Wednesday, February 4, 2009

ஈழப்பிரச்சனை – பாகம் 2


ஈழப்பிரச்சனை கொழுந்துவிட தொடங்கிய நாட்கள் முதலாக பலவிதமான விமர்சனங்கள் அதன் மீது எழுத போதும் அதை பற்றிய எதிர்வினைகளை நான் தவிர்த்தே வந்தேன். நேற்று சாருவின் வலைப்பக்கத்தில் அந்த கடிததத்தை பார்த்ததும் அதை பற்றிய எதிர்வினையாக நேற்றைய பதிவை எழுதினேன். இந்த கடிதம் மீது நான் வைக்கின்ற மிக முக்கியமான விமர்சனம் என்னவென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை கூறும்போது தமக்கான கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்று கவலைப்படுபவர் தனது கருத்து சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மீது காட்டினாரா என்பதே. இலங்கையை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் என்பது எப்போதோ காணாமல் போய்விட்டது. ஊடகங்கள் கூட எழுதி தரப்படும் செய்தியையே வெளியிட வேண்டிய கட்டாயம் வேறு. தராகி சிவராம், நிமலராஜன், லசந்த போன்றவர்கள் தமது கருத்தை தொடர்ச்சியாக பதிவுசெய்துவந்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். இதன் அடிப்படையில் அண்மையில் ஷோபாசக்திகூட “சீமானும் செல்வியும்” என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் இந்த எல்லா விமர்சனங்களையும் தாண்டி, அரசாங்கம் செய்யும் இனவழிப்பானது தமிழ் மக்களை விடுதலைப்புலிகளை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் மக்கள் எதையும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பார்க்காமல் அறிவு பூர்வமாக அலசி ஆராய்ந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனது பதிவில் இரயாகரன், ஷோபாசக்தி போன்றவர்கள் வெளியிடும் மாற்றுக்கருத்துகள் பற்றி எழுதியிருந்தேன். இன்று சில நண்பர்களுடன் கதைத்தபோது இவர்கள் கருத்தையெல்லாம் முற்றாக நிராகரிக்கவேண்டும் என்ற தொனி சற்று பலமாகபட்டது. இந்த நிலைப்பட்டில் இருக்கும் விளைவுகள் மிகுந்த அவலத்தை தரக்கூடியன. தற்கால படைப்புலகில் புலம்பெயர் இலக்கியம் என்று கதைக்க முற்படும்போது ஷோபாசக்தி என்ற பெயரை தாண்டி இலக்கியம் கதைப்பதே சிரமமானது. என்னை வாழ்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் எந்த கூட்டமும் நடைபெறுவதில்லை என்று அண்மையில் கருணாநிதி சொன்னதுபோலதான் ஷோபாசக்தியின் நிலையும். இரயாகரன் எழுதும் கட்டுரைகளில் கூட அவர் வைக்கும் வாதங்கள் மிகப் பலமானவை. அவர்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு எம்மிடம் விடைகள் இல்லை என்பதே உண்மை நிலை. இந்த நிலையில் அவர்களை புறம் தள்ளுவது எனபது கடந்த கால தவறுகளை மீண்டும் தொடரவே வழிசெய்யும் என்பதை உணரவேண்டும். அவர்கள் முன்வைக்கும் கேள்விகளை விமர்சனத்துக்குள்ளாக்கி அவற்றில் இருந்து ஒரு தெளிவை நோக்கிய பயணமாக செயற்படாமல், அவர்கள் மாற்று கருத்துகளை முன் வைக்கின்றார்கள் என்பதற்காக அவர்களை “துரோகி என்று தீர்ப்பெழுதுவது” ஒரு விதத்திலும் ஆக்க பூர்வமா அமையாது. அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது போர்ப் பிரகடனம் செய்து அமெரிக்க ஜனாதிபது ஜோர்ஜ் புஷ் உரையாற்றியபோது “either in our side or terrorists’ side” என்ற சொற்களை பாவித்தார். இன்றுவரை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட வரிகள் இவை. எமது பக்கம் சேராத எல்லாரும் சமூக விரோதிகள் என்ற கூற்றுபட அமைந்த வார்த்தைகள் அவை. இது போன்ற நிலைப்பாட்டை நாமும் முன்னெடுப்பதில் அவதானம் தேவை. இன்றளவும் விடுதலைப்புலிகளை நோக்கி தொடர்ச்சியாக செய்யப்படும் குற்றச்சாட்டுகள் சகோதர குழுப் படுகொலை, முஸ்லீம்களின் வலுக்கட்டாய வெளியேற்றம், அறிவு ஜீவிகள் மீதான அடக்குமுறை, கட்டாய போர் பயிற்சி போன்றவை. எனது கருத்தில் விடுதலைப் புலிகளை விட கேள்வி கேட்காமல் எல்லாவற்றுக்கும் தலையாட்டும் மக்களே இதற்கு முழுப்பொறுப்பாளிகள். இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் அரசியல் ரீதியாக பலம்பெற்று கடந்த கால தவறுகளை பெருமளவு விடுதலை புலிகள் திருத்தி வருகின்ற போதும் மக்கள் இன்னமும் அதே உணர்ச்சியால் உந்தப்பட்ட போக்கிலேயே வளர்ந்து வருகின்றனர். உதாரணமாக சிங்கள ராணுவம் தொடர்ச்சியான இனப் படுகொலைகளில் ஈடுபடுகின்ற இன்றைய நாட்களில் இதுவரை எந்த விதமான தாக்குதல்களோ கொழும்பில் / சிங்கள மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் இதுவரை நடைபெறவில்லை. இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் வல்லமை இன்றளவும் விடுதலைப் புலிகளுக்கு உண்டென்பதும், ஒரு கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் செயபடுகிறார்கள் என்பது ராஜபக்‌ஷே உட்பட பலரும் அறிந்த உண்மையே. சிங்கள அரசும் இதர தமிழ் குழுக்களும் பெரும்பான்மை தமிழரின் நம்பிக்கையை இழந்துவிட்ட பின்னர் இலங்கை பிரச்சனை தொடர்பாக மக்களுக்கு இன்றளவும் நம்பிக்கை இருக்கின்ற ஒரே ஒரு அமைப்பு விடுதலப்புலிகள்தான். இந்தநிலையில் மக்கள் தம்மை சுய பரிசோதனை செய்து தமது அணுகுமுறையில் சில மாறுதல்களை கொண்டுவரவேண்டியது அவசியம்.

கடந்த சில நாட்களாக கருணாநிதி மீது இணையத்தில் வசைபாடி எழுதபடும் பதிவுகள் பெருமளவு அரங்கேறிவருகின்றன. கலைஞரின் அரசியலை எந்த நிலையிலும் ஒரு முன்மாதிரி அரசியலாக முன்வைக்க முடியாது என்பது தி மு கவின் உண்மைத்தொண்டர்கள் உட்பட எல்லாருக்கும் தெரியும். ஆனால் இன்றைய சூழலில் கலைஞர் இல்லாவிடத்து அங்கு ஆட்சி அமைக்ககூடிய வல்லமை உள்ள ஒரே நபர் ஜெயலலிதா தான். இப்போது யோசித்து பாருங்கள், கலைஞரை ராஜினாமா செய்ய சொல்பவர்கள் அவர் ராஜினாமா செய்து ஜெயலலிதா ஆட்சி அமைத்தால் என்ன நிலை வரும். ஜெயலலிதாவின் பாசக்கார உடன்பிறப்பாய் இருக்கும் கலிங்க வீரர் வைகோ அப்போது 19 மாதம் சிறையறை வாசம் செய்தார். இந்த நிலையில் ஜெயலலிதா ஆட்சி என்றால் சீமானுக்கெல்லாம் ஆயுட்சிறைதான். கலைஞர் மத்திய அரசில் திமுக வின் பதவிகளை அல்லது இருக்கைகளை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரலாம் என்பது பலரும் முன்வைக்கின்ற கருத்து. ஆனால் அப்படி செய்தால் அவரால் மாநில அரசில் கூட பதவி வகிக்க முடியாது என்பதே உண்மை. இந்த நிலையில் கலைஞர் எமக்கு நேரடியாக உதவுகின்றாரோ இல்லையோ, அவர் பதவியில் இருப்பது இலங்கைத் தமிழருக்கு சாதகமானது என்றே பார்க்கவேண்டும். இதை மீறி கலைஞர் ஒழிக, கலைஞர் எப்போ சாவார் என்றெல்லாம் செய்யப்படும் கருத்துகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும். தமிழ் நாட்டில் எந்த மீட்பரும் தோன்றி எம்மை உய்விக்கும் சந்தர்ப்பம் இல்லாதபோது, கலைஞருக்கு சரியான மாற்று இல்லாதபோது எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கலைஞர்தான். நேற்றைய பதிவில் நான் சொன்னதுபோல “ஒரு சமூக அலகுக்கான மாற்றீடு உருவாகும்வரை அதை விமர்சிப்பவன் கூட அந்த அலகை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.”

இதேபோல கடந்த வாரம் என் கவனத்தை ஈர்த்த இன்னொருவிடயம் கனேடிய ஊடகம் சம்பந்தப்பட்டது. கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் CTV என்கிற தொலைக்காட்சி மக்களிடையே பிரபலாமனது. சென்ற வாரம் இத்தொலைக்காட்சி ஈழப்பிரச்சனை தொடர்பான வாக்கெடுப்பு ஒன்றில் கலந்துகொள்ளுமாறு மக்களை அழைத்திருந்தது. கைத்தொலைபேசியின் குறுஞ்செய்திகளாக இச்செய்தி தொடர்ச்சியாக அனுப்பப்பட்டது. இவ்வாக்கெடுப்பின் ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு தொலைபேசி இலக்கத்தை கொண்டிருக்கும். அத்தொலைபேசி இலக்கத்தை அணுகினால் அந்த தேர்வின் கீழ் வாக்கு பதியப்படும். 100,000 வாக்குகள் பதிவானால் சில நடவடிக்கைகளில் தாம் ஈடுபடுவோம் என்று தொலைக்காட்சி அறிவித்திருந்தது. போனவாரம் புதன்கிழமை தொடங்கிய இவ்வாக்கெடுப்பில் பல தமிழர்கள் சென்ற திங்கள் கிழமை வரை கலந்துகொண்டனர். இப்படியிருக்க திங்கள் பின்னேரம் தொலைக்காட்சி , வெள்ளிக்கிழமையே ஈழத்தமிழர்கள் பற்றிய வாக்கெடுப்பு முடிவடைந்துவிட்டதாகவும் ஆனாலும் தொடர்ந்தும் தமிழர்கள் தம் வாக்கெடுப்பில் ஈடுபடுவதாகவும், இது தமது அடுத்த வாக்கெடுப்பு (வேறேதோ பிரச்சனை) தொடர்பான முடிவுகளை பாதிக்கும் என்றும் அறிவித்திருந்தது. இப்போது இரண்டுவகையான குறுஞ்செய்திகளும் பரவ தொடங்க வாக்களிக்க வேண்டாம் என்று செய்தியனுப்பிய சிலர் துரோகிகளின் வலைப்பின்னலின் அங்கமாக இருக்ககூடுமோ என்று மற்றவர்களால் கருதப்பட்டனர். எந்த விடயததையும் உணர்ச்சிவசப்பட்டே பார்ப்பதை நிறுத்தும்வரை இது போன்ற விடயங்களை தவிர்க்கவே முடியாது.

(............இன்னும் சில அடுத்த பதிவில்)

11 comments:

தமிழன்-கறுப்பி... said...

நீங்கள் இவ்வளவு அரசியல் எழுதக்கூடிய ஆளா சொல்லவே இல்லை..:)

தமிழன்-கறுப்பி... said...

இரண்டையும் தொடர்ச்சியாக படிக்கையில் புரிதல் கட்டாயம் ஏற்படும் அருண்...
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் பரிசீலிக்கவும் முடியாதவர்கள் கருத்து சொல்ல முடியாதுதானே...

Anonymous said...

aiyya maniraththinam stilila soluungoo...

viduthalaippulikal nallavarkalaa kettavarkalaa

Anonymous said...

இன்றளவும் நம்பிக்கை இருக்கின்ற ஒரே ஒரு அமைப்பு விடுதலப்புலிகள்தான்.

உண்மையாகவா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

Thamilan said...

இன்றளவும் நம்பிக்கை இருக்கின்ற ஒரே ஒரு அமைப்பு விடுதலப்புலிகள்தான்.

HAA HAA HAA HAA HAA HAA HAA HAA HAA
HAA HAA HAA HAA HAA HAA HAA HAA HAA

அருண்மொழிவர்மன் said...

//விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் பரிசீலிக்கவும் முடியாதவர்கள் கருத்து சொல்ல முடியாதுதானே//

இதைத்தான் நானும் தொடர்ந்து சொல்லுகின்றேன். ஒரு மாற்றுக்கருத்தை கட்டாயம் பின்பற்றத்தான் ஏற்கத்தான் வேண்டும் என்பதில்லை, ஆனால் கட்டாயம் அதை ஏற்கத்தான் வேண்டும்.
அந்த கருத்து சொல்லும் உரிமையை பறிப்பது ஒரு போதும் கூடாது.

மாற்றுக்கருத்துகள் மறுக்கப்பட்ட சமுதாயங்கள் எப்படி மண்ணோடு மண்ணாகின என்பதற்கு நிறைய உதாரணங்கள் காணாலாம்.

அருண்மொழிவர்மன் said...

viduthalaippulikal nallavarkalaa kettavarkalaa
///

எந்த விடயத்தையும் சினிமா பார்ப்பது போன்ற மனநிலையுடன் அணுகும்வரை எந்த விளக்கமும் பலனளிக்காது

அருண்மொழிவர்மன் said...

//இன்றளவும் நம்பிக்கை இருக்கின்ற ஒரே ஒரு அமைப்பு விடுதலப்புலிகள்தான்.

HAA HAA HAA HAA HAA HAA HAA HAA HAA
HAA HAA HAA HAA HAA HAA HAA HAA HAA//

தமிழர்களின் தனிப்பெரும் குணங்களில் இந்த நக்கலும் ஒன்று....

வாழ்க

அருண்மொழிவர்மன் said...

//இன்றளவும் நம்பிக்கை இருக்கின்ற ஒரே ஒரு அமைப்பு விடுதலப்புலிகள்தான்.

உண்மையாகவா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்//


மாற்றாக என்ன உண்டு?????

தமிழ் விரும்பி said...

இன்றல்ல என்றும் இருக்கும் நம்பிக்கை அவர்கள்தான்....!

Anonymous said...

//இன்றல்ல என்றும் இருக்கும் நம்பிக்கை அவர்கள்தான்....!
//

இப்போதைய நிலை அதுவெனினும், அது என்றும் தொடர சில மாற்றங்கள் அவசியம் என் நினைக்கின்றேன்

Post a Comment