Monday, October 20, 2008

நான் பார்த்த சினிமா


எல்லாற்ற மாடும் உழுகிதென்றிட்டு சுப்பற்ற பேத்தை மாடும் உழுகைக்கு போச்சாம் என்று அடிக்கடி என் நண்பன் விசாகன் சொல்வது போல எல்லாரும் ஏதோ செய்யினம் போல இருக்கு என்றுதான் நானும் வலைப்பூக்களுக்க வந்தனான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமென்று எழுதினாலும் இதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது உண்மை. அதை கொஞ்சம் கூட்டுவதுபோல கானாபிரபா வேற எனக்கு சினிமா பற்றிய தொடர் பதிவுக்கு அழைப்பு தந்தார். அவருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

கால் நூறாண்டை கடந்துவிட்ட வாழ்க்கை பயணத்திலே, சற்று நிதானித்து திரும்பும்போது, வாழ்க்கை பூங்காவின் பூக்களின் வாசனையை மீண்டும் மீட்டிப் பார்க்கும்போதெல்லாம் நினைவுப் பெட்டகங்களை நிரப்பி நிற்பவை மிக சில உறவுகள், அற்புதமான புத்தகங்கள் போன்ற நண்பர்கள், நண்பர்கள் போன்ற புத்தகங்கள், ரசனையான திரைப்படங்கள், பாடல்கள், கிரிக்கெட் ஆட்டங்கள்தான். சினிமா மீதுதான் என் வாழ்வின் முதல் ரசனை தொடங்கியது ஆனாலும் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மானிப்பாய் மணியம்ஸ் மூலமாக முளைவிட்ட எனது சினிமா மோகம் யாழ்ப்பாணம் சுப்பர் ஷோ (ரவி ஒளி காணம்) மூலம் கிளைவிட்டு கொழும்பு ஹம்டன் லேன் காயத்ரியில் செழித்து இன்று கனடாவில் பல விழுதுகளுடன் பலமாக வளர்ந்து நிற்கிறது. இதுதான் எனக்கும் சினிமாவுக்குமான முன்னுரை.

என்ன வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?, நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா?, என்ன உணர்ந்தீர்கள்?

சினிமா பார்த்தால் கூடது, அது ஒரு தீய / தேவையில்லாத பழக்கம் என்கிற கட்டுப்பாடுகள் இல்லாதது என் வீடு. இதனால் இயல்பாகவே சிறு வயது முதல் படம் பார்த்து வந்திருக்கிறேன். முதன் முதல் பார்த்ததாக நினைவில் உள்ள படம் காளி. இது ரஜினி நடித்து 80ல் வெளியானபடம். ஆனால் நான் பார்த்து 84ன் தொடக்கங்கள் என்று நினைக்கிறேன். இப்படத்தில் அழும் இரண்டு குழந்தைகளை ரஜினி அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு காட்சியும், வேகமாக மோட்டார் சைக்கிளில் வரும் ஒரு காட்சியும் நினைவில் உள்ளன. எத்தனையோ பழைய படங்களை பின்னர் பார்த்திருக்கிறேன். ஏனோ இத்திரைப்பட பிரதிமட்டும் கிடைக்கவில்லை. இன்றுவரை ரஜினி ஒரு ஆதர்ச நாயகனாக இருப்பதற்கு இப்படத்தில் அவர் அழும் இரண்டு குழந்தைகளை அணைத்தபடி ஆறுதல் சொல்லும் அந்த காட்சிதான் காரணமாக கூட இருக்கலாம். அப்போது மானிப்பயில் இருந்து மணியம்ஸ் என்ற பெயரில் உள்ளூர் ஒளிபரப்பு ஒன்று இருந்தது. அதன்மூலமாகத்தான் இப்படங்களை திரையிடுவார்கள். பார்த்ததாக முழுமையாக நினைவில் இருக்கும் படம் சிம்லா ஸ்பெஷல் மற்றும் அபூர்வ சகோதரிகள். சிம்லா ஸ்பெஷலில் வரும் உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் அப்போது நிறைய பிடிக்கும். அந்த பாடலில் வரும் சில அசைவுகளை ஆடிப்பார்க்க முற்பட்டு எம் வீட்டு ஹாலில் பலதடவை விழுந்து அடிவாங்யிருக்கிறேன். அபூர்வ சகோதரிகள் ஊர்வசி, ராதா நடித்த படம் என்று ஞாபகம். அப்போதெல்லாம் வீடுகளில் அன்ரனா பூட்டினால் தான் படம் தெரியும். அதையும் அடிக்கடி திசைமாற்ற வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் படங்கள் ஏதோ ஆவிகளின் நடமாட்டம் போலத்தான் திரையில் தெரியும். எனது அம்மாவுக்கு சினிமாவில் நிறைய ஈடுபாடு. அப்போது அவர் ஒரு பச்சை நிற டயரியில்தான் பார்த்த படங்களை எல்லாம் தொடர்ந்து எழுதிவந்தார். அது அருமையான ஒரு பதிவு. அது போலத்தான் எனது அப்பாவும். வீட்டில் இரவு உணவுக்கு பிறகு ஒரு மணித்தியாலம் தன்னும் நாங்கள் எல்லாரும் இருந்து பல விடயங்களை பற்றி கதைப்போம். தமிழ்வாணன், ஆனந்தவிகடன், கமல், ரஜினி, எம். ஜி. ஆர், சிவாஜி என்று என்னவென்றாலும் கதைப்போம். ஏதோ ஒரு எம் ஜி ஆரின் திரைப்படத்தில் நடித்த இரண்டு நாயகியரும் தமது பெயர் தான் டைட்டிலில் முதல் வர வேண்டும் என்று சண்டையிட்டதாகவும் இதனால் வெறுப்புற்ற எம் ஜி ஆர் தனது பெயரை எல்லாரின் பெயரும் திரையிட்ட பின்னர் “இவர்களுடன் எம் ஜி ஆர்” என்று போட்டதாகவும் அப்பா சொல்வார். வெறும் புத்தகப் புழுவாக இராமல் பல தரப்பட்ட விடயங்களையும் அறிந்து கொள்ளும் எம் இயல்பு அந்த சாப்பாட்டு மேஜையில் வைத்தே தீர்மானிக்கப்பட்டதென்று நினைக்கிறேன்.
நல்ல ரசனைகள் எப்போதும் நல்ல நண்பர்க்ள் மூலமே வளர்த்து செல்லப்படும். அந்த வகையில் எனது ரசனைகள் தொடர்ச்சியான விவாதங்கள் மூலமே வளர்ந்து சென்றன. என் பெற்றோருடனும் சகோதரருடனும் தொடங்கிய இந்த வழக்கம் பின்னர் நண்பர்கள் தயா, தெய்வீகன், விசாகன், குணாளன் என்று இலங்கையிலும் பின்னர் புலம்பெயாந்து கல்லூரியில் ஒரு தோழி ஒருத்தியுடனும் (அவள் தந்த ஒரு பார்க்கவேண்டிய சினிமா பட்டியல் என் ரசனையையே மாற்றி அமைத்தது), கனடாவில் நண்பன் தீபனுடனான மணித்தியால கணக்கான விவாதங்களாலும் வளந்தது.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

காஞ்சிவரம்.
பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த நடிகர் என்பதில் கூட சிலவேளை சந்தேகம் தோன்றலாம். ஆனால் அவர் ஒரு அற்புதமான ரசிகர் என்பதில் எவருக்குமே சந்தேகம் தோன்றக்கூடாது. ஒரு அற்புதமான ரசிகனால் மட்டுமே இத்தகைய தேர்ந்த, அமைதியான ஓடை போன்ற ஒரு நடிப்பினை படம் வழியாக எடுத்துச்செல்லமுடியும். கனடாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தினை ஒரு பத்திரிகை விளம்பரம் மூலமே அறிந்துகொண்டு பிரகாஷ்ராஜ்க்காகவும் பிரியதர்ஷனுக்காகவும் பார்க்க சென்றேன். அதுவரை இப்படம் பற்றி ஏதும் கேள்விப்படாததால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி போய் நல்லதோர் பொழுதை அனுபவித்தேன்.

கடைசியாக அரங்கிலின்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பறவைகள் பலவிதம்.
மோசஃபெர் நிறுவனம் மீது எனக்கு பலவிதமான் விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக அது பல படங்களின் உரிமையை வாங்கி டிவிடி களை வெளியிடுகின்றது. ஆனால் தரம் ஒரு மாற்று கம்மிதான். உதாரணமாக மொழி, சென்னை 600028.
ஆனால் மொசஃபேர் மீது மரியாதை கொள்ள காரணம் டிவிடிக்கு வராத பிரபலமாகாத ஆனால் நல்ல பல திரைப்படங்களை டிவிடியாக வெளியீடுசெய்தது. அருமையான ஒரு உதாரணம் “பறவைகள் பலவிதம்”. உங்களில் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீர்களோ தெரியாது. ராம்கி-நிரோஷா, நாசர் – சபீதா ஆனந்த், ஜனகராஜ் – சிந்து என்று மூன்று சோடி கல்லூரி நண்பர்கள் தம் காதலைகூட வெளிப்படுத்தாமல் கல்லூரி நிறைவு நாளன்று பிரிகிறார்கள். சரியாக ஒரு வருடத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. இடையில் என்ன நடந்தது? அதன் பிறகு என்ன ஆனது என்று அற்புதமான கதை. ராம்கியின் நடிப்பு திறன் பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும் பல நல்ல படங்களில் நடித்துள்ளார். உதாரணம்: செந்தூரப்பூவே, என் கணவர், மருது பாண்டி, சின்னப் பூவே மெல்லப்பேசு, மிக குறுகிய காலத்தில் உச்சிக்கு போய் காணாமல் போன நடிகர். திரைப்பட கல்லூரியினர் திரியுலகில் வெற்றிக்கொடி கட்டியிருந்த காலத்தில் இவர் கொடியும் பறந்தது. பின்னர் மெல்ல காணாமல் போய், சில விஜயசாந்தி டைப்படங்களில் நடித்து பரிதாபமாக வில்லன்களிடம் அடிவாங்கினார். ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமத்ததுடன் எல்லாப் எழுதியும் உள்ளார். பாடல்கள் உணர்வுபூர்வமான வரிகளால் அமைக்கப்பட்டுள்ளன.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஒவ்வொரு கட்டங்களிலும் ஒவ்வொன்று. ஆனால் முதன் முதலாக ஒரு திரைப்படத்தை பார்த்து அழுதது என்றால் பிரபு, சரத்பாபு நடித்த மனசுக்குள் மத்தாப்பூ திரைப்படத்தை பார்த்து. கதாநாயகியின் தந்தை ஒரு வைத்தியர், பிரபுவை அவர் செயல் இழந்த (கோமா மாதிரி) நிலைக்கு கொண்டுவர சரத்பாபு பிரபுவை கருணை கொலை செய்வதாக படம் முடியும். கதாநாயகி வேறு மனநிலை பாதிக்கப்பட்டுவிடுவார். பூந்தென்றலே நீ பாடிவா, வெண்ணிலவை முதல் நாள்... போன்ற சிறந்த பாடல்கள் இடம்பெற்ற படம் .
பின்னர் பூவே உனக்காக மிக பெரிய ஒரு மாற்றத்தை தந்தது. காதல் என்றால் கலைது சென்று கண்ணடித்தல், சைக்கிளோடி சைட்டடித்தல் என்றிருந்த நிலையை மாற்றி அதனை ஒரு உணர்வாக புரிய வைத்த படம். பெண்களை மரியாதையாக பார்க்க வேண்டும் என்று பாலகுமாரனை படிக்க ஆரம்பித்து வேர்விட்ட கொள்கை பெருமரமாக வளர உரமிட்ட படம்.
அதற்கு பிறகு கோகுலத்தில் சீதை, பூவேலி, தொட்டாசிணுங்கி என்று ஆரம்பித்து அண்மைக்கால சுப்ரமணியபுரம் வரை எத்தனையோ. இதுதவிர வேலை இன்மை, கம்யூனிச சித்தாந்தம், சுயமரியாதை போன்ற பல விடயங்களும் சட்டையை பிடித்து உலுப்ப பார்த்து பார்த்து பரவசப்பட்ட படம் வறுமையின் நிறம் சிகப்பு. அதுபோல அன்பே சிவம் படத்தை அரங்கில் விசில், கைதட்டல் ஓசையில்லாமல் இருந்து பார்க்கவேண்டும் என்பதற்காக கனடாவில் பகல் 1:30 காட்சிக்கு நானும் நண்பன் தீபனும் போய் பார்த்துவிட்டி அதிகாலை 2, 3 மணி வரை பேசிக்கொண்டிருந்ததும் ஒரு சுகமான நினைவு.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் – சினிமா அரசியல் சம்பவம்?

பல. படைப்பாளிகளை சுதந்திரமாக செயல்படமுடியாமல் பழைய சித்தாந்தங்களில் மூழ்கிய சிலர் கட்டிப்போடுவது. குருதிப்புனல், மகளிர் மட்டும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, என்று கமல் எத்தனையோ அழகு தமிழ் பெயர்களை படங்களிற்கு சூடியிருக்க மும்பை எக்ஸ்ப்ரஸை பிரச்சனையாக்கியது. அடுத்ததாக கிசுகிசுக்கள். அண்மையில் உளவியலில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பன் ஒருவன் கதைத்தபோதுதான் இவையெல்லாம் மனநிலை சம்பந்தமான குறைபாடுகளின் விளைவுகள் என்ற புரிதல் ஏற்பட்டதும் அவர்கள் மேல் பெரும் பரிதாபமே உண்டானது. அதுபோலவே படம் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்கள் மீண்டும் பணத்தை கேட்பது. ஒரு சின்ன கேள்வி, எதிர்பாராமல் படம் பெருவெற்றி பெற்ற போதெல்லாம் இவர்கள் மேலதிக பணத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தார்களா?

தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?


நிறைய.... ஆனால் ஒரு போதும் கிசுகிசுக்கள் என்கிற முட்டாள்தனத்தை வாசிப்பதில்லை. அவை நிஜமாக பின்னால் மாறியும் உள்ளன. ஆனால் எனது தனிப்பட்ட வாழ்வை நான் தனித்து வைத்திருப்பதுபோல எல்லாருக்கும் ஒரு privacy இருக்கின்றது. நான் வங்கி ஒன்றில் பணிபுரிவதால் அதன் வாடிக்கையாளர்கள் என் தனிப்பட்ட வாழ்வை, காதலை, குடும்ப விடயங்களை அலசுவதை ஒருபோதும் விரும்பமாட்டேன். சற்று யோசித்து பார்த்தால் இது நடிகர்களின் புகழ் மற்றும் வெற்றி மீதான் பொறமைகாரணமாகவும், அந்த இயலாமை காரணமாகவுமே பிறக்கின்றது. அதாவது தனக்கு பல பெண்களுடன் நெருக்கம் வரவில்லை என்று ஏங்குபவனே அந்த நடிகன் இரண்டு நடிகையருடன் நெருக்கமாக் உள்ளான் என்று கூவுவான்.

சுஜாதா எழுதிய 360 , பாலகுமாரனின் பலகட்டுரைகள், அ. ராமசாமியின் ஒளிதரும் உலகம் உட்பட பல கட்டுரை தொகுப்புகள், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா மற்றும் ஷாஜி ஏழுதும் கட்டுரைகள், பலதரப்பட்ட திரைக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் இப்படியாக விரிந்துபட்ட வாசிப்பு பழக்கம் என்னுடையது. சுஜாதாவின் கட்டுரைகள் எனக்கு நிறைய அற்புதமான திரைப்படங்களை அறிமுகம் செய்துவைத்தன. அதுமட்டுமன்றி வலைப்பூக்களில் கானாபிரபா, முரளிகண்ணன், மு. கார்த்திகேயன் (இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லையே, ஏன்), போன்றவர்களின் பதிவுகளை அடிக்கடி பார்த்து உடனுக்குடனேயே வாசித்துவிடுவேன்.

தமிழ் சினிமா இசை?


என்னை விட்டு பிரிக்கவே முடியாத ஒன்றென்றால் அது இசை மீதான என் காதல் தான். என் இசையுலகம் இளையராஜாவை மையம் கொண்டே வளர்ந்திருந்தாலும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி காலம் முதல் இன்று வந்த இசையமைப்பாளார்கள் வரை பலரது இசையையும் ரசிப்பது உண்டு. ஆசையாசையாக சேர்த்து பாடல் வெளியான ஆண்டு, படம், பாடியவர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், பாடலாசிரியர் போன்ற எல்லா விபரங்களையும் தொகுத்து வைத்திருந்த பதினெட்டாயிரத்துக்கு அண்மித்த பாடல்கள் கணனியின் தொழிநுட்ப கோளாறு காரணமாக ஒரேநாளில் தொலைந்தபோது தாளவே இயலாது துயரம் தோன்றியது.
இளையராஜா, பரத்வாஜ், வித்யாசாகர், யுவன், ரஹ்மான் போன்றவர்கள் என்விருப்ப இசையமைப்பாளார்கள். அத்துடன் எஸ். பி. பாலா, ஜென்சி, சுசீலா, ஜானகி, அனுராதா ஸ்ரீராம், ஷாஹுல் ஹமீத், கார்த்திக், இளையராஜா, கமல்ஹாசன் போன்ற பாடகர்கள் பாடியவையும் வைரமுத்து, முத்துக்குமார், கண்ணதாசன் போன்றாவர்கள் எழுதிய பாடல்களும் எனது தெரிவுகள். இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்து என் முதுமையை கொண்டாட வேண்டும் என்பது என் ஆசை. இப்பொழுது யுவன் மற்றும் ரஹ்மான் இசையமைத்த எல்லாப்பாடல்கலையும் தொகுத்து வைத்துள்ளேன். இளையராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட பிரிவும் விரிசலும் நல்லபாடல்களின் வருகையில் பெரும் தேக்கநிலையை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமாக்களை பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உலக மொழி சினிமாக்களில் குறிப்பிடதக்களவில் பார்த்ததில்லை. அனிமேஷன் என்கிற கற்பனாவாதத்து கதைகளை என்னல் ரசிக்க முடிவதில்லை. என்னை பொறுத்தவரை ஒரு திரைப்படம் ஒரு மனிதனின் அல்லது சமூகத்தின் வாழ்வினை சொல்லவேண்டும். ஆனால் நிறைய மலையாளப்படங்கள் பார்த்திருக்கிறேன். வடக்கும் நாதன், தன்மாத்ரா, அச்சுவிண்டே அம்மா,தேன்மாவின் கொம்பத்து போன்ற பல மலையாளப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். முன்பொருமுறை கானாபிரபா மலையாளப்படங்களின் பட்டியல் ஒன்றை எனக்கு பிரத்தியேகமாக அனுப்பினார். அதுதான் என்னை மலையாளக்கரையோரம் கொண்டுசேர்தது. ஆங்கிலப்படங்களின் கவர்ந்தவை the great Gatsby, a beautiful mind என்று மிகச்சில.

தமிழ் சினிமா உலகத்துடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?


இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் சிலருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. திரைப்பட உலகில் தொடர்புகொண்டவர்களுல் எழுத்தாளர்கள் பாலகுமாரனுடன் மட்டுமே தொடர்புகள் உள்ளன. அற்புதமான மனிதர். மனம் சஞ்டலப்படும் பல நேரங்களில் கதைக்கும் போதெல்லாம் பேராதரவு தரும் பேச்சு அவருடையது.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிறைய யதார்த்தமான படங்கள் வருகின்றன, வெற்றி பெறுகின்றன. 80களுக்கு பிறகு இப்போதுதான் நிறைய படங்கள் நல்ல கதாம்சத்துடன் வந்து வெற்றிபெறுகின்றன. ஆனால் இசையின் தரம், அது பிண்ணனி இசையானாலும், பாடல்களானாலும் சற்று குறைந்துவிட்டன. எப்போதெல்லாம் என்னை நானே தாலாட்டவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்பொதெல்லம் இளையராஜாவின் இசையைத்தான் இப்போதும் கேட்கவேண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமீர், பாலா, சசிக்குமார், ராம், வெங்கட் பிரபு, முருகதாஸ், கௌதம் இப்படி நிறைய புதிய இயக்குணர்களின் வருகை நம்பிக்கை அளிக்கிறது. அதுபோல எல்லா துறையிலும் நிறைய போட்டியாளார்கள் இருப்பதால் மெத்தனம் இல்லாமல் அவரவர் பாணியில் கடும் உழைப்பைக்காணமுடிகின்றது. ஆனால் மக்களுக்கும் திரையரங்கில் சென்று சினிமா பார்க்கும் குணம் வரவேண்டும். ஒரு டொலருக்கு கள்ள (திருட்டு) வி டி யில் படம் ஒரு குடும்பமே திரைப்படம் பார்த்துவிட்டு படம் குப்பை என்று சொல்லும் போக்கு பொறுப்பில்லாத்தனத்தின் உச்சக்கட்டம்.

அடுத்த ஒரு ஆண்டில் தமிழ் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலக்காட்சிகள், இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் எதிலுமே கிடையாது என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எப்படியிருக்கும்?. தமிழர்களுக்கு என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?

புதிதாக வந்த படங்களைதான் பார்க்கவேண்டும் என்பதில்லையே? என்னைப் பொறுத்தவரை சற்று பழைய படங்களில் மீதுதான் எனக்கு நாட்டம் அதிகம், சரியாக சொன்னால் இந்த கதாநாயகர்கள் கையிலே கட்டையை தூக்கி கொண்டு பன்ச் டயலாக்குகளை சொல்லதொடங்க முதல் வந்த படங்கள். எத்தனை அருமையான படங்களை நாம் பார்க்காமலே கடந்து வந்திருக்கிறோம்?. இதுதான் சந்தர்ப்பம் என்று அவற்றை எல்லாம் தேடிபார்ப்பேன். அந்த ஓராண்டும் புதிதாக திரைப்பாடல்களும் வராது என்பதால், என்னிடமுள்ள பாடல்களை எல்லம் கணிணியேற்றி ஒழுங்கு செய்வேன்.
ஆனால் திரைப்படம் இல்லாவிட்டால் அது நிச்சயம் மக்களை மனவியல் ரீதியாக பாதிக்கும். தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கிருக்கின்ற மிகப்பெரும் கேளிக்கை சினிமாதான். (ஓரளவுக்கு ஒரே கேளிக்கை என்று கூட சொல்லலாம்). இதனால் அவர்களுக்கான வடிகால் (outlet) இல்லாமல்போக மிக மோசமான நிலையில் மக்களின் மனது பாதிக்கப்படும்.

13 comments:

முரளிகண்ணன் said...

படிக்க சுவராசியமான நடையில் நல்ல நினைவுகூறல்கள்

அருண்மொழிவர்மன் said...

முதல் முதலில் வந்து வைத்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள். மேலும், நீங்கள் சினிமா பற்றி எழுதும் பதிவுகளின் தீவிர ரசிகன் நான். ஆனால் சற்று விரிவாக எழுதலாம் என்பது எனது எண்ணம்

கானா பிரபா said...

அருண்மொழி வர்மன்

அழைப்பை ஏற்று சிறப்பான ஒரு பதிவை தந்தமைக்கு நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பிரபா,
சற்று தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். வலைப்பதிவ்களில் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கின்ற உங்களுக்குன் உங்கள் ஆதரவுக்கும் நன்றிகள்.

கிருஷ்ணா said...

உன் எண்ணங்கள் பதிவுகளாகியிருக்கின்றன. வாழ்த்துக்கள் நண்பா. ஆனால், ஆழமாக நீ பேசும் விடயங்களை மேலோட்டமாகப் பதிவுசெய்திருப்பதாகவே (நேரச்சிக்கல்?) எனக்குப் படுகிறது. நேரம் கிடைக்கும்போது விரிவான பதிவைத் தரவேண்டும். ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

அருண்மொழிவர்மன் said...

ஓரளவுக்கு உண்மைதான், இதில் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுமே மிக ஆழமாக பார்க்கப்படவேண்டியவை. அதுமட்டுமல்லாமல், விரிவான, ஆழமான எழுத்துகளுக்கு இளையம் உகந்த ஊடகம் இல்லை என்பது எனது கருத்து

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அருமையான பதிவு. உங்களைப் போல ஆறுதலாக நிதானமாக யோசித்து நான் எழுதவில்லையே என எண்ணத் தோன்றுகிறது. அருமையான குடும்பம் உங்களுக்கு வாய்த்துள்ளது. அதை மறக்காமல் பதிவு செய்தது முக்கியமாகப்படுகிறது.

அருண்மொழிவர்மன் said...

நன்றி முருகானந்தன்

என் குடுமபம் அதவது பெற்றோர் + சகோதரர்கள் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். முன்பு எனது பிறந்த தினங்களில் அப்பா என்னை கடைகளுகு கூட்டி சென்று வேண்டிய புத்தகங்களை எலலாம் எடுத்து தருவார்.

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்

விசாகன் said...

உனது ஞாபக சக்திக்கு நான் தலை வணங்கியே ஆக வேண்டும். உனது எழுத்து நடை அதை இன்னமும் மெருகேற்றி அரங்கேற்றுகிறது வலைப்பூவில். அருகில் இருந்து உன் ரசனைகளைப்பார்த்தவன் என்கிற பெருமை எனக்கு உண்டு. இதில் எத்தனை இனிமையான பதிவுகளை நேரம், இடம் காரணமாக தவிர்த்துவிட்டாய். மீண்டும் அவற்றை இங்கே பதிவு செய்ய வேண்டும். அருமையான பதிவு. உனக்கு பிடித்தவை எனக்கும் பிடித்தது நம் நெடுங்கால பயணத்திற்கு உதவியது.

அருண்மொழிவர்மன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி விசாகன். கிருஷ்னா கூட இதைதான் கூறியிருந்தார். ஆனால் தொடர் பதிவென்று வரும்போது அதற்கேற்ற அளவு தானே எழுதலாம்.. .... ஆனால் இத்ல் எழுதாமல் விட்ட விடயங்களாஇ தொகுத்து மீன்உம் ஒரு பதிவாக விரைவில் இட உள்ளேன்

Karthik said...

enda kindalum illama, unmaiyana, straight forward answers!!!! Super!!!!

அருண்மொழிவர்மன் said...

வீணாண பரபரப்புகளுக்காக பதிவுகாள் எழுதுவது தவறென்று நினைப்பவன் நான். வருகைக்கு நன்றிகள் கார்த்திக்

Saravana.R said...

Dear sir,
Today only i visit this blog realy super.
Am very big fan of Ilayaraja & Balakumaran

Thanks for yr all article.

Saravana.R
Bangalore
India

Post a Comment