன்பாகத்தான் தனது புத்தக அறிமுக நிகழ்வில் கருணாகரமூர்த்தி என்னை வெகுவாக கவர்ந்திருந்தார். அதே எதிர்ப்பார்ப்புடன் அவரது பேச்சை எதிர்பாத்திருந்த எனக்கு அன்றைய அவரது பேச்சு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. கிட்ட தட்ட 30 நிமிடம் பேசிய கருணாகரமூர்த்தி அ.முவின் ஒரு கதையை அரைவாசியும் இன்னுமொரு கதையை முக்கால்வாசியும் வாசித்துக்காட்டினார். அதைவிட ஏமாற்றமாக “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” ஒரு நாவலா என்ற விமர்சனத்தை எடுத்துக்கொண்ட அவர், இனிமேல் இதையும் நாவல் வடிவமாக எடுத்துக்கொள்வோம் என்றார். எனக்கு 91ம் ஆண்டு தளபதி திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வரும் என்றூ ஜீவி அறிவித்தபின் படப்பிடிப்பு தாமதமாக ஒரு ஒரு பத்திரிகையாளர் “தளபதி தமிழ் புத்தாண்டுக்கு வந்துவிடுமா என்று கேட்டபோது; ஜீவி தளபதி என்று வருகுதோ அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்றூ சொன்னது ஞாபகம் வந்தது. உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் இல்லை என்பவர்கள் சொல்லும் கருத்து, நாவலுக்குரிய இயல்புகளான சம்பவங்களின் தொடர்ச்சி, பாத்திரங்களின் தொடர்ச்சி, நிலத்தின் தொடர்ச்சி என்பன இதில் இல்லை என்பது. இதற்கு பொ. கருணாகரமூர்த்தி கிராவின் கோபல்லபுரத்து மக்களிலும் இந்ததொடர்ச்சிகள் இல்லை என்றார். ஆனால் அதில் நிலத்தின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இருந்தன. மேலும் ஒரு வாதத்துக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் ஒரு நாவல் என்று எடுத்தால் 80 கள் முதல் 2008வரை சுஜாதா அவ்வப்போது எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளை தொகுத்து உயிர்மை பதிப்பகம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று ஒரு புத்தகமாக வெளியிட்டதே அதுவும் நாவலா?

இறுதியில் முத்துலிங்கம் வழங்கிய உரைகூட மிகுந்த ஏமாற்றமாகவே அமைந்தது. பல மணி நேரம் சமைத்த உணவை ஒரே விள்ளலியே உப்பு சரியில்லை அது இதென்று குறை சொல்வதுபோல கஷ்டப்பட்டு எழுதிய நாவலை குறை சொல்கின்றர்கள் என்று அங்கலாய்த்தார். மேலும்தான் எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள் தாமே எழுதலாம் என்ற புத்திசாலித்தனமான ஒரு கருத்தையும் சொன்னார். ஒரு முறை ஒரு நடன போட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய சோடிக்கு 0 புள்ளிகள் இட்டபோது அவர்கள் தாம் கஸ்டப்பட்டு பழகியதுக்குத் தன்னும் தமக்கு புள்ளிகள் தந்திருக்கலாம் என்று சொன்னபோது சூர்யா, தான் ஒரு திரைபடத்தில் கஸ்டப்பட்டு நடித்தேன் அதனால் நீங்கள் அதனை வெற்றிப்படமாக்கவேண்டும் என்றூ எதிர்ப்பார்ப்பது, அது போலதான் உங்கள் மன நிலையும் என்று சொன்னார். அ.முவைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் முற்று முழுதாக நிராகரிக்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாக அதில் கண்ட குறைகள் பற்றிக் கூறுவதற்கான வெளியை அவர் முற்றாக மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

12 comments:

துர்க்கா-தீபன் said...

வரவேற்பு எழுத்தாளர்களுக்கு கனடாவில் அளிக்கப்படுகின்ற அங்கீகாரம் சகலருக்கும் மகிழ்ச்சி தருவதாகவே உள்ளது. இலக்கிய சுவை குறைந்த சமூக நிகழ்வாகும் அபாயங்கள் இருப்பினும் சகல தளத்துக்கும் அறிமுகங்களையும் அவர் படைப்புகளையும் எடுத்துச் செல்லும் வாய்ப்பு மகிழ்ச்சிக்குரியது.

அருண்மொழிவர்மன் said...

உண்மைதான். எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் அவர்களாஇ இன்னும் தேர்ந்த எழுத்துக்களாஇ தர வைக்கும் என்றூ நம்புகின்றேன்.

jega said...

its nice to see the current literature events in canada. i also saw your advertisement in your site and will try me level best to join there

good luck

பாரதி.சு said...

வணக்கம் அருண்,
புத்தக அறிமுகங்களும், இது போன்ற ஊக்குவிப்பு விழாக்களும் தொடரவேண்டும். தொலைக்காட்சி தொடர்களில் தொலைந்துபோயுள்ள எம்மவர்களினை சற்றேனும் திசைமாற்றி அவர்களை "பூரணப்படுத்த" இந்த மாதிரி புத்தகங்களை அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்கதே.
அது மட்டுமல்லாது இது எழுதுபவர்களின் பார்வையை விசாலப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும்.

//"அதிகம் நெருடலாகப் பட்ட விடயம் ஏறத்தாழ பேசிய எல்லாருமே பொ. கருணாகரமூர்த்தியை ஜெயமோகன் பாராட்டியிருக்கின்றார், ஜெயமோகன் இவரைப் பற்றி இப்படி சொல்லியிருக்கின்றார் என்கிற ரீதியில் பேசியதும், தாம் சொல்வதற்கெல்லாம் ஜெயமோகனை மேற்கோள் காட்டியதும்."//
இது தான் எம்மவரிடையே காலாகாலமாக உள்ள குறை எந்த விடயத்திலும் "ஏதாவதொரு" நியம அலகை வைத்து அளப்பது...இந்த காவடி தூக்கும் வேலைகளினை "பெரிய" எழுத்தாளர்களும் தொடர்ந்து செய்வது எரிச்சலையே தருகின்றன. ஒரே ஒரு ஆறுதல் இந்த நியம அலகு ஓரிடத்தில் தங்காமல் சாரு முதல் ஜெமோ வரை நீள்வது தான்.
(அவர் சொன்னது, இவர் சொன்னது என பயணிப்பது)

//"“எனக்கு எந்த இசங்கள் பற்றியும் தெரியாது, அதனால் தான் அப்படியான குறைகள் வந்திருக்கும்” என்று ஏற்றுக்கொண்டது என்னைக் கவர்ந்திருந்தது."//
உண்மையில் என்னையும் கவர்ந்திருக்கிறது.."உண்மையை" உள்ளபடி உரைத்தமை.

//"எழுத்தாளார்கள் என்றால் எல்லாவிடயங்கள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் என்ற கருதுகோள் எம்மவர்களிடையே உள்ளது. சில எழுத்தாளர்களும் இப்படியே உள்மனதில் நினைப்பதால்தான் தமக்கு தெரியாத விடயங்கள் பற்றியெல்லாம் ஏதோ உளறித்தள்ளி விடுகின்றனர்"// எனக்குத் தெரிந்து சிலர் அல்ல..பல எழுத்தாளர்களை வாசிக்கும் போது அவர்கள் அப்படியே தான் நினைப்பதாக தோன்றுகிறது. நாலு பேர் அங்கீகாரம் கிடைத்தாலே தெரியாத எதைப்பற்றியும் விமர்சனம் என்ற பெயரில் சொந்த விருப்பு வெறுப்புகளை கொட்டலாம் என்பது அவர்கள் எண்ணம். இதற்கு அவர்களைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் தான் இந்த சலுகையை கொடுத்ததோ என்னமோ. இதற்கு ஒரு உதாரணம் சாருவின் "நான் கடவுள்" இசை பற்றிய விமர்சனம்.

"//நண்பர் ஒருவர் குறிப்பிட்டபடி தான் ஒரு கணவான் எழுத்தாளர் என்பதை அவர் தொடர்ந்து பேணிவருகின்றார். இதுவரை எந்த ஒரு சமுதாய கோபங்களோ அல்லது, காட்டமான விமர்சனங்களோ அவர் எழுத்துக்க்ளில் இருந்தது கிடையாது."// தனக்கு "பரிச்சயமற்ற"(சமூக கோபங்கள்) இடங்களில் இருந்து விலகியிருப்பது தவறா?? மற்றபடி அவர் எழுத்துகள் ஈழப்பிரச்சனையை மையப்படுத்தி அதிகளவில் ஒலிக்காதமை எனக்கும் வருத்தமே.

//"அது இதென்று குறை சொல்வதுபோல கஷ்டப்பட்டு எழுதிய நாவலை குறை சொல்கின்றர்கள் என்று அங்கலாய்த்தார்."//
ஏன் யாருமே அங்கே ஜெமோ போல யாரும் அவருக்கு இதமாக "முதுகு சொறியவில்லையோ".... என்ன கொடுமை இது??

கதியால் said...

வணக்கம் அருண்மொழிவர்மன்,

நான் இந்தக் கதைகளை வாசிக்கவில்லை. ஆனால் வாசிக்க வேண்டும் என்று உந்தப்படுகிறேன் உங்களால்..! இந்தப்பதிவுகள் என் பார்வையில் விமர்சனமாக நான் பார்க்கவில்லை. இவைகளை அந்த எழுத்தாளர்களுக்கான அரங்கேற்றமாக, அவர்களுக்கான ஒரு அங்கீகாரமாக, நூல்களுக்கான ஒரு அறிமுகமாகவே பார்க்கிறேன். ஏனெனில் நாம் இந்திய சஞ்சிகைகள் எழுத்தாளர்களில் மூழ்கி இருப்பதால் எமது மண் எழுத்தாளர்களை மறந்துவிடுகிறோம். அவர்களையும் நூல்களையும் அறிமுகப்படுத்துவதற்கு நன்றிகளும் பாரட்டுக்களும். தொடரட்டும் பணி...!

Dr.M.K.Muruganandan said...

“திசேரா, மலர்ச்செல்வன், இராகவன், மைக்கேல், சித்தார்த்த சேகுவேரா, நிருபா” போன்ற நவீன ஈழத் தமிழ் எழுத்தாளர்களை சொல்லிக் காட்டியமைக்கு நன்றி. இங்கும் நல்ல எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை தமிழ் உலகம் அறியச் செய்தமை பாராட்டுக்குரியது

துர்க்கா-தீபன் said...

// அ.முவைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் முற்று முழுதாக நிராகரிக்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாக அதில் கண்ட குறைகள் பற்றிக் கூறுவதற்கான வெளியை அவர் முற்றாக மறுத்தார் என்றே சொல்ல வேண்டும் //

அங்கதமும், அரும்புதல் புன்னகையுமாய் ஐம்பது வருடங்களாக ஆயிரம் கதைகள் கண்ட ஒரு அற்புத கதை சொல்லி தன் புன்னைகையை தக்க வைக்கவே சிரமப்படுவது வருத்தமாக இருக்கிறது. ஆர்வலர்கள் வாழ்த்துக்காக சபையை அவைத் தலைவர் திறந்தபோது நேரமின்மையை காரணங்காட்டி ஒருங்கிணைப்பாளர் அதை முடித்து வைக்க தூண்டியதிலும் பிற்பாடு ஒருங்கிணைப்பாளரே தனது உரையில் எதுவும் பிரச்சினை வராது என்று உறுதி கூறித்தான் அ. முவை இங்கே அழைத்து வந்ததாக கூறியமையிலும் அவர் விமர்சன வெளியை கடக்க நாட்டமுள்ளவராகவே எனக்கும் தென்பட்டார்.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் ஜெகா
jega said...

its nice to see the current literature events in canada
நன்றிகள்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பாரதி
//ஏதாவதொரு" நியம அலகை வைத்து அளப்பது...இந்த காவடி தூக்கும் வேலைகளினை "பெரிய" எழுத்தாளர்களும் தொடர்ந்து செய்வது எரிச்சலையே தருகின்றன.//

உண்மைதான். இதனால் மாறுபட்ட எழுத்துக்கள் வராமல் படைப்புகள் ஒரே இடத்தில் தேங்கியும் விடுகின்றன. மேலும், ஒரே தன்மை குறித்த இலக்கியங்கள் தொடர்ந்து ப்டைக்கப்படுவதற்கும் இதுவே காடணமாகிவிடுகின்றது.



//எனக்குத் தெரிந்து சிலர் அல்ல..பல எழுத்தாளர்களை வாசிக்கும் போது அவர்கள் அப்படியே தான் நினைப்பதாக தோன்றுகிறது. நாலு பேர் அங்கீகாரம் கிடைத்தாலே தெரியாத எதைப்பற்றியும் விமர்சனம் என்ற பெயரில் சொந்த விருப்பு வெறுப்புகளை கொட்டலாம் என்பது அவர்கள் எண்ணம்.//
இது நடிகர்களிடம் எடுக்கப்படும் பேட்டிகளுக்கும் பொறுத்தம். உண்மையில் ஒவ்வொருத்தரிடமும் கேட்கப்படுவதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை விடுத்து தேவையில்லாதன் கேட்டுவீணாக்கி விடுகின்றோம்



//தனக்கு "பரிச்சயமற்ற"(சமூக கோபங்கள்) இடங்களில் இருந்து விலகியிருப்பது தவறா?? மற்றபடி அவர் எழுத்துகள் ஈழப்பிரச்சனையை மையப்படுத்தி அதிகளவில் ஒலிக்காதமை எனக்கும்//
இல்லை அது பற்றி எழுதிக்குவிக்கவேண்டும் என்பதல்ல, ஆனால் ஏதும் எழுதாமல் கடந்துசெல்லும்போதுதான் நெருடுகின்றது. கிட்ட தட்ட 95 ம் ஆண்டு நடந்தவை பற்றி ஒரு யாழ்ப்பாணவாசி எழ்தும்போது அந்த பாரிய இடப்பெயர்வு பற்றி எழுதாமல் இருந்தால் எப்படி இருக்கும்????

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் கதியால்
//ஏனெனில் நாம் இந்திய சஞ்சிகைகள் எழுத்தாளர்களில் மூழ்கி இருப்பதால் எமது மண் எழுத்தாளர்களை மறந்துவிடுகிறோம்.//

உண்மைதான். அதே நேரம் இந்திய எழுத்தாளார்களிடையே கூட நாம் வணிக எழுத்தளார்களைதான் அதிகம் கவனிக்கின்றோம் என்பது என் கவலை??

அருண்மொழிவர்மன் said...

துர்க்காதீபன்

//அங்கதமும், அரும்புதல் புன்னகையுமாய் ஐம்பது வருடங்களாக ஆயிரம் கதைகள் கண்ட ஒரு அற்புத கதை சொல்லி தன் புன்னைகையை தக்க வைக்கவே சிரமப்படுவது வருத்தமாக இருக்கிறது//

உண்மைதான்.
இன்றும் கூட கருத்துகளை ஏற்றுக்கொள்லாத கதைசொல்லிகள் இருக்கின்றார்கள் என்கிற கவலை எனக்கும் உண்டு.

cherankrish said...

நீங்கள் சொன்னதுபோல கருணாகரமூர்த்தி ஒரு மென்மையான மனிதர்.பெர்லின் இரவுகள் படித்தபின் யாரது என்று தேடிக்கிடைத்த நட்பு.கருணாகரமூர்தியின் கதைகள் தீவிரமாக ஈழப்பிரச்சனைபற்றித்தொட்டுப்போகாவிட்டாலும் மற்றவர்கள் தொடாத சில மென்மையான இடங்களைத்தடவிச்செல்கிறது.

நீங்கள் சொல்வதுபோல ஈழப்பிரச்சனை பற்றி எழுதாமல் இருப்பது என்பது அவரவருடைய விருப்பத்தை பொறுத்திருக்கிறது.ஈழ எழுத்தாளர்கள் எல்லோரும் ஏதேனும் ஒருவகையில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருக்கவேண்டும் அல்லது எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.கதை கவிதைகள் இப்படித்தூண்டி வருவதில்லையே.மாறாக இவ்வாறான தூண்டல்கள் மூலம் உருவாகும் படைப்புகள் அவற்றின் ஆழத்துடனும் செறிவுடனும் வருமெனவும் எதிர்பார்க்க முடியாது.ஷோபாஷக்தியின் "ம்" படித்தபோது ஏற்பட்ட இயல்பான உயிர்த்துடிப்புத்தன்மையும் பாத்திரங்களின் அழுக்கும் அவலமுமான வாழ்க்கையின் தாக்கங்களும் கருணாகரமூர்த்தியின் 'அகதிஉருவாகும் நேரம்" படிக்கும் போதும் எழுகிறது. கருவும் வேறு களங்களும் வேறு,ஆனால் கதைஉருவாக்காரணமாக இருந்தது என்னமோ ஈழத்துப்போர்ச்சூழல்தான்.சிலவற்றை சிலர்தான் செய்யவேண்டும்.

உங்களுடைய வலைப்பூவை இன்றுதான் கண்டேன் அருண்மொழி.தொடர்ந்து வாசிக்கிறேன்.தொடர்பில் இருப்போம்

அன்புடன்
சேரன்கிருஷ்

Post a Comment