Wednesday, September 17, 2008

கார்த்திக் என்றொரு மகா நடிகன்


90 களின் பிற்பகுதியில் தொடர்ச்சியான ஹிட்களை கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தியும், சக நடிகர்களை வயிறெரியவும் பண்ணி கொண்டிருந்தார் ஒரு ஹீரோ. அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து விஜய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டிருந்த, அஜித் ஒரு அங்கீகாரத்துக்காக போராடிக்கொண்டிருந்த, சூர்யா, விக்ரம் இருவரும் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த, பிரசாந்தின் காற்று ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை என்று சற்று பலமாக வீசிவிட்டு ஓய ஆரம்பித்திருந்த அந்த நாட்களில் மேற்சொன்ன ஹீரோக்களின் பதின்ம வயதுகளிலேயே பிரபல நாயகனாக இருந்த அந்த ஹீரோ அப்போதும் அவர்களுக்கு போட்டியாக, மாறாத இளமையுடனும் குறும்புடனும் இருந்தார். கேள்வி பதில் பகுதியில் பத்திரிகை வட்டாரத்தில் பிரபலமான அரசு கேள்வி பகுதிகளில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பூவே உனக்காக, காதல் கோட்டை, லவ்டுடே என்று விஜய் அஜித் புறப்பட்டிருந்த காலம். விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, அரவிந்த்ஸ்வாமி இந்த இளம் நாயகர்களில் உங்களை கவர்ந்தவர் யார் என்பது கேள்வி. அதுக்குஅரசு சொன்ன பதில் “இவர்களெல்லாம் இருக்கட்டும், அந்த துடிப்பென்ன, குறும்பென்ன, உற்சாகமென்ன…ம்ம்ம் முன் முடியில் உதிர்ந்த அந்த முடிகள் மட்டும் இல்லாவிட்டால் முத்துராமனின் குமாரனை பிடிக்க இன்னும் சில ஆண்டுகளுக்கே யாருமில்லை” என்பது. ஆம் அந்த நாயகன் நவரச நாயகன் கார்த்திக். கமல், சிவாஜி, விக்ரம், சூர்யா என்று சிறந்த நடிகர்களை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லும் கருத்து ஒப்பனையாலோ, வேடங்களை மாற்றியோ, மிகை நடிப்பாலோ காட்டப்படுவது மட்டுமே நடிப்பல்ல. இவையேதுமில்லாமல் யதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற இரண்டு மகா நடிகர்கள் ரகுவரனும் கார்த்திக்குமே என்பது.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அவருக்கு இருக்கவேண்டிய தகுதி அவர் யாராவது ஒரு சினிமா பிரபலத்தின் வாரிசாக இருக்கவேண்டும் என்பது தான். அப்படி வாரிசு நடிகர்களாக உருவானவர்களுல் தம் பெற்றோரின் புகழை காத்தவர்கள் என்றால் கார்த்திக், விஜய், சூர்யா என்று மிக சிலரை மட்டுமே கூறலாம். சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, மயங்குகிறாள் ஒரு மாது, குரு போன்ற பிரபல படங்கஈள் நடித்த காலஞ்சென்ற நடிகர் முத்துராமனின் மகன் தான் கார்த்திக். பதினாறு வயதினிலே என்று அறிமுகமான பாரதிராஜா பின்னர் மணிவண்ணனின் கதையினை வைத்து நிழல்கள் என்ற படத்தை எடுத்தார். இப்படத்தில் தான் வைரமுத்து முதன் முறையாக திரைப்பாடல் எழுதியிருந்தார். அற்புதமான கதையினை கொண்ட இப்படம் தோல்வியைதழுவ மணிவண்ணன் ஒரு மாபெரும் வெற்றிப்படத்துக்கான கதையை உங்களுக்கு தருவேன் என்று சபதமிட்டு அமைத்த கதைதான் அலைகள் ஓய்வதில்லை. 1981ல் வெளியான இப்படத்தின் அறிமுக நாயகனாக அறிமுகமானவர் முரளி என்ற இயற்பெயர் கொண்ட கார்த்திக். அப்பொழுது அவரது வயது 21. ஜாதி மத வேறுபாடுகளை கடந்து காதலிக்கும் நாயகனும் நாயகியும் இறுதிக்காட்சியில் ஊரைவிட்டே ஓடுவதாக கதை.
வைரமுத்துவின் வரிகளும் இளையராஜாவின் இசையும் அற்புதமாக கைகொடுக்க மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இதை தொடர்ந்து கேள்வியும் நானே, பதிலும் நானே, சீறும் சிங்கங்கள், இளஞ்சோடிகள் முதலிய படங்களில் நடித்தாலும் அவை எதுவுமே பெரிய வெற்றியை தரவில்லை. ஆனால் 82ல் வெளியான இயக்குனர் ஸ்றீதரின் நினைவெல்லாம் நித்தியா, ஆயிரம் நிலவே வா போன்ற படங்கள் அவற்றின் பாடல்களுக்காக பெரும் புகழ்பெற்றவை. நினைவெல்லாம் நித்தியாவில் வரும் பனிவிழும் மலர்வனம், ரோஜாவை தாலாட்டும் போன்ற பாடல்களும் ஆகாய கங்கையில் வரும் தேவதை இளம் தேவி போன்ற பாடல்களும் இன்றளவும் காதலர்களின் வேதங்களாக இருப்பதோடு கார்த்திக் மீதான ஒரு ரொமாண்டிக் ஹீரோ என்கிற விம்பத்தையும் ஏற்படுத்தின. பின்னர் 85ல் குறிப்பிடவேண்டிய படமாக நல்லவனுக்கு நல்லவன் படத்தை குறிப்பிடவேண்டும். இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகனாக வரும் கார்த்திக்கிற்கு ரஜினியின் மகளை கொடுமைப்படுத்தும் சற்றே வில்லத்தனமான ஒரு வேடம். கிட்டதட்ட ஒரு துணை நடிகர் / குணசித்திர வேடம் மட்டும் ஏற்ற இப்படமும் 86ல் வெளியான மௌனராகம் திரைப்படமும் இவரது திரையுலக வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தின. மணிரத்ணம் இயக்க, மோகன் – ரேவதி நடித்த மௌனராகம் திரைப்படத்தில் கிட்டதட்ட ஒரு 20 நிமிடம் மட்டுமே கார்த்திக் வருவார். ஆனால் படம் பார்த்து முடித்ததும் எல்லார் மனதிலும் அவர்தான் நிறைந்திருப்பார். அப்படியான ஒரு நிறைவான நடிப்பை இப்படம் மூலமாக வழங்கியிருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தில் ஒரு கௌரவ நடிகர் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவது தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக மிக கடினமானது.
அதன் பிறகு அக்னி நட்சத்திரம், உரிமைகீதம், வருஷம் 16 என்று 90களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் கார்த்திக். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவரது திரைவாழ்வு சற்று வித்தியாசமானது. பொதுவாக அவரது எல்லாப் படங்களுமே பார்க்க கூடியதாக இருந்தாலும் திடீர் திடீரென்று மாபெரும் ஹிட்களை அவர் தருவார். கிட்டதட்ட ஒவ்வொரு இரண்டாண்டுகளிலும் அவரது ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை பார்க்கமுடியும். அது மட்டுமின்றி இமேஜ் பாராமல் பல படங்களில் இரண்டு நாயகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் நல்லவனுக்கு நல்லவன், ராகவேந்திரா போன்ற படங்களிலும், பிரபுவுடன் இரும்பு பூக்கள், உரிமை கீதம், அக்கினி நட்சத்திரம், தை பொறந்தாச்சு, குஸ்தி போன்ற படங்களிலும், அர்ஜீனுடன் நன்றி படத்திலும், அஜித் உடன் ஆனந்த பூங்காற்றே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்படங்களிலும் விஜய காந்துடன் ஊமை விழிகள், தேவன் படங்களிலும் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ராஜெஷ்வர் (அமரன், இதயத்தாமரை), ஆர். வி. உதயகுமார் (முத்துக்காளை, பொண்ணுமணி, உலகைவிலை பே
சவா), கே. சுபாஷ், சுந்தர். சி (உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி,) என்று சில இயக்குனர்களின் ஆஸ்தான நடிகராகவும் திகழ்ந்தார்.

தற்போதைய நடிகர்களை போல இல்லாமல் கார்த்திக்கின் சிறப்பம்சம் எந்த வேடமானாலும் அதில் வெளுத்துவாங்குவது தான். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியும் (கோகுலத்தில் சீதை) வருவார், வாய் நிறைய வெற்றிலையோடும் (பொண்ணுமணி) வருவார், நாகரீக இளைஞராகவும் வருவார்(கோகுலத்தில் சீதை, உள்ளத்தை அள்ளித்தா, தொட்டா சிணுங்கி) பேட்டை ரவுடியாகவும் வருவார் (அமரன்). 80 களின் இறுதியில் அவர் இளம் தாடியுடன் நடித்தால் படம் வெற்றி என்ற செண்டிமெண்ட் பரவியபோது சினம் கொண்ட இளைஞனாக இவர் நடித்த இதய தாமரை, உரிமை கீதம், காளிச்சரண், அக்னி நட்சத்திரம், காதல் கீதம், போன்ற படங்கள் இன்றளவும் சிறப்பாகவே உள்ளன. அது போல சின்ன தம்பி, சின்ன கவுண்டர், என்று கிராமிய படங்கள் ஆதிக்கம் செலுத்திய 90களின் தொடக்கத்தில் அவர் நடித்த கிழக்கு வாசல், பொண்ணுமணி, முத்துக்காளை, சின்ன ஜமீன் (மனவளர்ச்சி குன்றிய வேடம்), படங்களில் கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் கார்த்திக். இத்தனைக்கும் அவர் கான்வெண்டில் ஆங்கில மொழியில் படித்து வளர்ந்தவர். பின்னர் நகைச்சுவை படங்களும் மென்மையான உணர்வுகளி கொண்ட படங்களும் (நட்பு, காதல், பாசம்) வெற்றி பெற்ற 90 களின் பிற்பகுதியில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, மேட்டுக்குடி, கண்ணன் வருவான், அழகான நாட்கள் போன்ற நகைச்சுவை படங்களும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, தொட்டா சிணுங்கி, கோகுலத்தில் சீதை, நிலவே முகம் காட்டு போன்ற மென்மையான படங்களும் பெரு வெற்றி பெற்றன. அதுவும் கோகுலத்தில் சீதை, தொட்டா சிணுங்கி, பூவேலி போன்ற நடிப்பினை இப்போதைக்கு மற்றவர்களால் நினனத்துப் பார்க்க கூட முடியாது.

சில பாடல்களை பாடியும் இருக்கிறார். அவற்றில் அமரனில் பாடிய வெத்தல போட்ட சோக்கில மிக பிரபலமானது. தவிர பிஸ்தா, சிஷ்யா படங்களிலும் பாடியிருக்கின்றார். இது தவிர இவரது இன்னொரு குறிப்பிட தக்க குணாதிசயம் நட்பை பேணும் விதம். பல நடிகர்களால் சிறந்த நண்பர் என்று போற்றப்படுபவர் இவர். அது மட்டுமன்றி சுஹாசினி, குஷ்பூ, ரேவதி என்ற நடிகையராலும் சிறந்த நண்பரென கூறப்படுபவர் இவர். தனது வீட்டு வரவேற்பறையில் இருக்கும் ஒரே ஒரு சினிமாக்காரரின் புகைப்படம் கார்த்திக்கின் புகைப்படம் தானென்று ஒரு முறை குஷ்பூ கூறியிருந்தார்.

பெரும்பாலான கலைஞர்
களுக்கு இருப்பது போலவே இவருக்கும் சில பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம். 89ல் சோலைக்குயில் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ராகிணியை திருமணம் செய்த கார்த்திக் பின்னர் ராகிணியின் சகோதரி ரதியையும் திருமணம் செய்தார்( இதை 99ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் அவராகவே கூறினார்). அதே வேளைகளில் படப்பிடிப்புக்கு தாமதமாக போகும், சிலசமயம் போகாமல் விடும் இவரது பழக்கம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேசமயம் வினியோகஸ்தர்களும் இவரது படங்களை வாங்க தயக்கம் காட்ட இவரது சினிமா வாழ்க்கை பெரும் முடக்கத்தை சந்தித்தது. பின்னர் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது கொடுத்த ஆதரவினால் இவர் ஓரளவு மீண்டு வந்தாலும் அது கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரமாகவே அமைந்தது. ஏற்கனவே வாங்குவாரில்லமல் இவரது படங்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் புதிதாக படம் தயாரிக்க யாரும் தயாராகவில்லை.

இதன் பின்னர் தன் சமூகம் (தேவர்) சார்ந்து சரணாலயம் என்ற சேவை அமைப்பினை தொடங்கிய கார்த்திக் பின்னர் அரசியலில் சேர்ந்து (F)பார்வார்ட் ப்ளாக் என்ற கட்சியின் தமிழ்நாட்டு தலைவராகவும் இருந்தார். பின்னர் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அவரது அரசியல் ரீதியான பார்வைகளை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் கார்த்திக் என்ற மகா நடிகனுக்கான இடம் இன்னுமே காலியாக இருக்கையில் ஒரு ரசிகனாக கார்த்திக்கின் அரசியல்
பிரவேசம் எனக்கு அர்த்தமற்றதாகவேபடுகிறது.

சில வாரங்களின் முன்னர் பத்திரிகைகளில் ஊர்ஜிதப்படுத்தாத ஒரு செய்தி வந்தது. அதாவது மணிரத்ணத்தின் அடுத்த படத்தில் கார்த்திக் ஒரு வில்லனாக நடிக்கிறாராம். அது நிஜமாகவே ஆகட்டும். எப்படி மௌனராகம் ஒரு வாழ்வு தந்ததோ, அப்படியே மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகட்டும். வில்லன் என்பதெல்லாம் ஒரு விடயமே அல்ல. 99% கதாநாயகர்களைவிட ரகுவரனையும், பிரகாஷ்ராஜையும் ரசிக்கும் என்போன்ற ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

32 comments:

முரளிகண்ணன் said...

அருமையான நடிகனைப்பற்றிய சிறப்பான பதிவு

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள். உண்மையில் இவரைப்பற்றி எழுதாமல் விட்ட வ்டயங்கள் தான் அதிகம்.. அத்தனை அற்புதமான நடிகர். இதன் இரண்டாம் பாகமாக எழுத இருக்கின்றேன்.

babu said...

i like karthick very much .he was a nature actor and a normal man.see in his crying scenes in movie is more powerful.

sudha said...

he is a happy man in every film.
u see in her all movie he acting is happines.so lovely man

Robin said...

கார்த்திக் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அரசியலுக்கு லாயக்கில்லை.

அனுஜன்யா said...

முரளி கண்ணன் எழுதுவார் என்று இருந்தேன். கார்த்திக்கை பிடிக்காத அந்தக்காலத்துப் பெண்களும் உண்டோ! மௌன ராகம் (35 நிமிடங்கள் என்று நினைக்கிறேன்) ஒரு மகுடம். அதுவும், அக்னிநட்சத்திரம் வந்த புதிதில் நிறைய இளைஞர்களும் கார்த்திக் ஸ்டைல் பின்பற்றினர். நல்ல நடிகர். அழகானவர். நீங்கள் சொல்லியதுபோல் நடிகைகளின் நல்ல நண்பர். ஆயினும், அறிவுரை சொல்ல ஆளில்லாததால், ஒரு also ran ரக நடிகராகிவிட்டார். என்ன காரணத்தினாலோ, அவரது வசன உச்சரிப்பும் குழற ஆரம்பித்தது. அழகு, திறமை, சிறிய வயதிலேயே வெற்றி இவை அத்தனையும் இருந்தும் அவர் எட்டியிருக்கக்கூடிய உயரங்களை அவராகவேத் தவற விட்டது பெரிய முரண்.

//ஆகாய கங்கையில் வரும் தேவதை இளம் தேவி போன்ற பாடல்களும்//

தேவதை இளம் தேவி, ஆயிரம் நிலவே வா படம்.

ஆகாய கங்கையில் 'தேனருவியில் நனைந்திடும்' என்ற பாடல் பிரபலம்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.


அனுஜன்யா

Anonymous said...

மிக நன்றாக வந்திருக்கிறது இந்த பதிவு.

தொடர்ந்து நவரச நாயகனை பின் தொடர்ந்து வருகிறீர்கள்.

நானும் அக்னி நட்சத்திரம் படம் எனது சிறு வயதில் பார்த்தது முதல் அவரின் ரசிகராக இருக்கிறேன்.

ஒரு விஷயம், கார்த்திக் என்ற VERSATILE பாதிப்பை இப்போதைய நடிகர்களில், குறிப்பாக விஜய், அஜித் மற்றும் சூர்யா (ஒரு பேட்டியில் இவர் வெளிப்படையாக கார்த்திகின் நடிப்பை புகந்துள்ளார். இவரிடம் கார்த்திக் & கமலின் பாதிப்பை அதிகளவில் நான் பார்க்கிறேன்) விக்ரமிடம் கார்த்திகின் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.

அவ்வளவு ஏன் ஜெயம் ரவியிடம் அப்படியே நான் கார்த்திகின் பாதிப்பையே காண்கிறேன். ஒரு தலைமுறை நடிகர்களையே இவர் பாதித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் இவரது படங்களை முதல் காட்சியில் பார்த்த ஞாபகம் உள்ளது (அமரன் - மதுரை சினிப்ரியாவில் முதல் காட்சியில் இடம் கொள்ளாக் கூட்டத்தோடு, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. பூவரசன் படத்தை நெல்லையில் அடிதடியோடு பார்த்தது நினைவில் உள்ளது.) எல்லா நடிகர்களின் ரசிகர்களில் கூட இவரை ரசிப்பவர்கள் இன்றளவில் உள்ளது ஆச்சர்யமான உண்மை.

இன்றும் இவர் தென் மாவட்டங்களுக்கு(மதுரை, ராஜாபாளையம்,நெல்லை) வரும் போது கூடும் கூட்டங்களுக்கு இணை வேறு யாருக்கும் கிடையாது. தென் மாவட்டங்களில் இன்றும் இவரது ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவரது மன்றங்கள் இன்னும் இயங்கி வருகிறது.

எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் கார்த்திகின் படங்களை விரட்டி பார்த்து ரசித்த ஞாபகங்களை உங்கள் பதிவு நினைவூட்டியது.

"உலக நாயகன்" கமலுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்திருக்க வேண்டிய "நவரச நாயகன்" கார்த்திக் திசை மாறி அரசியல் என்று சென்றது, மிக துன்பியல் நிகழ்வு.

ஒரு "சமூகத்திற்கு" ள்ளாக தன்னை சுருக்கிக் கொண்டது மிகவும் வருந் தத்தக்க நிகழ்வு.

"மணி" சார் ஒரு பிரேக் கொடுப்பாரா? ஆனால் கார்த்திகே தனது மகன் கெளதமை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஒரு செய்தி படித்தேன்.

கார்த்திகின் அரசியல் வாழ்வு சிறக்கவில்லை. யாரோ கூறும் ஆலோசனைப்படி இதில் இறங்கி அவர் தோற்றுவிட்டார்.

இனியாவது, திரை உலகில் மிகச்சவாலான வேடங்களை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே அவரின் ரசிகன் என்ற முறையில் எனது வேண்டுகோள்.

உங்களது அடுத்த 2வது பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.

உங்களுக்கு நன்றி.

அன்புடன்,

லட்சுமி நரசிம்மன்,

மதுரையிலிருந்து..

LOSHAN said...

நல்ல நடிகனைப் பற்றிய நல்லதொரு பதிவு.. அருமையாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தாவுக்குப் பிறகு தன்னுடைய வசன உச்சரிப்பைக் கெடுத்துக் கொண்டபடியாலும், ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடித்தபடியாலும் தான் வீழ்ந்து போனார்.

வில்லனாக நடித்தால் கலக்குவார் என்று எதிர் பார்க்கலாம். ரகுவரனின் இழப்பை இவர் ஈடுகட்டுவார பார்க்கலாம்

LOSHAN said...

நல்ல நடிகனைப் பற்றிய நல்லதொரு பதிவு.. அருமையாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தாவுக்குப் பிறகு தன்னுடைய வசன உச்சரிப்பைக் கெடுத்துக் கொண்டபடியாலும், ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடித்தபடியாலும் தான் வீழ்ந்து போனார்.

வில்லனாக நடித்தால் கலக்குவார் என்று எதிர் பார்க்கலாம். ரகுவரனின் இழப்பை இவர் ஈடுகட்டுவார பார்க்கலாம்

விசாகன் said...

அருமையான பதிவு. திரைப்பட்டங்களில் சில கதாபாத்திரங்களை இவர்களால் மட்டுமே செய்ய முடியும் என்று இருக்கிறது. நிச்சயமாக கார்த்திக் நடித்த படங்களில் அவருக்காகவே என உருவாக்கப்பட்டது போலவே பாத்திரங்கள் இருக்கும். அல்லது இந்தப்பாத்திரம் கார்த்திக் இற்கு மட்டுமே பொருந்தும் என இயக்குனர்கள் எண்ணுகிறார்களோ தெரியாது. அவ்ரின் மறுபிரவேசம் எப்படி இருக்கும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் பிரவேசம் தேவையற்ற ஒன்றே எனது பார்வையில்.

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கு. இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

ம்ம்ம் கார்த்திக்கின் மின்னலை மீண்டும் எதிர்ப்பார்பவர்களுல் நானும் ஒருவன்.......

அலட்டல் இல்லாத நடிப்பு தான் இவரது சிறப்பு.

இராஜா-BGL

தாமிரா said...

கார்த்திக்கை குறித்த மிகச்சிறப்பான பதிவு. கோகுலத்தில் சீதை படத்தில் அவருடைய வசனங்களும், ஸ்டைலும்... அந்த ரிச்னெஸை தர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

Kamal said...

ஹ்ம்ம் அட்டகாசமான நடிகர்...
அந்த சந்திரமௌலி வசனத்தை யாரால் மறக்க முடியும்...
அவரின் வரவை எதிர்பார்க்கும் மற்றுமோர் இரசிகன் :)))

Kamal said...

சொல்ல மறந்துவிட்டேன்...
அடாகாசமாக தொகுத்து எழுதியிருகிறீர்கள்

Kamal said...

ஒரு சின்ன சுய விளம்பரம்...
அப்படியே என்னோட வலையையும் பாத்துட்டு கருத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
http://kamalkanth.blogspot.com

Anonymous said...

//தம் பெற்றோரின் புகழை காத்தவர்கள் என்றால் கார்த்திக், விஜய், சூர்யா என்று மிக சிலரை மட்டுமே கூறலாம். //
என்ன எழவு இது ?
இங்க விஜய் எங்கே வந்தார் ?
விஜய் தந்தை சந்திரசேகரின் புகழைக் காத்து வருகிறார் என்று கூறுகிறீர்களா ?

அப்படியானால், சிவகுமார், முத்துராமனுடன் இணைவைப்பது எவ்வளவு முரணானது (அபத்தமானது) என்று யோசித்தீர்களா ?

காதல் படங்களை மட்டும் வைத்து விஜயுடன் சேர்த்துவிட்டு அலசிவிட்டீர்களே ! ?? கார்த்திக் நல்ல நடிகர். இது விஜய்க்கு பொருந்தாது என்பது எனது கருத்து.

Anonymous said...

தொட்டாச்சிணுங்கி என்று ஒரு படம் வந்தது. கார்த்திக், ரகுவரன் இருவரும் மிக நன்றாக நடித்திருப்பார்கள். அர்த்தமுள்ள படம் கூட.
வருஷம் பதினாறு கார்த்திக்கை விரும்பாதவர் யார் இருக்க முடியும்?
கார்த்திக், ரேவதி இணைந்து நடித்த படங்கள் பொதுவாக நன்றாக அமைந்து இருக்கும்.
மீண்டும் அந்த இயல்பான நடிப்பைப் பார்க்க முடியுமானால் நல்லது தான்.

அருண்மொழிவர்மன் said...

பாபு, சுதா, ரொபின், அனுஜன்யா நன்றிகள். கார்த்திக் ஒரு கால கட்ட இளைஞர்களின் ரோல் மாடலாக திரையில் தோற்றம் தந்தார். அவரது குறும்புத்தனம் பெண்களை பெரிதும் கவர்ந்தது. அதே போல கையை சுற்றுவது ... இப்படியெல்லம் ஏதும் செய்யாமல் இயல்பான ஒரு ஸ்டைலை தனக்காக உருவாக்கிக்கொண்டார் கார்த்திக்.

ரொபின் //ஆனால் அவர் அரசியலுக்கு லாயக்கில்லை.
// இது தான் எனது கருத்தும்

அருண்மொழிவர்மன் said...

லட்சுமி நரசிம்மன்.... உங்களது பதிலே ஒரு பதிவு போல இருந்தது. ஒரு தலைமுறையையே பாதித்த நடிகன் கார்த்திக் என்று புரிகிறது.

//உலக நாயகன்" கமலுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்திருக்க வேண்டிய "நவரச நாயகன்" கார்த்திக் திசை மாறி அரசியல் என்று சென்றது, மிக துன்பியல் நிகழ்வு//
உண்மைதான். சில வேளைகளில் கமலையே தாண்டிய நடிகன் கார்திக் என்பது என் கருத்து

அருண்மொழிவர்மன் said...

லோஷன், விசாகன், தாமிரா, ராப்
வருகைக்கு நன்றிகள்.

//உள்ளத்தை அள்ளித்தாவுக்குப் பிறகு தன்னுடைய வசன உச்சரிப்பைக் கெடுத்துக் கொண்டபடியாலும், ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடித்தபடியாலும் தான் வீழ்ந்து போனார்.
//
உண்மைதான். ஆனால் அதற்கு பிறகு தான் அவர் சிகரம் தொட்ட கோகுலத்தில் சீதை, பூவேலி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படங்களும் வெளியாகின

ராப் .... இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும்

அருண்மொழிவர்மன் said...

யூ டியூப் தந்த அனாமியே

நன்றிகள்.
என் வழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு காலத்தில் சந்திரனே சூரியனே பாடலை ஒரு ஆறுதலாக கேட்டபடி பல நாட்களை கடந்து வந்துள்ளேன்

அருண்மொழிவர்மன் said...

கமல்... அந்த சந்திர மௌலி வசனம் ஒரு தலைமுறை இளைஞர்களுக்கே காதலின் ஒரு படி நிலையாக இருந்தது .....

அருண்மொழிவர்மன் said...

//இங்க விஜய் எங்கே வந்தார் ?
விஜய் தந்தை சந்திரசேகரின் புகழைக் காத்து வருகிறார் என்று கூறுகிறீர்களா ?

அப்படியானால், சிவகுமார், முத்துராமனுடன் இணைவைப்பது எவ்வளவு முரணானது (அபத்தமானது) என்று யோசித்தீர்களா ?

காதல் படங்களை மட்டும் வைத்து விஜயுடன் சேர்த்துவிட்டு அலசிவிட்டீர்களே ! ?? கார்த்திக் நல்ல நடிகர். இது விஜய்க்கு பொருந்தாது என்பது எனது கருத்து.
//

ஒரு போதும் கார்த்திக்கின் நடிப்புடன் நான் விஜயை ஒப்பிட மாட்டேன். நான் சொல்ல வந்தது, தமது பெற்றோர் பெற்ற புகழை காத்தவர்கள். சின்ன உதாரணம் என்றால், நாகேஷின் புகழை ஆனந்த் பாபுவால் காப்பாற்ற முடியவில்லை. பிரஷாந்த் .....????

அருண்மொழிவர்மன் said...

//தொட்டாச்சிணுங்கி என்று ஒரு படம் வந்தது. கார்த்திக், ரகுவரன் இருவரும் மிக நன்றாக நடித்திருப்பார்கள். அர்த்தமுள்ள படம் கூட.
வருஷம் பதினாறு கார்த்திக்கை விரும்பாதவர் யார் இருக்க முடியும்?
கார்த்திக், ரேவதி இணைந்து நடித்த படங்கள் பொதுவாக நன்றாக அமைந்து இருக்கும்.
மீண்டும் அந்த இயல்பான நடிப்பைப் பார்க்க முடியுமானால் நல்லது தான்//

தொட்டாசிணுங்கி பற்றி தனியாக ஒரு பதிவு போட்டுள்ளேன்

Anonymous said...

//தொட்டாசிணுங்கி பற்றி தனியாக ஒரு பதிவு போட்டுள்ளேன்//

உங்கள் பதிவையும் நண்பனின் பல பதிவுகளும் பார்த்தேன். மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றது.

தாமிரா said...

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்னோட எவர் கிரீன் ஸாங்.. 'வா வா அன்பே அன்பே'..

B.T said...

நன்றிகள். மிக நன்றாக வந்திருக்கிறது இந்த பதிவு.

"நவரச நாயகன்" கார்த்திக் அற்புதமான நடிகர், அருமையான நடிகனைப்பற்றிய சிறப்பான பதிவு

நானும் அக்னி நட்சத்திரம் படம் எனது சிறு வயதில் பார்த்தது முதல் அவரின் ரசிகராக இருக்கிறேன்.எல்லா நடிகர்களின் ரசிகர்களில் கூட இவரை ரசிப்பவர்கள் இன்றளவில் உள்ளது ஆச்சர்யமான உண்மை.


T.Sivakumar
Bangalore

Anonymous said...

// ஒரு போதும் கார்த்திக்கின் நடிப்புடன் நான் விஜயை ஒப்பிட மாட்டேன். நான் சொல்ல வந்தது, தமது பெற்றோர் பெற்ற புகழை காத்தவர்கள். சின்ன உதாரணம் என்றால், நாகேஷின் புகழை ஆனந்த் பாபுவால் காப்பாற்ற முடியவில்லை. பிரஷாந்த் .....???? //

கட்டுரை முழுவதும் வாசித்தபிறகு எனக்கு அப்படித்தோன்றவில்லை. இருப்பினும் "புகழ் காத்தல்" என்பது இங்கு பொருந்தாது. கார்த்திக் என்பவரின் வளர்ச்சியில் முத்துராமன் என்னும் நடிகரின் பங்கு எவ்வளவு தூரம் இருந்த்து என்பது தெரியவில்லை ! இருந்திருந்தால் விவாதிக்கப்பட்டிருக்கும். சூர்யா, விஜய் போன்றோர் அப்பாவினால் பின்னிருந்து தள்ளப்பட்டவர்கள். கார்த்திக் அட்டு இயக்குநர்களின் படங்களில் நடித்து மிகப்பெரிய உதவியில்லாமல் இவ்விடத்தைப் பிடித்ததாகவே நான் நினைக்கிறேன். எனவே தான், அதை நான் மறுத்தேன்.

selwilki said...

உங்கள் கருத்துக்கள் அற்புதம்...எனக்கும் கார்த்திக் மிகவும் பிடித்த நடிகர்...அவரது இயற்கையான நடிப்பே என்னை மிகவும் கவர்ந்தது...ஆனால் நீங்கள் அவரை விஜய் மற்றும் சூர்யா போன்றோரோடு வாரிசு நடிகராக ஒப்பிட்டுள்ளீர்கள்...அவர் முத்துராமனின் வாரிசான போதும் மற்றவர்களுக்கு இருந்தது போல் கார்த்திக்குக்கு முத்துராமனின் உதவியோ, ஆலோசனைகளோ கிடைக்க வழியில்லாமல் அலைகள் ஓய்வதில்லை படம் வெளியான சில நாட்களிலேயே இறந்துவிட்டார். எனவே, தானே முட்டி மோதி ஒரு சிறந்த நடிகர் என்ற நிலைக்கு, அதுவும் அடுத்த தலைமுறை நடிகர்களின் நடிப்பில் அவரது நடிப்பின் சாயல் வெகுவாக தெரியும் வகையில் அவர் மிகச்சிறந்த நடிகராக உருவாகியிருக்கிறார்...
விக்ரம் கார்த்திக்கின் தலைமுறை நடிகர் தான்...அவரை அடுத்த தலைமுறை நடிகராக நீங்கள் கூறியது தவறு...விக்ரமுக்கு திரை உலகில் ஒரு break கிடைத்தது மிகவும் தாமதமாகத்தான் என்றாலும் அவர் கார்த்திக், பிரபு காலக்கட்டத்திலேயே திரை உலகிற்கு வந்து விட்டார்....
எனினும், கார்த்திக்கின் அபார நடிப்பு திறமை, மற்றும் style குறித்து நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் சரியே....

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் selwiki, வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

//ஆனால் நீங்கள் அவரை விஜய் மற்றும் சூர்யா போன்றோரோடு வாரிசு நடிகராக ஒப்பிட்டுள்ளீர்கள்//

அப்படியாக நான் ஒப்பிடவில்லை. நான் கூறாவந்த விடயம் என்னவென்றால் இப்படியாக குறிப்பிடப்பட்ட வாரிசு நடிகர்களில் இவர்கள் மூவருமே தமது பெற்றோரை தாண்டிய புகழை பெற்றார்கள் என்பதேயாகும்.

//விக்ரம் கார்த்திக்கின் தலைமுறை நடிகர் தான்...அவரை அடுத்த தலைமுறை நடிகராக நீங்கள் கூறியது தவறு...விக்ரமுக்கு திரை உலகில் ஒரு break கிடைத்தது மிகவும் தாமதமாகத்தான் என்றாலும் அவர் கார்த்திக், பிரபு காலக்கட்டத்திலேயே திரை உலகிற்கு வந்து விட்டார்....//
நான் சொன்னது என்ன என்றால் இந்த ஹீரோக்களின் பதின்ம வயதிலேயே வெற்றி பெற்ற ஹீரோவாக இருந்த கார்த்திக் அவர்கள் புகழ பெறும்போதும் அவர்களுக்கு போட்டியாக இருந்தார் என்பதே. கார்த்தில்லின் முதல் படம் 81லும் பிரபுவின் முதல் திரப்படம் (சங்கிலி) கிட்டதட்ட அதே ஆண்டும் வெளியாக விரமின் முதல் திரைப்படம் (தந்துவிட்டேன் என்னை) 1988-89ல் வெளியானது.

நாடோடி இலக்கியன் said...

நவரச நாயகனை பற்றி ஒரு பதிவு எழுத எண்ணி ,அவரை பற்றி வேறுயாரேனும் எழுதியிருக்கிறார்களா என தேடியபோது உங்களின் இப்பதிவை காண நேர்ந்தது.
அருமையாக வந்திருக்கிறது இந்த பதிவு.
அவருடைய இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.அவரின் மறுவருகையை ஆவலோடு எதிர்நோக்கும் எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.
வருஷம் 16,மௌன ராகம்,அக்னி நட்சத்திரம்,இதய தாமரை,கோபுர வாசலிலே,கோகுலத்தில் சீதை, பூவேலி, இது நம்ம பூமி,கிழக்கு வாசல்,பாண்டி நாட்டு தங்கம்,வண்ணக் கனவுகள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இந்த படங்களின் வி.சி.டி கலக்ஷன்ஸ் என்னிடம் உண்டு.


அருமையான பதிவுக்கு வாழ்துக்கள் , நன்றி.

Post a Comment